பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 29
29

வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி யவர்கட்டாக லான

என்று தொல்காப்பியம் பிரிநிலை யேகாரங் கொடுத்து வரையறுத்துக் கூறுதல் காண்க.

இங்ஙனமிருப்பவும், தமிழ்ப் பகைவரான ஆரியரும் அவர் வழிப்பட்ட மேலையரும் கோடன்மாரும் தமிழியல்பறியாத் தமிழ்ப் பேராசிரியரும், கல்லா மக்களும், கீழ் மக்கள் வழங்கும் இழிவழக்கையும் (Slang), கொச்சை வழக்கையும் (Barbarism) உலகவழக்கொடு (Colleqqualism) சேர்த்தொன்றாகக் கொண்டு, தமிழ் மரபொடும் இலக்கண நூலாரொடும் முரண்படுவர்.

மனைவியைப் பெண்சாதி என்பதும், பீர்க்கங்காயை பீக்கங்கா என்பதும் இவைபோன்ற பிறவும் இழிவழக்காம். வந்தது என்பதை வந்துச்சு என்றும், வைத்திருக்கிறான் என்பதை வச்சிருக்கான் என்றும் வழங்குவது கொச்சை வழக்காம். இத்தகைய வழுக்களின்றி இலக்கண நடையிற் பேசுவதே உயர்ந்தோர் வழக்கான உலக வழக்காம்.

ஆயின், சில தென்சொற்கள் கற்றார்க்கேயன்றி மற்றோர்க்குப் பொருள் விளங்காதனவாகவும், அவற்றிற்கு நேரான வடசொற்களும் பிற சொற்களும் எளிதிற் பொருளுணர்த்துவனவாகவும் இருத்தலாலும், கருத்தறிவிக்குங் கருவியே மொழியாதலாலும், தூயநடை தமிழுக்கேற்காதெனின், சில தென் சொற்களை வழங்காமையாலேயே அவை அருஞ்சொற்களாக மாறின வென்றும், ஒருகாலத்தில் எளிய சொற்களாகவே அவை வழங்கிவந்தன என்றும், அவற்றின் வழக்கைப் புதுப்பிப்பின் மீண்டும் அவை எளிய சொற்களாக மாறிவிடுமென்றும், தமிழின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அதன் சொல்வளம் இன்றியமையாததென்றும், வடசொற்கள் தேவமொழிச் சொல்லென்னும் ஏமாற்றினாலேயே தேவையின்றி வடவரால் புகுத்தப்பட்டன என்றும், அவற்றைத் தாராளமாக வழங்கினதினாலேயே தமிழர் தாய்மொழி உணர்ச்சி இழந்து பிற மொழிச் சொற்களையும் வழங்கத் தலைப்பட்டன ரென்றும், அறிவாராய்ச்சியும் உரிமை யுணர்ச்சியும் தன்மானப் பண்பும் மிக்க இக் காலத்தில் தமிழைத் தூய்மையாக வழங்குதலே தக்கதென்றும், அதுவே தமிழன் முன்னேறும் வழியென்றும், பிறமொழிச் சொற்கள் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவை அல்ல என்றும், தமிழின் தூய்மையைக் குலைப்பவரெல்லாம் வாள்போற் பகைவரும், கேள்போற் பகைவருமே யென்றும் கூறி விடுக்க.

இனி வடமொழித் துணையின்றித் தமிழைத் தனித்து வழங்க இயலா தென்றும், இருசார் பகைவரும் கூறிக் கலாய்ப்பர். உலகிலுள்ள மூவாயிரம் மொழிகளுள், தமிழ் ஒன்றே பிறமொழித் துணையின்றித் தனித்து வழங்க வல்லதென்றும் தேவமொழியென்றும் ஆரிய மூலமொழி யென்றும் தமிழை வளம்படுத்திய மொழியென்றும் தம்பட்டமடித்துக்கொள்ளும் வடமொழியில்