பக்கம் எண் :

443

Tamil Virtual University

பவுனும் மங்கியாச்சு

கணவன் இருக்கும் வரை, இன்பம் நிறைந்த சிறப்பான வாழ்க்கை அவளுக்கிருந்தது. அவன் இறந்தபின் அவளுடைய வாழ்க்கை ஒளி மழுங்கிப் போயிற்று, இதனை அவள் “பட்டு நனைந்து விட்டது,” “பவுன் மங்கி விட்டது” என்ற உவமைகளால் புலப்படுத்துகிறாள்.

பச்சை ரயிலு வண்டி
பட்டணத்துப் பொட்டி வண்டி
பட்டை உடுத்தியல்லோ
பவுன் நவை தான் பூட்டி
நீங்கள் உள்ள பட்டணத்தை
பார்க்க வந்துட்டா
பட்டணமே பேயும் மழை
பட்டு நனையாது
பவுனுமே மங்காது-நீங்க போவ
பட்டு நனைஞ்சாச்சு.
பவுனுமே மங்கலாச்சு
சின்ன ரயிலுவண்டி
சீரங்கத்துப் பொட்டி வண்டி
சீலையே உடுத்தி அல்லோ
சிறு நவை போட்டுமல்லோ
சீரங்கம் வந்து விட்டா
சீலை நனையாது
சிறு நகையும் மங்காது-நீங்க போவ
மட்டு நனைஞ்சாச்சு
பவுனுமே மங்கியாச்சு

வட்டார வழக்கு: நவை-நகை ; பொட்டி-பெட்டி(பேச்சு)

உதவியவர் : சி. செல்லம்மாள்
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி

இடம்:
மாடகாசம்பட்டி,
சேலம் மாவட்டம்.