பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 83
83

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியும், வடநூலாரையே குருட்டுத்தனமாய்ப் பின்பற்றுவதானும், தமிழன்பராலும் தமிழ்மொழி யறிஞராலும் தொகுக்கப்பெறாமையாலும், அதனையும் பொருட் படுத்தற்க.

இனி, பண்டாரகர் சாமிநாதையரும், பண்டைத் தமிழிலக்கியப் பதிப்பீட்டு வகையில் தலைசிறந்த தொண்டாற்றினரேயன்றி தனித்தமிழ் விருப்பினரல்லர். வடமொழியுயர்வும் தென்மொழித் தாழ்வும் என்றும் நிலவவேண்டுமென்னும் கொள்கையினர்; வடசொற்களாலன்றி வடவெழுத்துகளாலும் தமிழின் தூய்மையைக் குலைத்தவர்; தமிழை இலக்கியச் செம்மொழியாகக் கொள்ள இசையாதவர்; மொழிநூற் பயிற்சி சிறிதும் இல்லாதவர்; ஆதலின் அவர் கூற்றும் கொள்ளத்தக்கதன்றென விடுக்க.

முகம் என்னும் சொல் தென்சொல்லேயென ஒன்பான் ஆண்டு கட்கு முன்னரே என் ''முதற்றாய்மொழி''யில் விளக்கியிருப்பினும், அதனைப் பாராமையாலோ, ஆராய்ச்சியின்மையாலோ, வடமொழி வெறி பற்றிய தமிழ் வெறுப்பாலோ, அடிமைத்தனத்தினாலோ, ''முகம்'' வட சொல்லென இன்றும் ஒருசார் தமிழாசிரியர் வகுப்பிற் சொல்வதும், அதுகேட்டு மாணவர் மயங்குவதும், சில தேர்வாளர் மாணவர் போட்டித் தேர்வுகளில் முகம் எம்மொழிச் சொல் என வினவி உண்மையுரைப் பாரைத் தவறுவிப்பதும் வழக்கமா யிருந்துவருகின்றன. இது பலர்க்கும் இடர்ப்பாட்டை விளைத்தலின், இனி இப் பொருள்பற்றி ஐயுறவும் ஏமாற்றும் தருக்கமும் இல்லாதவாறு, முகம் என்பது தென்சொல்லேயென முடிந்த முடிபாக நாட்டுதற்கு எழுந்ததிக் கட்டுரையென்க.

முகம் என்பது தென்சொல்லேயெனக் கோடற்கு மறுக்கொணாச் சான்றுகள் வருமாறு :-

(1) தமிழில் மூலமும் பொருளும் முற்றும் பொருந்துதல் :-

முகம் (முகு + அம்) = முன்பு, முன்னுறுப்பு, .

முனை, நுனி, தோற்றம்.

, முகனை, முகச்சரக்கு, முகதலை, முகமண்டபம், முகமனை, முகவாசல், முகவுரை, உரைமுகம், துறைமுகம், நூன்முகம், போர்முகம் முதலிய வழக்குகளை நோக்கின் முன்மைக் கருத்தே முகம் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் என்பது விளங்கும்.

உயிரிகளின் (பிராணிகளின்) முன்பக்கத்திற் சிறந்த உறுப்பு தலையின் முன்புறமாதலின், அது முகம் எனப்பட்டது.

உயிரிகளின் இயல்பான இயக்கம் அல்லது தோற்றம் முன்னோக்கியே நிகழ்தலின் முன்மைக் கருத்தில் தோற்றக் கருத்துத் தோன்றிற்று.

எ-டு :

முகம் = தோற்றம்

முகஞ்செய்தல் = தோன்றுதல்

முகம்பெறுதல் = தோன்றுதல்