கொற்றியார்
அறுசீர்
ஆசிரிய விருத்தம்
ஆமைமீன்
கோலமுறு மங்கமரீஇ அரவிடையால்
அகடு மேவி
மாமையுரு வோடுவளை சக்கரமேந் தித்திகழும்
வகையாற் குல்லைத்
தாமனையொப் பீரைந்து சரஞ்செய்துயர்
நீக்கியருள்
தந்து காப்பீர்
கோமளைவா ழிடத்தர்கச்சி மறுகுலவு
துளவமணக்
கொற்றி யாரே.
(82)
(இ - ள்.)
கோமளை வாழ் - அழகிய உமாதேவி தங்கிய, இடத்தர் - இடப்பாகத்தை உடையவராகிய ஏகாம்பரநாதர்
வாழ்கின்ற, கச்சி மறுகு உலவு - காஞ்சிபுரத்தின் வீதியில் உலவுகின்ற, துளவம் மணம்
கொற்றியாரே - துளசி மாலையின் நறுமணம் வீசுகின்ற தாசிரிச்சியாரே, ஆமை மீன் கோலம்
உறும் அங்கமரீஇ - ஆமைபோலும் புறவடியும் வரால் மீன்போலும் கணைக்காலும் அழகுறும் உறுப்புக்கள்
கொண்டு, அரவு இடை ஆல் அகடு மேவி - பாம்புபோலும் துவளும் இடையும் ஆலிலை போலும் வயிறும்
அமையப்பெற்று, மாமை யுருவோடு - மாவின் தளிர்நிறம் போலும் நிறத்தோடு, வளை சக்கு
அரம் ஏந்தி - சங்கு வளையல்களும் அரம்போலும் கண்ணும் ஏந்திக்கொண்டு, திகழும் வகையால்
- விளங்கும் காரணத்தால், ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ - எங்கள் சிவபெருமானார்
அருளால் கூர்மம் மீன் பன்றி இவற்றின் வடிவம் உற்ற அருள் தோற்றத்தைப் பொருந்தி,
அரவு இடை - பாம்பணையில், ஆல் அகடு மேவி - ஆலிலையின் மேலே பள்ளிகொண்டு, மாமை
உருவோடு - கரு நிறத்தோடு, வளை சக்கரம் ஏந்தி-சங்குச் சக்கரம் ஏந்திக்கொண்டு,
திகழும் - விளங்கும், குல்லைத் தாமனை ஒப்பீர் - துளசிமாலையை அணிந்த திருமாலினை
ஒப்பீர், ஐந்து சரம் செய் துயர் - மன்மத னது ஐந்து பகழிகள் செய்கின்ற துன்பத்தை, நீக்கி - ஒழித்து,
அருள்தந்து - அருள்செய்து, காப்பீர் - என்னைக் காக்கக் கடவீர்.
சக்கரம் - சக்கு அரம்; அரம் சக்கு - அரம் போன்ற
கண்.
கொற்றியார் - தாசிரிச்சி.
ஆமை - புறந்தாளுக்கு உவமை (புறந்தாள் - பாதத்தின்
மேற்பாகம்.)
மீன் -வரால் மீன் (கணைக்காலுக்கு உவமை.)
கோலம் - அழகு.
திருமால் - ஆமை, கூர்மம்.
மீன் - மச்சம்; கோலம் - பன்றி (வராகம்) அவதாரங்கள்.
அரவு இடை - பாம்பினை ஒத்த இடையையும்; ஆல் இடை மேவி
- ஆலிலைபோன்ற வயிற்றையும் பொருந்தி.
திருமால்: அரவிடை - பாம்பினிடத்திலும், அரவணை ஆல்
அகடு மேவி - ஆலிலை நடுவிலும் தூங்கி.
கொற்றியார்: மாமை யுருவோடு வளை சக்கர மேந்தி -
மாமை நிறம் (பொன் நிறம்) பொருந்திய உடம்போடு வளையலையும், (சக்கு அரம் - அரம்
போன்ற கண்ணையும் தாங்கி) (கங்கையும் சக்கரத்தையும்) கையிற்கொண்டு.
திருமால்: மா - கரிய, மை உருவுடன் - மேகம்போன்ற
மேனியுடன்-பாஞ்சசன்னியம் என்னும் சங்கினையும், சுதரிசனம் என்னும் சக்கரத்தையும்
ஏந்தி.
‘காப்பீர்’ என்றது, திருமாலை நீர் ஒப்பவராதலின்,
எம்மைக் காத்தற்றொழில் உமக்கு எளிதாகும். |