பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 67 -
165. வியாளமா வியாளர் தாமும் விழுத்தவத் தனயை யென்னு
  நயாவுயிர் தியானந் தன்னா னாலிரு வினைகள் வென்று
  செயத்துதி தேவர் கூறிச் சிறந்தபூ சனையுஞ் செய்ய
  மயாவிறப் பிறப்பு மின்றி மருவினார் முத்தி யன்றே.

வியாளன் மாவியாளன் இருவரும் சிறந்த தவத்திற்குரிய தன்மை எனப்படும் உயிரியல்பாகிய தருமத்தியான சுக்கிலத் தியானங்களால் எண்வினைகளை வேரற வெற்றி பெற்றுத் தேவர்கள் ஜெய கோஷஞ்செய்து துதிபாடி, சிறப்பாகிய கேவல பூசனைபுரிய மயக்கம் நீங்கிப் பிறப்பு இல்லாத முத்தி நகரைச் சேர்ந்தனர். (21)

166. அருந்தவ யோகந் தன்னா லச்சேத் தியபேத் தியர்தம்
  இருவினை தம்மை வென்று வின்புறுஞ் சித்தி சேர்ந்தார்
  மருவுநற் றவத்தி னாலே மற்றுமுள் ளோர்க ளெல்லாம்
  திருநிறைச் சோத மாதி சேர்ந்தின்பந் துய்த்தா ரன்றே.

அச்சேத்திய அபேத்தியர்கள் அரிய தவயோகத்தால் காதியகாதி யாகிய இருவினைகளை வென்று, பேரின்பமுடைய சித்தியைச் சேர்ந்தார்கள்.  ஏனையோர்கள் தாம்தாம் மேற்கொண்ட தவத்தாற்றற் கேற்பசெல்வ மிக்க சௌதர்ம  கற்பம் முதலாகச் சேர்ந்து தேவசுகம் அனுபவித்தனர். (22)

167. நாகநற் குமரற் காயு நான்காண் டைஞ்நூற் றிரட்டி
  ஆகுநற் குமார கால மைந்து முப்பத் திரட்டி
  போகபூ மியாண்ட பொருவி லெண்ணூ றுவாண்டு
  ஆருநற் றவத்தி லாண்டு வறுபத்து நான்க தாமே.

நாககுமாரனுக்கு ஆயுள் ஆயிரத்து நூற்றறுபத்துநான்கு ஆண்டாகும்.  அவற்றுள் குமாரகாலம் 300 ஆண்டுகளாகும், போக மிக்க இப் பூமி ஆட்சிக் காலம் 800 ஆண்டுகளாகும், நற்றவம்புரிந்த ஆண்டுகள் 64 ஆகும். (23)

168. மறுவறு மனைய வர்க்கு மாதவர் தமக்கு மீந்த
  பெறுமிரு நிலங்க ளெங்கும் பெயர்ந்து நற்கே வலியாய்
  அறமழை பொழிந்த கால மறுபத்தா றாண்டு சென்றார்
  உறுதவர் தேவர் நான்கு முற்றெழு குழாத்தி னோடே.

நாககுமார முனிவர் கேவலஞானம் பெற்று உடன் தவத்தால் மிக்க முனிபுங்கவர்கள், நான்கு வகைத் தேவர் கூட்டங்கள் முதலிய கணங்களோடு குற்றமற்ற இல்லற ஒழுக்கமுடையோர்க்கும் துறவற ஒழுக்கமுடையோர்க்கும் கொடுத்த  நற்றானப்  பயனால் அடையக்  கூடிய  போகபூமிகள்  எல்லாம்