பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு29

Periya Puranam

     நெற்றிக்கண் - நான்குதோள் முதலியன இறைவனது உருவம். அனேகர்
- இவ்வுருவம்பெற்ற முத்தான்மாக்கள் எண்ணில்லாதவர்கள் என்றபடி. நீறணி
மேனியர் என்றபடியால் சாரூபம் பெற்றாரும் திருநீறு கண்டிகை முதலிய சிவ
சின்னங்கள் தரிக்கும் நியதியுடையார் என்பது அறியப்படும். இவர்களுக்குத்
தமது உருவம் தரும் இறைவன் திருமேனியிலும் இவை விளங்குவன. ஆதலின்
அன்றோ இவர்கள் இவற்றைப் பெற்றனர்? இதை எண்ணும்போது சரியை
கிரியை யோகம் முதலிய எவ்விதத் தகுதியும், படியும் இல்லாதவரும்,
இக்காலத்தில் வெறும் வாய்ஞானம் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு
சிவசின்னங்களைப் புறக்கணித்துத் திரிபவருமாகிய மாக்களின் நிலைமை
பரிதபிக்கத் தக்கதேயாம் என்க.

     மற்று அவர்க்கெல்லாம் - பல வகைப்பட்ட அடியார்
கூட்டங்களுக்கெல்லாம்; அவர் - அடியார்களுட் பல திறத்தினர்.

     தலைமையாம் பணி - சிவ உருவம் பெற்றவராய்ச் சரிகையும் பிரம்பும்
தாங்கிக் கயிலை மலையையும் கோயிலையும் காவல் புரியும் முதன்மையாகிய
பணி விடை.

     பணியும் - அதற்காகச் சுரிகையும் பிரம்பும் பெற்ற என்று
வருவித்துரைக்க.

     பணியும் சுரிகையும் பிரம்பும் பெற்றான் என்க. பெற்றான் காப்பது -
பெற்றானாற் காக்கப்படுவது என விரிக்க.

      பிஞ்ஞகன - சிவபெருமான் - தலைக்கோல முடையான்.

      பெற்றம் - இடபம். இடப தேவர் வேறு; நந்திபெருமான் வேறு;
இவர்களை ஒன்றாக மயங்குவார் பலர். அதிகாரநந்தி எனப்படுபவர்
நந்திதேவர்; இவர் பொருட்டு இறைவர் சேவை தந்தருளும் திருவிழாப் பல
தலங்களிற் சிறக்கக் கொண்டாடப்படுகின்றது. இடபவாகனக் காட்சி என்ற
விழா வேறாவதும் காண்க.

     வரைதான் - இவரது காவலின் பெருமை பெற்றது திருக்கயிலை
மலையே என்க. இவரது காவற் பெருமையை இத்திருமலையின் மேலே தேர்
செலுத்த முயன்ற இராவணன் இவரது ஊங்காரமாகிய மூச்சுக் காற்றினாற்
பட்ட பாட்டினைக் கூறும் சரிதத்தை மாபுராணங்களுட் காண்க. தான் -
என்பதை அசையாகக் கொண்டு ஒதுவாரு முளர்.

     இப்பாட்டிலே குறித்த சாரூப முதலிய நிலைகளையும், அவற்றிற்குக்
காரணமாகிய யோகம் முதலிய நாற்பாதங்களையும் பற்றித் தாயுமானார்,

“விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே”

என்று அருளியிருத்தல் காண்க. ஞானிகள் அடைந்தநிலை சாயுச்சியமாம்.
இது காணவும் சொல்லவும் முடியாமையால் இதற்கு அடுத்த நிலையாகிய
யோகபலனாகிய சாரூபம் இங்குக் கூறப்பெற்றது.

     தம்பிரான் - ஆன்மாக்களாயுள்ள தமக்குப் பிரானாயுள்ளவர் ஆதலின்
அவர்க்குப் பிறர் எல்லாரும் அடியவர்களே யாவர்.  11

22. கையின்மான் மழுவர் கங்கைசூழ் சடையிற்
     கதிரிளம் பிறைநறுங் கண்ணி
 
  யையர்வீற் றிருக்குந் தன்மையி னாலும்
     அளப்பரும் பெருமையி னாலும்
மெய்யொளி தழைக்கும் தூய்மையி னாலும்
     வென்றிவெண் குடையந பாயன்
செய்யகோ லபயன் றிருமனத் தோங்கு
     திருக்கயி லாயநீள் சிலம்பு.
12