பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 26
26


முயற்சியேயில்லையென்பதும், கொள்கைகளாதலின் தேவப்பிறப்பு மக்கட் பிறப்பினுஞ் சிறந்ததன் றென்பதும், தேவரும் மக்களாயடங்குவர் என்பதும் பெறப்படும். ஆனால், நரகரோவெனின் முற்பிறப்பில் மிகுதியும் தீமை செய்து அதனால் தண்டனையடையும் கீழ்மக்களாதலின், அவரையும் உயர்திணையாகக் கூறியது தமிழிலக்கணத்திற்கே முற்றும் மாறானதாகும்.

இனி, ''மக்கள் தேவர்'', என்னும் நன்னூல் நூற்பாவில், ''நரகர்'' என்பதை நாகர் என்று மாற்றிக்கொண்டு, "மக்கள், தேவர், நாகர்" என்பவர் முறையே தமிழரும், ஆரியரும், நாகருமாவர் எனக்கூறிய தான்தோன்றித் தமிழ்ப் பகைவருமுளர்.

(5) அறுவகைப்பொருள்

தமிழிலக்கணத்தில், பெயரியலில், மற்றொருவகையில் பொருள்களெல்லாம் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என அறுவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பொருளென்றது இடம்பெயரக்கூடிய உட்புலப் பொருளை. சினை உறுப்பு.

இனி, நூற்பொருள்களை, அகம் புறம் என்றிரண்டாகவும் முதல், கரு, உரி என மூன்றாகவும் வகுப்பது பொருளிலக்கண மரபும், அறம் பொருள் இன்பம் வீடென நான்காக வகுப்பது நீதிநூன் மரபும், பொருள் குணம் கருமம் பொது சிறப்பு ஒற்றுமை இன்மை என ஏழாக வகுப்பது தருக்க நூன்மரபுமாகும்.

இவற்றுள், அகம் என்பது காதல்; புறம் என்பது அஃதல்லாத பிற பொருள்கள்; முதல் என்பது காலமும் இடமும்; கரு என்பது ஓரிடத்தில் தோன்றும் பொருள்களும் காதலல்லாத வினைகளும்; உரி என்பது காதல் அல்லது காதற்பகுதி. பிறவற்றை வந்தவழிக் கண்டுகொள்க; இங்கு கூறின் விரியும்.

2. ஓரினப்படுத்தல்

ஓரினப்படுத்தலாவது வெவ்வேறினத்தைச் சேர்ந்த பல பொருள்களை ஓர் ஒப்புமைபற்றி ஒரினமாகக் கூறல்.

யானைக்கும் பன்றிக்கும் களிறு கேழல் என்பன பொதுப் பெயர்கள். இவ்விரு விலங்கும் ஓரினம் என்பது அவற்றின் வடிவாலும் நிறத்தாலும் விளங்கும். களிறு என்பது யானையால் பன்றிக்கும் கேழல் என்பது பன்றியால் யானைக்கும் ஏற்பட்ட பெயர். களிப்பது களிறு. களித்தல் மதங்கொள்ளுதல். மதங்கொள்வது ஆண்யானை. யானையோடொப்புமைபற்றிப் பன்றியின் ஆணும் களிறெனப்பட்டது. கிளைப்பது, கீழ்வது கேழல், கிளைத்தல் நிலத்தை முண்டிப்போடுதல். பன்றியோ டொப்புமைபற்றி யானையும் கேழல் எனப்பட்டது.

யானைக்கும் ஒரு வகை வண்டிற்கும் தும்பி எனப்பெயர். தும்பையுடையது தும்பி. தும்பு என்பது தூம்பு. தூம்பாவது உட்டுளையுள்ளது அல்லது குழாய். குழாய்போன்ற ஒரு முன்னூட்டி (proboscis)