பக்கம் எண் :

பக்கம் எண் :227

::TVU::
17. உலகவறவி புக்க காதை

21--26.   மாசு இல் வால் ஒளி வடதிசைச் சேடி - வடதிசையில் மாசற்ற வெள்ளிய வொளியினையுடைய விஞ்சையருலகில், காசு இல் காஞ்சனபுரக் கடிநகர் உள்ளேன் - குற்றமற்ற காஞ்சனபுர மென்னுங் காவல் பொருந்திய நகரத்தில்உள்ள யான், விஞ்சையன் தன்னொடு என் வெவ்வினை உருப்ப-எனது கொடுவினையானது தோற்ற என் கணவனோடு, தென்றிசைப் பொதியில் காணிய வந்தேன்-தென்றிசையிலுள்ள பொதியின் மலையின் வளங்காணும் பொருட்டு வந்தேன், கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த - விரைந்த செலவினையுடைய அருவியினது வேகமுள்ள நீர் தெள்ளிய, இடுமணல் கானியாற்று இயைந்தொருங்கு இருந்தேன்- இடுமணலையுடைய கான்யாற்றில் என் கணவனுடன் கூடி ஒருங்கிருந்தேன் ;

சேடி - வித்தியாதர ருலகு ; அது வெள்ளி மலையிலுள்ளதாகலின் வாலொளியையுடையதாயிற்று ; 1 ''''வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடி'''' என்பது காண்க. உருப்ப - அழலவென்றுமாம். காணிய : செய்யிய வென்னும் வினையெச்சம். வந்தேன் : எச்சமுற்றுமாம். இடு மணல் - எக்கர்.

27--32.புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் - அப்பொழுது முறுக்கிய பூணூலணிந்த மார்பும் திரித்து முறுக்கிய நீண்ட சடையும் மரவுரி யாடையுமுடைய விருச்சிகன் என்னும் முனிவன், பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி அனையதோர் இருங்கனி நாவற்பழம் ஒன்று ஏந்தி - பெரிய குலையையுடைய பனையினது கரிய கனியை யொத்ததாகிய பெருமை பொருந்திய கனிந்த நாவற்பழம் ஒன்றைக் கையிலேந்தி வந்து, தேக்கிலை வைத்துச் சேண் நாறு பரப்பில் பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன் - அதனை ஒரு தேக்கின் இலையில் வைத்துவிட்டு நெடுந்தூரம் நாறுமியல்புடைய பூக்கள் கமழும் பரப்பினையுடைய பொய்கையில் நீராடச் சென்றானாக ;

பனங்கனி பருமன் பற்றி உவமையாயது. ஓர் : அசை. நாறு பூ எனவும், பரப்பிற் பொய்கை யெனவும் இயையும்.
விருச்சிக னென்போன் நாவற்பழமொன்றை ஏந்தி வைத்துப் பொய்கையாடச் சென்றானாக என்க.

33--34.   தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் - தீவினையானது பயன் கொடுப்பத் தோற்றுதலின் யான் ஆண்டுத் தருக்கொடு சென்று, காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் - காலினாலே அந்த நாவற்பழத்தைச் சிதைத்தேன் ;

35--42.   உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் - உண்ணும் வேட்கையுடன் நீராடிப் போந்த விருச்சிக முனிவன், கண்டனன்

1 சிலப். 6 : 1.