பக்கம் எண் :

115

Kachchik Kalambagam

 

கொற்றியார்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஆமைமீன் கோலமுறு மங்கமரீஇ அரவிடையால்
      அகடு மேவி
மாமையுரு வோடுவளை சக்கரமேந் தித்திகழும்
      வகையாற் குல்லைத்
தாமனையொப் பீரைந்து சரஞ்செய்துயர் நீக்கியருள்
      தந்து காப்பீர்
கோமளைவா ழிடத்தர்கச்சி மறுகுலவு துளவமணக்
      கொற்றி யாரே.                         (82)

(இ - ள்.) கோமளை வாழ் - அழகிய உமாதேவி தங்கிய, இடத்தர் - இடப்பாகத்தை உடையவராகிய ஏகாம்பரநாதர் வாழ்கின்ற, கச்சி மறுகு உலவு - காஞ்சிபுரத்தின் வீதியில் உலவுகின்ற, துளவம் மணம் கொற்றியாரே - துளசி மாலையின் நறுமணம் வீசுகின்ற தாசிரிச்சியாரே, ஆமை மீன் கோலம் உறும் அங்கமரீஇ - ஆமைபோலும் புறவடியும் வரால் மீன்போலும் கணைக்காலும் அழகுறும் உறுப்புக்கள் கொண்டு, அரவு இடை ஆல் அகடு மேவி - பாம்புபோலும் துவளும் இடையும் ஆலிலை போலும் வயிறும் அமையப்பெற்று, மாமை யுருவோடு - மாவின் தளிர்நிறம் போலும் நிறத்தோடு, வளை சக்கு அரம் ஏந்தி - சங்கு வளையல்களும் அரம்போலும் கண்ணும் ஏந்திக்கொண்டு, திகழும் வகையால் - விளங்கும் காரணத்தால், ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ - எங்கள் சிவபெருமானார் அருளால் கூர்மம் மீன் பன்றி இவற்றின் வடிவம் உற்ற அருள் தோற்றத்தைப் பொருந்தி, அரவு இடை - பாம்பணையில், ஆல் அகடு மேவி - ஆலிலையின் மேலே பள்ளிகொண்டு, மாமை உருவோடு - கரு நிறத்தோடு, வளை சக்கரம் ஏந்தி-சங்குச் சக்கரம் ஏந்திக்கொண்டு, திகழும் - விளங்கும், குல்லைத் தாமனை ஒப்பீர் - துளசிமாலையை அணிந்த திருமாலினை ஒப்பீர், ஐந்து சரம் செய் துயர் - மன்மத னது ஐந்து பகழிகள் செய்கின்ற துன்பத்தை, நீக்கி - ஒழித்து, அருள்தந்து - அருள்செய்து, காப்பீர் - என்னைக் காக்கக் கடவீர்.

சக்கரம் - சக்கு அரம்; அரம் சக்கு - அரம் போன்ற கண். 

கொற்றியார் - தாசிரிச்சி.

ஆமை - புறந்தாளுக்கு உவமை (புறந்தாள் - பாதத்தின் மேற்பாகம்.)

மீன் -வரால் மீன் (கணைக்காலுக்கு உவமை.)

கோலம் - அழகு.

திருமால் - ஆமை, கூர்மம்.

மீன் - மச்சம்; கோலம் - பன்றி (வராகம்) அவதாரங்கள்.

அரவு இடை - பாம்பினை ஒத்த இடையையும்; ஆல் இடை மேவி - ஆலிலைபோன்ற வயிற்றையும் பொருந்தி.

திருமால்: அரவிடை - பாம்பினிடத்திலும், அரவணை ஆல் அகடு மேவி - ஆலிலை நடுவிலும் தூங்கி.

கொற்றியார்: மாமை யுருவோடு வளை சக்கர மேந்தி - மாமை நிறம் (பொன் நிறம்) பொருந்திய உடம்போடு வளையலையும், (சக்கு அரம் - அரம் போன்ற கண்ணையும் தாங்கி) (கங்கையும் சக்கரத்தையும்) கையிற்கொண்டு.

திருமால்:  மா - கரிய, மை உருவுடன் - மேகம்போன்ற மேனியுடன்-பாஞ்சசன்னியம் என்னும் சங்கினையும், சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் ஏந்தி.

‘காப்பீர்’ என்றது, திருமாலை நீர் ஒப்பவராதலின், எம்மைக் காத்தற்றொழில் உமக்கு எளிதாகும்.