பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 68 -

திருவுலாச் சென்று தருமோபபேசம் செய்த காலம் அறுபத்தோராண்டாகும்.  அதற்பின் அகாதி வினையையும் கெடுத்து, சித்திநகர் அடைந்து பிறவிப் பேற்றை அடைந்து இன்புற்றார். (24)

நூற் பயன்

169. இதன்கதை யெழுதி யோதி யின் புறக் கேட்ப வர்க்கும்
  புதல்வர்நற் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து
  கதமுறு கவலை நீங்கிக் காட்சிநல் லறிவு முன்பாய்ப்
  பதமிகு மமர யோகம் பாங்குடன் செல்வ ரன்றே.

இந் நாககுமாரன் கதையைப் படிப்போரும் எழுதுவோரும் எல்லாம் புத்திரப்பேறும் பெருவாழ்வுமுடையோராய்த் தேவேந்திரன்போல வாழ்ந்து செற்றமூட்டும் மனக்கவலை நீங்கி நற்காட்சி, நன்ஞான, நல்லொழுக்கமுடையவராய்ப் பதவி முன்னேற்றமுடைய தேவலோக சுகம் பெற்று இன்புறுவர். (25)

உலகிற்கு அறவுரை

170. அறமின்றிப் பின்னை யொன்று முயிர்க்கர ணில்லையென்றும்
  மறமின்றி யுயிர்க் கிடர்செய் மற்றொன்று மில்லை யென்றும்
  திறமிது வுணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக் கஞ்சி
  மறமிதை விட்ட றத்தில் வாழுமின் னுலகத் தீரே.

உலகத்தோர்களே! நீவிர் புலனடக்கும் உபவாச விரதம் நோற்றலாகிய நல்அறவொழுக்கமின்றி நம்முயிர்க்கு இன்பந்தரும் புகலிடம் பிறிதொன்றில்லை என்றும், நம்முயிர்க்குப் பேரிடர் புரிவது பேராசை, தீயொழுக்கம், மறமின்றிப் பிறிதொன்றில்லை என்றும், இத் திறத்தை உய்ந்துணர்ந்து தெளிந்து, கொடிய நாற்கதிப் பிறவிச் சுழலுக்குப் பயந்து, பேராசையால் விளையும் மறத்தை (தீவினையை) விட்டு இல்லற துறவற நெறியைப் பின்பற்றித் திருப்தியோடு வாழுங்கள். (26)

(ஐந்தாம் சருக்கம் முற்றும்)