வாய்மையுடையவன் தசரதன் என்றால் அந்த வாய்மையைக் காப்பதற்கு அவனே முயன்றிருக்க வேண்டும்.அவ்வாறு முயல வில்லை என்றால், அவனுடைய மனைவியாகிய கைகேயி அதனை எவ்வாற்றானும் நினைவூட்டி நிறைவேற்ற வேண்டும் என்ற முறையில் அவள் பேசினாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இனி, மந்திரப் படலத்தின் தொடக்கத்தைப் பார்ப்போமே யானால் தசரதனுடைய பாத்திரப்படைப்பை அறிந்து கொள்ள முடிகின்றது. நான்கு பிள்ளைகளைப் பெற்றான் தசரதன். என்றாலும் இராமனைத்தவிர, ஏனைய மூன்று பிள்ளைகளை அவன்நினைவில் கொண்டிருப்பதாகவே தெரியவில்லை. பால காண்டத்திலேயே இந்தக் குறிப்பை வைத்துக் காட்டுகிறான் கம்பன். பிள்ளைகளைக் கேட்க வந்த விஸ்வாமித்திரன். "நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி" (324) என்றுதான் கூறினானே தவிர, ‘இராமன்’ என்று பெயரிட்டுச் சொல்லவில்லை. ‘கரிய செம்மல்’என்றால் பரதனும் கரிய செம்மல்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அப்படியிருக்க ‘கரிய செம்மல்’என்று விஸ்வாமித்திரன் கூறியவுடன், இராமனைத்தான் தசரதன் நினைத்தானே தவிர, பரதனைப் பற்றி நினைத்ததாகவே தெரியவில்லை. இந்த எண்ணம் அவனுடைய மனத்தில் வேரூன்றி நாளாவட்டத்தில் பெரியமரமாக வளர்ந்துவிட்டது என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. "மைந்தனை அலாது உயிர் வேறு இலாத மன்னன்" (1514) என்று அயோத்தியா காண்டத்தில் கம்பன் இதனை நினைவூட்டுவான். நான்கு பிள்ளைகளையுடையதசரதன், ஒரு பிள்ளையிடத்தில் மட்டும் அன்பு செலுத்தி, ஏனைய மூன்று பேரைத் தன் பிள்ளைகளாகவே கருதவில்லை என்றால் இந்த மாபெரும் குற்றத்திற்கு அவன் தண்டனை அநுபவித்தே தீரவேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. இனி, அயோத்தியா காண்டத்தின் தொடக்கத்தில் ஒரு பெரிய காரியம் நடைபெறுகின்றது. மந்திரக் கிழவர் அனைவரையும் கூட்டி ‘இராமனுக்கு முடிசூட்ட வேண்டும்’ என்ற தன்னுடைய எண்ணத்தை தசரதன் வெளிப்படுத்துகின்றான். இதற்கு முன்னரே ஒரு காரியத்தைச் செய்துவிடுகிறான் அவன். அதாவது, பரதனை அவனுடைய பாட்டன் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இந்தச் செயல்தான் கொஞ்சம்விந்தையாக இருக்கின்றது. இத்தனை |