பக்கம் எண் :

40

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

முதல்வன் வல்லமையில்முடியாததும் ஒன்றுண்டோ?

விண்ணுல கிற்குச் சென்று
     வியத்தகு நிலையைக் கொண்ட
அண்ணலின் வெற்றி தன்னில்
     ஐயங்கொண் டாயோ ? நெஞ்சே

உடலின்றி உயிர்தான் சென்றால்
     உடலதன் நிலையு மென்ன ?
உடலொடு அண்ணல் சென்ற
     உயர்வதை அறிவாய் நெஞ்சே


கனவினில் பலவும் கண்டார்
     கஷ்டமோ ? என்றால் நாமும்
தினம்பல வற்றைக் காண்போம்;
     திகைப்புண்டோ? சொல்வாய் நெஞ்சே


உடலுடன் சென்ற தற்கோ
     உரியஇவ் வையம் மட்டும்
திடமுடன் இருப்ப தொன்றே
     சான்றதாய்த் திகழும் நெஞ்சே


ஆத்மார்த்த அறிவை எல்லாம்
     அடைந்திடா உன்ற னுக்குச்
சாத்திரத் துண்மை ஆய
     சக்திஉண் டாமோ ? நெஞ்சே

 

சோற்றுக்கும் உடையி னுக்கும்
     சொல்லொணா இன்ன லுற்றே
ஆற்றிலை இழந்த உன்றன்
     அறிவதும் என்னே நெஞ்சே


பிறவியில் மனித னாகிப்
     பிறழ்ந்திடும் நீயும் அண்ணல்
நிறைவினை - வெற்றி தன்னை
     நினைப்பதோ ? சொல்வாய் நெஞ்சே


உன்னைநீ உணரா வண்ணம்
     உள்ளபுல் லறிவு கொண்டே
அண்ணலின் மாண்பு தன்னில்
     ஐயங்கொள் வதுவோ ? நெஞ்சே


இறைவனின் படைப்பு தன்னில்
     இந்தஓர் உலகம் அற்பம் ;
இறைவனின் ஆற்ற லைநீ
     எண்ணுவ தாமோ ? நெஞ்சே

நினத்ததை முடிக்க வல்ல
     நேர்த்தியைக் கொண்டோன் தன்னை
மனத்தினால் அளக்க லாமோ ?
     மறுமொழி சொல்வாய் நெஞ்சே


எல்லையில் லாத ஆற்றல்
     எல்லையில் லாத ஏற்றம்
உள்ளவன் செயலை நாமே
     உரைப்பதோ? சொல்வாய் நெஞ்சே


வந்துசெல் கூட்டந் தன்னில்
     வந்தவ ராமோ அண்ணல்
சிந்தித்த துண்டோ ? நெஞ்சே
     செப்பிடு வாய்என் நெஞ்சே


மாற்றிலாப் பொன்னாய் வந்து
     மாபெரும் தவத்தி னாலே
ஏற்றங்கள் கண்ட அண்ணல்
     எழிலதும் என்னே நெஞ்சே

அண்ணலின் சிறப்பை எல்லாம்
     அடைந்தவர் உண்டோ? இந்த
மண்ணகந் தன்னில் இல்லை;
     மற்றுரை சொல்வாய் ! நெஞ்சே


மானிட உலகத் திற்கே
     மதிப்பினைச் சேர்ப்ப தற்கு
ஆனவர் என்றே அல்லாஹ்
     அழைத்ததும் என்னே நெஞ்சே


உலகத்தை நபிகள் மூலம்
     உய்விக்க அல்லாஹ் கொண்ட
உளக்குறிப் பதனை நீயும்
     உணர்ந்திட வேண்டும் நெஞ்சே


தன்னரும் தொண்ட ராக
     தக்கநம் நாய கத்தை
அன்பினால் அவன ழைத்தல்
     அரியதோ ? சொல்வாய் நெஞ்சே

 

ஞாலத்தைப் படைத்த ளித்தோன்
     நல்லுளம் கொண்டார் தம்மை
மேலுல கிற்க ழைக்க
     முடியாதோ ? மொழிவாய் நெஞ்சே


அல்லாஹ்வின் கருணை என்னே !
     அவனுடை நெஞ்சந் தன்னில்
நல்லன்பு பெருகும் போது
     நடக்காதோ ? நவில்வாய் நெஞ்சே


எண்ணிலா விந்தை தம்மை
     எழில்படச் செய்த வல்லான்
எண்ணிடின் இதுவும் இங்கே
     இயலாதோ? இயம்பாய் நெஞ்சே


உத்தம நபியை நாமும்
     உவப்புடன் அழைப்போ மென்றே
அத்தகை இறைவன் எண்ணி
     அழைத்தனன் போடு நெஞ்சே

 

அப்படி இருக்கும் போது
     ஐயுற வதனைக் கொள்வோர்
எப்படி உய்வார்? என்றே
     எண்ணிடு வாயென் நெஞ்சே


அனைத்தையும் படைத்த ளித்த
     ஆண்டவன் அடிய வர்க்கே
அனைத்தயும் தருவான் என்றே
     அறிந்திட வேண்டும் நெஞ்சே


அந்தஓர் முறையில் அல்லாஹ்
     அழைத்தனன் நாய கத்தை
அந்தநற் பேறு தன்னை
     அளந்திட லாமோ நெஞ்சே


சீலமெய்ஞ் ஞான மார்க்க
     சீர்த்தியைக் கண்ட அண்ணல்
ஞாலத்தின் ஒளியாய் ஆதல்
     நடக்காத தாமோ? நெஞ்சே

 

எல்லோரும் ஒளியை எய்தி
     இன்புறும் நிலையும் உண்டோ?
நல்லோர்க்கே வாய்க்கும் என்று
     நபியினால் கண்டோம் நெஞ்சே


பிறவியுள் சிறந்த தான
     பெட்புறு மனிதன் கொண்ட
திறமதை எண்ண எண்ணத்
     தெளிவதே தோன்றும் நெஞ்சே


இத்தகை வாழ்க்கைக் குள்ள
     இணையிலா லட்சி யத்தை
நத்துதல் அன்றோ வாழ்வின்
     நலமதைக் கூட்டும் நெஞ்சே


அவனரு ளாலே அண்ணல்
     அவனையே கண்டு வந்த
தவமதும் என்னே நெஞ்சே
     தனிநிலை என்னே நெஞ்சே

 

வான்வெளிப் பயணங் கொண்ட
     வள்ளலார் மாண்பு பற்றி
நானுரைப் பதுவோ? நெஞ்சே
     நவின்றிடு வாயென் நெஞ்சே