பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்195

Periya Puranam
     (வி-ரை.) குலமுதல் அறிவு - குலத்திற் கின்றியமையாத அறிவு. குலம்
முதலியவற்றின் அறிவு என்றுமாம்.

     கோத்திரமுறை - கோத்திரம் - குலத்தின் உட்பிரிவு. அதன் முறை
- மணஞ்செய் கோத்திரமும் கிளைக்கோத்திரமும் பிரவரமும் அவை
அல்லாதவாறும். கோத்திரமும் பிறமுறைகளையும் என்றும் கூறுவர்.

     நலமிகுமுதியோர்
- இருதிறத்தார்க்கும் நன்மை மிகும்படிச்
செய்வோர். மிகும் - மிகுவிக்கும் எனப் பிறவினைப் பொருளில் வந்தது.
மிக்கோரும் தேர்ந்தோரும் ஆகிய முதியோர் என்க. இந்நாளிலே
கைக்கூலிக்காக ஒருபுடை பேசும் கலியாணத்தரகர் அந்நாளில் இலர்.

     நன்மை ஏற்றல்
- மனத்தின் செய்கை. மலர்தருமுகம் -
அதுகாரணமாகப் புறத்தில் நிகழும் மெய்ப்பாடு. ஏற்று - (சொல்லின்
நன்மையை) யங்கீகரித்து.

     மணம்புரி செயலின் வாய்மை பல பெயர் - கணம் - நூல் முதலியவாக
விதித்த மணப் பொருத்தங்களும் நிமித்தம் முதலிய பிறவுமாம்.

     ஒத்த பண்பு - அவை வாய்மை விதிக்கு மாறுபடாது இணங்கி
யிருத்தல்.

     அன்புநேர்ந்தான் - அன்புநிகழும்மணச்செயலுக்கு இசைந்தான்
என்றலுமாம்.

     அறிவின்மிக்க - அறிவுமிக்க - என்பனவும் பாடம். 8

155. மற்றவ னிசைந்த வார்த்தை கேட்டவர் வள்ள
                                றன்னைப்
 
  பெற்றவர் தம்பாற் சென்று சொன்னபின் பெருகு
                                  சிந்தை
யுற்றதோர் மகிழ்ச்சி யெய்தி மணவினை யுவந்து
                                 சாற்றிக்
கொற்றவர் திருவுக் கேற்பத் குறித்தநா ளோலை
                                விட்டார்.
9

     (இ-ள்.) வெளிப்படை. இசைந்ததனை அவ்வாறு கேட்ட முதியோர்
ஆரூரரைப் பெற்றோரிடம் சென்று அறிவித்தனர். அவர் மனமிக மகிழ்ந்து,
ஆரூரர் காதற் றந்தையாகிய அரசர் சிறப்புக் கேற்றபடி திருமணத்தை
அறிவிக்குமாறு குறித்து எழுதிய நாளோலையைப் பெண் வீட்டாருக்கு
அனுப்பினார்கள்.

     (வி-ரை.) கேட்டவர் - மணத்திறம் செப்பிப் பெண்கேட்க வந்தவர்.
இந்த வார்த்தையை நேரே கேட்டவர் என்றலுமாம்.

     வள்ளல் - நம்பிஆரூரர். தென்றிசை வாழ்ந்திடவும்
தீதகன்றுலகமுய்யுவும் தேவார அருண்மொழிகளை வரையாது கொடுப்பவர்.
உலகமுய்யும் வழிகளை அருள்பவர்.

     கொற்றவர் திருவுக்கேற்பக் குறித்த - நாளோலையிற் குறித்த
பொருள்கள் நம்பியாரூரரைப் பெற்ற சடையனாரது மரபுக் கேற்பனவோ?
அன்றிக் காதற்றந்தையாகிய நரசிங்கமுனையரையர் தகுதிக் கேற்பனவோ
என்று ஐயம் நிகழ்த்துவோரை நோக்கி இவ்வாறு கூறினார்.

     நாளோலை - ஒரு சொல் நீர்மைத்தாய் மணநாளும் ஓரையும்
குறித்தெழுதிய ஓலையைக் குறித்தது. இது மணமகன் வீட்டார் மணமகள்
வீட்டார்க்கும் எழுதுவது. இவற்றின் விரிவைத் திருஞானசம்பந்த நாயனார்
புராணத்துட் காண்க.

     குறித்த - நாள் குறித்து. நாள் ஓலை என்று பிரித்து, ஓலை குறித்து
என்றும் அரசர் திருவுக்கேற்ப நாள் என்றும் கூட்டி உரை கூறுவாருமுளர்.

     குறித்துநாள் - என்பதும் பாடம். 9

156. மங்கலம் பொலியச் செய்த மணவினை யோலை
                                 யேந்தி
 
  அங்கயற் கண்ணி னாரு மாடவர் பலரு மீண்டிக்
கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினா ரெதிரே
                                 வந்து
பங்கய வதனி மாரு மைந்தரும் பணிந்து
                             கொண்டார்.
10