பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 66
66

மதி = மதிப்பு, அளவிடப்பட்ட பண்டம் (ஏற்றுமதி, இறக்குமதி), அளந்தறியும் பகுத்தறிவு. அறிவுப்புலன். மதி - மதம் = கொள்கை, சமயம், நூற்கொள்கை.

மதி என்னும் சொல் முன்னிலை படர்க்கை யசைநிலையாய் வருங்கால், அளவு என்னுங் கருத்தில் ''அது போதும்'' என்றேனும், அறிவு என்னும் கருத்தில் ''அது அறிவாகும்'' என்றேனும் பொருள்படும். பழஞ்சேர நாடாகிய கேரளத்தில், மதி என்பது ''போதும்'' என்னும் பொருளில் இன்று வழங்குகின்றது.

மதம் (சமயம்) என்பது வடமொழியில் mata என வழங்கும். அளவீடு என்னும் கருத்தொழித்து, இதுகாறுங் கூறிய எல்லாப் பொருள்களிலும், மதி என்பதனொடு தொடர்புடைய மத, மதம், மதன், மதர் முதலிய சொற்கள் தமிழில் வழங்கி வருகின்றன. முழுகிப் போன குமரிக்கண்டத்தொடு பல உலக வழக்குச் சொற்களும், இறந்துபட்ட பண்டையிலக்கியத்தொடு பல செய்யுள் வழக்குச் சொற்களும், மறைந்து போனமையால், பல சொற்கோவைகளின் இடையிலிருந்த அண்டுகளை இன்று காட்டமுடியவில்லை. ஆயினும், தமிழ் குமரி நாட்டில் தோன்றி வடக்கே சென்று முன்னர்த் திரவிடமாகவும் பின்னர் ஆரியமாகவும் மாறிற்றென்றும், வடமொழி ஆயிரக்கணக்கான தென் சொற்களைக் கடன் கொண்டுள்ளதென்றும், அறிய வல்லார்க்கு நான் கூறிய யாவும் தெற்றென விளங்குதல் தேற்றம்.

''மகன்'' என்னும் சொல் வருமொழியாகவும் ஈறாகவும் வருங்கால் மான் என்று மருவும்.

 
எ-டு :
மருமகன் - மருமான், பெருமகன் - பெருமான்.
இங்ஙனமே திருமகன் என்பது திருமான் என்று திரியும்.

திரு என்பதை வடமொழியார் ஸ்ரீ என்று திரித்துக்கொண்டதால் திருமான் என்பது ஸ்ரீமான் எனத் திரிந்தது. இதனைச் சீமான் என "எழுத்தொடு புணர்ந்த சொல்"லாக்கினர் தமிழர். திருவரங்கம்-ஸ்ரீரங்கம்-சீரங்கம் என்னும் திரிவையும் நோக்குக.

சீமான் என்பதன் பெண்பால் ''சீமாட்டி''யாதலால், ஸ்ரீமான் என்பதன் பெண்பால் ஸ்ரீமாட்டி''யும் திருமான் என்பதன் பெண்பால் ''திரு மாட்டி''யும் ஆதல் வேண்டும். திருவாட்டி என்பது திருவாளன் என்பதன் பெண்பால். மருமகன் என்பதன் பெண்பால் மருமாட்டி என்றும் பெருமான் என்பதன் பெண்பால் பெருமாட்டி என்றும் வழங்குதல் காண்க. "கலை மருமாட்டி" (திருவிளை, திருமண 62). "பெருமாட்டி" (திவா) பெருமான்-பிரான் பெருமாட்டி-பிராட்டி இவை மரூஉச் சிதைவு.

''வான்'' என்னும் ஈற்றினின்று ''வத்'', ''வதீ'' என்று முறையே ஆண்பாற்கும் பெண்பாற்கும் திரித்துக் கொண்டதுபோன்றே, ''மான்'' என்னும் ஈற்றினின்றும் ''மத்'', ''மதீ'' என்று திரித்துக்கொண்டனர் வடமொழியாளர். ஆதலால், பெண்பாற் பெயர்க்குத் திருமதி என்று அடைகொடுக்காது திருமாட்டி என்று கொடுத்தல் வேண்டும். ஸ்ரீமான் ஸ்ரீமதீ என்பன வட சொல் வடிவுகள். ஸ்ரீமதீ என்பது எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்போது திருமதி என்றாகும். இவ் வடிவை விலக்க வேண்டும்.