பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 96
96

தமிழால் வளர்ந்து தமிழால் வாழ்ந்து தமிழுக்கே கேடுசூழும் தனியடியாரும் தொகையடியாரும் மிக்கிருக்கின்ற இக்காலத்துக் காற்றுடன் நெருப்புக் கூடிப் பகைமுயற்சி வலியுறாவண்ணம், தமிழன்பரும் தமிழை வளர்க்க மடிதற்றுத் தாமுந்துறும் கழகங்களும் தமிழைத் தழீஇக் காப்பாராக.

முதலாவது இந்திப் பயிற்சி வேண்டுவதா என்றும், பின்பு அது கட்டாயமாய் வேண்டுவதா என்றும் நடுவுநிலையாய் ஆராய்தல் வேண்டும்.

 

காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண்
குற்றமுந் தோன்றாக் கெடும்

(அறநெறி.42)
     அன்றோ?

(1) கருத்தறிவிப்பு, (2) கல்வியறிவு, (3) அலுவற்பேறு, (4) மொழி நூற் பயிற்சி, (5) விருப்பம் என்னும் ஐந்து காரணம்பற்றியே மக்களால் மொழி அல்லது மொழிகள் பயிலப்படுவனவாகும்.

ஒருவன் தனித்திருந்தால் ஒரு மொழி வேண்டியதில்லை. பிறருடன் கலந்துறைந்தால் தன் கருத்தைப் பிறர்க்கறிவித்தற்கு ஒரு தாய் மொழியேனுந் தெரிந்திருத்தல் வேண்டும். தென்னாட்டார்க்குத் தமிழ் மலையாளம் முதலிய தாய்மொழிகளிருத்தலால் தம் கருத்தையறிவித் தற்குப் பிறிதோர் மொழி வேண்டுவாரல்லர்.

கல்வி, அலுவல் என்ற இரண்டிற்கும் தமிழ் ஒருகால் முழுத்துணையாயிருந்து இதுபோது ஆங்கில ஆட்சியினாலும் விஞ்ஞானக் கலை வளர்ச்சியினாலும் குறைபாடுள்ளதாயிற்று. ஆயினும், இலக்கணம், இசை, நீதி, காவியம், இல்லறம், சித்தாந்தம், மருத்துவம் முதலிய பல துறைகளில் இன்னும் இம்மை மறுமைப் பயன்களுக்கேற்ற பெரும் புலமை யளிப்பதும், தனியாகவும் ஆங்கில வாயிலாகவும் பல அலுவல்கட்கு ஆதாரமுமாகவுள்ளது. இலக்கணம் நீதி என்ற இரண்டை நோக்கின் உலக முழுவதிலும் ஒப்புயர்வற்றதாகவும் விளங்குகின்றது!

மொழிநூற் பயிற்சிக்கு உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் ஒக்க வேண்டுவவேனும், தமிழானது தன் தொன்மை, முதன்மை, தாய்மை, இயற்கையொலி, சொல்வளம், இலக்கியச் சிறப்பு முதலியவற்றால் இந்தியில் மட்டுமல்ல ஆங்கிலத்தினும் பன்மடங்கு சிறந்ததாகும்.

இந்தி கருத்தறிவிப்பு, கல்வி, அலுவல் என்னும் முக் காரணம் பற்றித் தென்னாட்டாருக்கு முற்றும் வேண்டுவதன்று, மொழிநூலறிஞர் உலக முழுவதினும் விரல்வைத் தெண்ணுமாறு அத்துணைச் சிலராவர். விருப்பம் பற்றி இந்தி கற்பவரும் சிலரே. ஆதலான் இவர்பொருட்டெல்லார்க்கும் பொதுவாய் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவது கல்வி முறைக்கும் நியாயத்திற்கும் மாறாகும்.

வடநாட்டு மொழிகளெல்லாம் பெரும்பாலும் வடமொழியைத் தாயாகவுடையன. தென்னாட்டிலும் தமிழொழிந்த பிற மொழிகள் வட மொழித் துணையைப் பெரிதும் வேண்டுவன. இந்தியும் மகமதியரிற்