பக்கம் எண் :

10

Tamil Virtual University

முன்னுரை

ஒவ்வொரு மொழியிலும் எழுத்துத் தோன்றுவதற்கு முன்பு பாடல்களும், கதைகளும் தோன்றத் தொடங்கின. அவற்றில் சில கதை வடிவத்தில் பாடப்பட்டன. இவ்வாறுதான் கிரேக்கக் காவியங்கள் தோன்றின என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பாரதம், இராமாயணம் என்ற காவியங்களில் முடிவான எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பு இவ்வாறே பேச்சு வழக்கில் இருந்து வந்தன. சிறு சிறு குழுவினருடைய நாட்டுப் பாடல்களாக வழங்கிவந்த கதைகள், அக்குழுக்கள் ஒன்றுபட்டு பெரிய இனமாக மாறும் போது இணைப்புப் பெற்று காவிய ரூபம் பெறுகின்றன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் பல நிகழ்ச்சிகளும் பல உபகதைகளும் காவிய காலத்திற்கு முன்பு செவி வழியாக வழங்கி வந்தன. காவியத்தில் காணப்படும் தெய்வ வணக்கமும், குரவைப் பாடல்களும், வரிப்பாடல்களும், அம்மானைப் பாடல்களும், துன்பமாலை என்ற பகுதியும் வெகுகாலத்திற்கு முன்பு வழங்கிவந்த நாட்டுப்பாடல்களின் கருத்தையும், அமைப்பையும் தழுவியன என்று உறுதியாகச் சொல்லலாம்.

நாட்டுப்பாடல்கள் முன்பிருப்பவர்கள் கேட்கப் பாடுவது கேட்பவர்கள் மனத்தில் மகிழ்ச்சி, சோகம், பெருமை, பணிவு, பெருமிதம், ஆர்வம், வியப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எழுப்பும் நிகழ்ச்சிகளையோ, கதைகளையோ சொல்வது வழக்கமாக இருந்தன. அல்லது வேலை செய்யும் காலத்தில் களைப்பைப் போக்க அவர்கள் கூட்டு முயற்சியை ஊக்குவிக்கப் பாடப்படும் பாடல்களும் உள்ளன. எப்படியும் ஒரு குழுவினரின் மனத்தில் ஏக காலத்தில் சமமான உணர்ச்சியை உண்டுபண்ணுவது பெரும்பான்மையான நாட்டுப் பாடல்களின் நோக்கமாகும்.

நாட்டுப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளவை. கதைப் பாடல்கள் தவிர மற்றப் பாடல்கள் நாட்டுப்புற வாழ்க்கையின் அன்றாட சம்பவங்களையே பொருளாகக் கொண்டவை. இதனால்தான் வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான பிறப்பு, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், காதல், பொருந்தா மணம், குடும்ப விவகாரங்கள், கிராமத் தொழில்கள், பஞ்சம், கிராம தேவதைகள் முதலியனவே