|
இவை யாவும்
வாய்மொழிப்பரவலை அச்சுயந்திரம் பன்மடங்காக்குகிறது, அச்சிடப்படும் கதைப்பொருள்
வாழும் மரபாக இருந்தால். குறிப்பிட்ட கதை வாழும் மரபாக இருக்க வேண்டியதில்லை. அந்தக்
கதை, எந்த வகை (Type) யைச் சேர்ந்ததோ அது வாழும் மரபாக இருந்தால் போதும்.
முதலில் அது வாய்மொழி மரபாகத் தோன்றாமல் அச்சில் 10,000 படிகள் தோன்றி, 10,000
பேரையும் பாடவைத்து, வாய்மொழி மரபின் பரப்பை அதிகரிக்கச் செய்கிறது. எழுத்தறிவு
வளர, வளர, வாய்மொழி பரவுதலுக்கே, அச்சு அடிப்படையாகிவிடும்.
இந்நூல்
ஒரு பாடல் திரட்டுத்தான். பாடல், உணர்ச்சியின் உறுத்தலாலும், ஒரு நிகழ்ச்சி தோற்றுவிக்கும்
எண்ணங்களாலும் ஏற்படுவது. கதை ( Narrative ) சுவையாலும் வாழ்க்கையைத் திருப்புவதுமாயிருக்கும். இவையாவும் அடிநிலையில் பாமரர் இலக்கியமாகும்.
இவ்விலக்கியம் கல்லாதார் கலைச் செல்வம். அவர்களிடையே எழுத்தறிவு பரவினால், எத்தனையோ
படைப்பாளிகள் அவர்களிடமே எழுவார்கள். அவர்கள் எழுத்தினால், பாடல் பாடுவார்கள்.
எழுத்தறிவில்லாத படைப்பாளி, வாய்மொழியிலே பாடலைப் படைப்பான். இப்பொழுது
வாய்மொழி, எழுத்துருவம் பெறும் காலம். எழுத்தறிவு நம்முடைய நாட்டாரிடையே வளர்ச்சி பெற்று
வருகிறது. எனவே ( Oral Transmission ) வாய்மொழிப் பரவுதல் என்று கண்களை மூடிக் கொண்டு, நாட்டார் இலக்கியத்திற்கு வரம்பு விதித்தல்
கூடாது.
இப்பாடல்களைப்
புரிந்துகொள்ள, சமூகப் பின்னணி, வரலாற்றுப் பின்னணி, சரித்திரப் பின்னணி ஆகிய தெளிவான
சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். இப் பாடல்கள் குறிப்பிடும் தனி நிகழ்ச்சிகளுக்கும்
சமூக மாறுதல்களுக்கும் சம்பந்தம் இருக்கும். அதனையொட்டி, குறிப்புரைகள் எழுதும் பொழுது கற்பனையில்
இருந்து நிகழ்ச்சிகளை, உணர்ச்சிகளையும் மதிப்பிடாமல், சமூகவியல், மானிடவியல், சரித்திரவியல்,
இலக்கியம் ஆகிய துறைகளின் அறிவைக் கொண்டே, குறிப்பிட்ட பாடல்களின் நிகழ்ச்சிகளையும்,
உணர்ச்சியையும் வருணித்துள்ளேன். ஒவ்வொரு தனிப்பாடலும், ஒரு தனி நிகழ்ச்சி பற்றிய
கருத்துக்கும், சமூக இயக்கத்திற்குமுள்ள தொடர்பு. ஒவ்வொரு சரித்திரப் பாடலும், நீண்டகால
வரலாற்றின் போக்குக்கும், அதில் ஒரு சம்பவத்திற்கும் உள்ள தொடர்பு. இத்தொடர்புளைக்
கவனமாக நான் சுட்டிக் காட்டியுள்ளேன். குறிப்பாக பாடல்கள் சமூக அடிப்படையும், அவ்வடிப்படையில்
கருத்துக்கள், உணர்ச்சிகளையும் நான் காட்டியுள்ளேன்.
|