பக்கம் எண் :


திருக்கூட்டச் சிறப்பு161

Periya Puranam
     பருவரல் - துன்பம் - துயரம்.

     அன்றே - அப்பொழுதே. பருவரலினின்றும் அன்றே நீங்கியது என்க.
அன்று - ஏ - அசை என்று ஒதுக்குவாருமுளர். 48


134. பொன்றயங்கு மதிலாரூர்ப் பூங்கோயி லமர்ந்தபிரான்
 
  வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே யருள்கொடுத்துச்
சென்றருளும் பெருங்கருணைத் திறங்கண்டு தன்னடியார்க்
கென்றுமெளி வரும்பெருமை யேழுலகு  மெடுத்தேத்தும்.
49

     (இ-ள்.) பொன்...கண்டு - அழகிய மதில் சூழ்ந்த திருவாரூரிலே
பூங்கோயிலிலே எழுந்தருளிய இறைவன் வெற்றி பொருந்திய மனுச்
சோழருக்குத் திருவீதியிலே காட்சி தந்து தனது பேரருளையுங்
கொடுத்துஎழுந்தருளிய கருணைத் திறத்தைக் கண்டு; தன்னடியார்க்கு...ஏத்தும்
- அவ்விறைவன் என்றும் இவ்வாறே அடியவர்களுக்கு எளிதாக வெளிவந்து
அருள்புரியும் பெருமையை ஏழுலகங்களும் எடுத்துத் துதிக்கும்.
     

     (வி-ரை.)
பொன் தயங்கு மதில் - அழகினால் ஒளி வீசும் மதில்.
பூங்கோயில் - திருவாரூர்த் திருக்கோயிலின் பெயர் - பூவின் அகமலர்
போன்று இருத்தலின் பூங்கோயில் எனப்பட்டது. இதன்விரிவை வரிசை 43-ம்
பாட்டின்கீழ்க் காண்க. இதற்கு “எப்பொழுதும் பூக்களால் பந்தலிட்டிருப்பதால்
பூங்கோயில் என்றார்“ என்பாருமுளர்.
     

     வென்றி - வெற்றி - மனிதர்களை அடிமைப்படுத்தும் உலகக்
கட்டுக்கள் பலவற்றுள்ளும் மிகுவலிமை உடைத்தாய்க் “கடந்துளார்களும்
கடப்பரோ மக்கள்மேற் காதல்“ என்று விதந்து கூறப்படுவதாயுள்ள
மக்கட்காதலை, இறைவன் பணித்த அறநெறிக்குக் கீழ்ப்படுத்தி,
அதுகாரணமாக இறைவன் திருவருளைப் பெற்றதை வென்றி என்றார்.
     

     வீதியீலே...திறம் - அரசன் தேர் ஊர்ந்தது கண்டார், அரச குமாரனும்
கன்றும் எழுந்ததையுங் கண்டார். இவற்றிற்குக் காரணமாய் இளம் பிறையும்
திருநுதலும் கொண்ட கோலத்தைக் கண்டு அரசன் போற்றப் பெருமான்
கொடுத்த அருளையுங் கண்டார். ஆதலின் பெருங்கருணைத் திறம் கண்டு
என்றார்.

     பெருங்கருணை - இன்னும் இதன் திறங்களை முன்னர்
“முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ“ என்ற இடத்துங்
காண்க.


     தன் அடியார்க்கு என்றும் எளியவரும் பெருமை - “அடியவருக்
கெளியானை“, “அடியார்க் கடியன் சிற்றம்பலவன்“ எனவரும் எண்ணிறந்த
திருவாக்குக்கள் காண்க. “என்றும் அடியார்க்கு எளிவந்தாய் எந்தாயே“
என்ற திருவிளையாடற்புராணமும் குறிக்க.

     ஏழுலகும் - ஏழு என்று எண்ணப்பட்ட உலகங்களில் உள்ள
அறிவுடையோர். ஏழு வகைப் பிறப்புக்களில் உள்ள அறிவுடை உயிர்கள்
என்றுமாம்.


     எடுத்து ஏத்தும் - பாராட்டித் துதிக்கும்.


     கண்டு...ஏத்தும் - ஏத்தும் என்ற செய்யும் எனும் வாய்பாட்டு
வினைமுற்றாற் கூறியதனால் “அன்றுமுதல் இன்றுவரை“யும், இனியும் ஏத்தும்
என்க. அந்நாளிலே நேரிற்கண்டார் ஏத்தினார்; அவர் கண்ணாற்கண்டு
ஏத்தியதை வழி வழி அதன்பின் காதாற்கேட்டுக்கண்டு ஏத்தும் உலகு.
ஆதலின் கண்டு...ஏத்தும் என்பது பிற்காலத்தார்க்கும் பொருந்துவதாயிற்று
என்க. என்றும் ஏத்தும் - எனக் கூட்டி உரைத்தலுமாம்.


     இவ்வரிய செயலைச் சிலப்பதிகாரம் - மணிமேகலை முதலிய
பழந்தமிழ்ப் பெருநூல்கள் எல்லாம் விதந்து எடுத்துப் பேசும்.

      “அரும் பெயர்ப் புதல்வனை ஆழியின் மடித்தோன்“ -சிலப், வழக்கு,
20