பக்கம் எண் :


196 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     (இ-ள்.) வெளிப்படை. மங்கலமாகச் செய்த நாளோலையை மணமகன்
வீட்டிலிருந்து மங்கலப் பெண்களும் ஆடவர்களும் ஏந்திக் கொண்டு
புத்தூருக்குச் செல்ல மணமகள் வீட்டிலிருந்து அவ்வாறே மங்கலப்
பெண்களும் ஆடவர்களும் எதிர்கொண்டு வந்து பணிந்து அதை
ஏற்றுக்கொண்டார்கள்.

     (வி-ரை.) இவை நாளோலை விடுத்தல் - எடுத்தல் - ஏற்றல் - ஆகிய
முறைகளாம்.

     மங்கலம் ........ மணவினை ஒலை - மங்கலங்களை விளக்கமுறச்
செய்துள்ள மண நிகழ்ச்சிகளைக் காட்டும் ஓலை. சொற்களில் அமங்கலப்
பொருள் வாராதபடி எழுதுதல் - ஓலையைச் செம்மைசெய்து மஞ்சட் பூசுதல்
முதலியன.

     ஏந்தி - மங்கலப் பெண்கள் பூ முதலிய மங்கலப் பொருள்களை
ஏந்திச் செல்லுதலும், அவ்வாறே பெண் வீட்டார் எதிரே வந்து பணிந்து
அவற்றை ஏற்றுக்கொள்ளுதலும் இதற்கு உரிய சடங்கு.

     அங்கயற் கண்ணினார் - பங்கய - வதனிமார் - ஈண்டுச்
சுமங்கிலிகளைக் குறித்து நின்றன. பெண்ணைநோக்கிச் செல்லுதலினால்
கண்ணினார் என்று கண்ணையும், முகமலர்ந்து ஏற்றுக் கொள்ளுதலினால்
வதனிமார் என்று முகத்தையும் குறித்தவாறு. இப்பெண்கள் சதிபதிகளாகச்
சேர்ந்துசெல்வதும் வந்துஏற்றலும் வழக்கு ஆதலின் கண்ணினாரும் ஆடவர்
பலரும் என்றும், வதனிமாரும் மைந்தரும் என்றும் கூட்டி உரைத்தார்.
ஆடவர் - மைந்தர் - மங்கலங்களிலே காணக் கூடாத கூன் குருடு
இல்லாத உத்தம இலக்கணமுடையார். கொண்டார் - ஏற்றுக்கொண்டார்.

     கொங்கலர் சோலை மூதூர் - வாசனை வீசும் மலர்கள் நிறைந்த
சோலைகள் சூழ்ந்த பழமை பொருந்திய புத்தூர். இதன் பேர் புத்தூர்
ஆயினும் பழமையான புகழுடைய தென்பார் மூதூர் என்றார்.        10

157. மகிழ்ச்சியான் மணமீக் கூறி மங்கல வினைக
                              ளெல்லாம்
 
  புகழ்ச்சியாற் பொலிந்து தோன்றப் போற்றிய
                           தொழில ராகி
இகழ்ச்சியொன் றானு மின்றி யேந்துபூ மாலைப்
                                 பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தரீண்டி நீண்முளை சாத்தி
                               னார்கள்.
11

     (இ-ள்.) வெளிப்படை. (அவ்வாறு ஏற்றுக்கொண்ட மணமகள் வீட்டு)
மைந்தர்கள் மண நாளோலைபெற்ற உறுதியான மகிழ்ச்சியினாலே
அத்திருமணச் செய்தியை மேலும் மேலும் எல்லார்க்கும் எடுத்துச் சொல்லி
மணத்திற்குரிய வாய் முன்னர்ச் செய்யப்பெற வேண்டிய எல்லாச்
சுபகாரியங்களையும் விளக்கமுற விரும்பிச் செய்வார்களாயினர்;
எவ்வாற்றானும் குறைசொல்லக் கூடாத வகையாலே பூமாலைகளாலே
அலங்கரிக்கப்பெற்ற பந்தர் அமைத்து அதிற் கூடிமுளை தரிக்கும்
சடங்கினைச் செய்தார்கள்.

     (வி-ரை.) மைந்தர் - கூ றி - ஆகிப் - பந்தர் நிகழ்ச்சியின் - ஈண்டிச்
- சாத்தினார்கள் - என்று கூட்டுக.

     மணமீக்கூறி - மணச் செய்தியைப் பெருமகிழ்ச்சி காரணமாக
எல்லாருக்கும் எடுத்துச் சொல்லி.

     போற்றிய தொழிலர் - போற்றி - பாராட்டிய. போற்றுதல் மனம்
வாக்குக்களாலும், தொழில் மெய்யினாலும் ஆம். போற்றியதாகிய தொழில்
- என்றும் கூறுவர். தொழில் - பந்தர்நிகழ்ச்சி - முளை சாத்தல் முதலியன.

     இகழ்ச்சி யொன்றானும் இன்றி
- ஒன்றினாலும் குறைவின்றி.
இகழ்ச்சி
- அதற்குக் காரணமான குறை எனும் பொருளில் வந்தது. இன்றிச்
சாத்தினார்கள் என வினை முடிபு செய்க.