39

அடைகின்றனர். இது, இத்தமிழ் நாட்டின் தனிப்பெருங் கொள்கையாகும்.

     கவந்தன், சவரி இருவரும் சகோதரர்களைச் சுக்கிரீவனிடம் போகுமாறு
பரிந்துரை செய்ததில் ஒரு நுணுக்கம் இருப்பதை அறிய வேண்டும்.
பிறன்மனை நயந்தவனாகிய இலங்கை வேந்தனைத் தண்டிக்கப் போகின்ற
இராகவன் அதே குற்றத்தைச் செய்த வாலியைச் சந்திக்கவோ, நட்புக்
கொள்ளவோ கூடாது. கிட்கிந்தைச் சமுதாயத்தை முன்பின் அறியாத
இச்சகோதரர் வாலியைச் சந்திக்க நேர்ந்தால் அவன் அந்தரங்க
வாழ்க்கையின் ரகசியம் தெரியாமல் அவனிடம் நட்புச் செய்யலாம். வாலியின்
வாலுக்குக் கட்டுப்பட்டவன் இராவணன். இவற்றையெல்லாம் உள்ளடக்கித்தான்
சுக்கிரீவனிடம் செல்லுமாறு கவந்தனும் சவரியும் பரிந்துரை செய்கின்றனர்.

     ஆரணிய காண்டத்தின் பதின்மூன்று படலங்களில் முதற்படலமாகிய
விராதன் வதையும் பன்னிரண்டாவது படலமாகிய கவந்தன் வதைப் படலமும்
குற்றத்தைச் செய்து தண்டனை அனுபவித்தவர்க்கு விடுதலை நல்கியதைக்
காட்டும். ஒரு பிறப்பிலிருந்து மற்றோர் உயர்ந்த பிறப்பிற்கு இராகவன்
இவர்களை அனுப்பியதைக் காட்டும். இரண்டாவது, பதின்மூன்றாவது
படலங்கள் ஞானம், பக்தி ஆகியவைகளில் முதிர்ந்து நிற்பவர்களுக்கு
இறையருள் தேடி வந்து வீடு நல்கும் என்று அறிவுறுத்தும் பகுதிகளாகும்.

     காப்பிய வளர்ச்சிக்கு மிக முக்கியமான இரண்டாவது திருப்பு
மையத்தைத் தன்னிடையே கொண்டு விளங்குவது ஆரணிய காண்டாமாகும்.
உலகத்தில் காட்டுப் பகுதியாயினும், நாட்டுப் பகுதியாயினும் நல்லவர்,
அல்லவர் இருவருமே வாழ்கின்றனர். இந்த இரு கூட்டத்தாரிடையேயும் ஒரு
சமநிலை இருந்து வருகிறது. ஏதாவது ஒன்று தன் சமநிலையிலும் மீறி வளரத்
தொடங்கினால் இறையருள் அதைத் தடுத்து நிறுத்திச் சமநிலைக்குக் கொண்டு
வருவதை ஆரணிய காண்டத்தில் காண்கிறோம். சரபங்கன், அகத்தியன், சவரி
போன்ற நல்லோர்களும், கரன் தூடணன் சூர்ப்பணகை போன்ற தீயவர்களும்
இக்காட்டிடை வாழ்கின்றனர். கரன் முதலியோர் தாங்கள் செய்கின்ற தவற்றை
உணராமலேயே மேலும் மேலும் பாபம் செய்கின்றனர். விராதன், கவந்தன்
முதலியோர் தாம் செய்த பிழைக்குத் தண்டனை பெற்றுத் தண்டனையின்
பின்னே நல்லோர் ஆகின்றனர். மாரீசன் போன்றோர் நல்லது எது என்பதை
நன்கு அறிந்திருந்தும் தீமையைத் தடுத்து