கட்டளைக்
கலித்துறை
தேறா
மனத்தைத் திருப்பித் தெளிவுறச் செய்துபின்னர்
ஆறாத மும்மை
மலப்பிணி நீங்கநல் லாற்றினுய்ப்பர்
மாறா வளக்கச்சி
மாநிழ லாரு வணன்றனக்குப்
பாறா தரவம்
அணிந்தவர் பேரருள் பாடுதுமே.
(55) |
(இ-ள்.) மாறா
வளம் கச்சி - மாறுபடாத வளங்களையுடைய காஞ்சி நகரத்தில், மா நிழலார் - மாமரத்தின்
நிழலில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரும், தேறா மனத்தை - தெளியாத என் மனத்தை, திருப்பி
- (பொறி வழிகளில் செல்லாவண்ணம்) திருப்பி, தெளிவுறச் செய்து - தெளிவு அடையச்
செய்து, பின்னர் - பிறகு, ஆறாத - நீங்காத, மும்மை மலப் பிணி - ஆணவம், மாயை,
கன்மம் என்னும் மூன்றாகிய மலநோய், நீங்க - ஒழியும்படி செய்து, நல் ஆற்றி னுய்ப்பர்
- நல்ல வழியில் செலுத்துபவரும், உவணன் தனக்கு - கருடனுக்கு, பாறாது - அழிவு அடையாதபடி,
அரவம் அணிந்தவர் - பாம்பை அணிந்தவருமான சிவபெருமானது, பேரருள் பாடுதும் - பெருமை
வாய்ந்த அருளைப் பாடுவோம்.
சிவபிரான் அணிந்த பாம்பு கருடனுக்கு அஞ்சாது. சிவபிரான்
சடையில் இருக்கும் பாம்பு ‘ஏன் கருடா நலமா?’ என்று கேட்கும் என்பது பழமொழி. (காஞ்சிப்புராணம்,
மணிகண்டீச்சரப்படலம்.)
“பலியேல் - கடவுள் அவிர்சடை கட்செவி அஞ்சாதே, படர்சிறைஅப் புள்ளரசைப் பார்த்து”
என்பது நோக்குக. |