பக்கம் எண் :


தில்லைவாழந்தணர் புராணம்441

Periya Puranam

இல்லற நடத்தும் செவ்வழி என்றும் கூறுவாருமுண்டு. செம்மையின் நிறைவு
பெறுவதன் வழிகள் மேலே கூறப்பெற்றன.

     தெய்வ வேதியர்கள் - தெய்வத்தன்மையுடைய வேதியர்.
சீவன்முத்தநிலையடைந்தவர்கள் என்று கூறுவாருமுண்டு. சிந்தையையுடைய
வேதியரெனவே சிந்தை என்றது அந்தக்கரணத்தை எனவும், தணிந்த என்ற
பெயரெச்சம் வினை முதற் பெயர் கொண்டு முடிதலின் தணிதல் -
தண்ணளியுடையதாதல் எனவும், ஆகவே, எவ்வுயிர்க்குஞ் செவ்விய
தண்ணளி செய்யுஞ் சிந்தையையுடைய வேதியர் - தெய்வவேதியர் -
எனத் தனித்தனிக் கூட்டி முடிக்கப்படும் என்பாரும் உண்டு. நடேசரைத்
தங்களிலொருவராகப் பெற்றமையால் தெய்வ வேதியர் என்றலுமாம்.

     மும்மையாயிரவர் - இவர்களின் தொகை குறித்தவாறு.
தில்லைமூவாயிரவர் என்பர். “முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கும்
மூர்த்தி யென்னப், பட்டானை“ - சுந்தரர் தேவாரம் - குறிஞ்சி -
கோயில் - (7).

     முதல்வனாரை இம்மையே பெற்று வாழ்வார் - யாவர்க்கும்
தலைவராய் ஐந்தொழில் புரிந்து உலகத்தை ஆட்டுவிக்கும் இறைவனை
இப்பிறப்பிலேயே தமக்குரிய ஆன்ம நாயகராகக் கைவரப்பெற்றுப்
பூசை புரிந்து வாழ்வார்.

     இனிப்பெறும் பேறு ஒன்று இல்லார் - சிவப்பேறு என்பதே
உயிர்கள் பெறும் முடிந்த பயன் என்று ஞானநூல்கள் முடிபு கூறுகின்றன.
அதனையே இப்பிறப்பிலே பெற்ற உயிர், இனி, மேலே பெறக்கடவதாகிய
பேறு வேறு ஒன்றும் இல்லை என்பது. வாழ்வார் ஆதலின் இல்லார்
ஆயினார் என்க. ஒன்று - ஒன்றும் - உம்மை தொக்கது.

     தம்மையே தமக்கொப்பான நிலை - “தனக்குவமை யில்லாதான்“,
“ஓர் உவமனில்லி“ என்பனவாதி திருவாக்குக்களால் கூறப்பெற்ற
இறைவனது தன்மைகளில் ஒன்று. இறைவனைப் பெற்றுவிட்டமையால்
இவர்களும் அத்தன்மையினராயினர் என்பது. உயிர் சார்ந்ததன்
வண்ணமாமாதலின் சிவத்தைச் சாரப்பெற்றபோது அதன் தன்மை
பெற்றதென்பார் தம்மையே தமக்கொப்பான நிலை என்றார்.

     தலைமை சார்தல் - இந்நிலை பெற்றார் பலருள்ளும் சிறந்து
விளங்குதல். முதல்வரான நடராசர் ஒருவரையே மூவாயிரவரும் தத்தமது
ஆன்மநாயகராகக் கொண்டு அவரையன்றி வேறு சார்பின்றிப் பூசிக்கும்
பேறு பெற்றவர்கள் என்றவாறு.

     பெற்று வாழ்ந்தார் - என்பதும் பாடம். 8

358. இன்றிவர் பெருமை யெம்மா லியம்பலா
                        மெல்லைத் தாமோ?
 
  தென்றமிழ்ப் பயனா யுள்ள திருத்தொண்டத்
                         தொகைமுன் பாட
வன்றுவன் றொண்டர் தம்மை யருளிய வாரூ
                                ரண்ணன்
முன்றிரு வாக்காற் கோத்த முதற்பொரு ளானா
                               ரென்றால்.
   9

     (இ-ள்.) இன்றிவர்.....ஆமோ - இன்று இவர்களது பெருமைகள்
எம்மாற் சொல்லப்பெறும் எல்லையுட் படுவனவோ? (படா. என்னையெனின்);
தென்றமிழ்ப்பயன்...பாட - தென்றமிழின் பயனேயாய் விளங்குகின்ற
திருத்தொண்டத் தொகை பாடுதற்கு; அன்று வன்றொண்டன்....என்றால் -
முன்னாள் வன்றொண்டராகிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஆணை தந்து
அடியெடுத்துக் கொடுத்தருளிய திருவாரூர்த் தியாகேசர் தொடக்கஞ்செய்து
தந்து முதலிலே கோத்த “தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்“
என்ற சொற்றொடராற் குறித்த பொருளாவார் இவர்களே என்று
காண்போமானால்.

     (வி-ரை.) இன்று - இப்போது - மேற்கொண்டு நின்ற இப்போது.

     முதற்பொருள் - திருத்தொண்டத் தொகையிலே கோத்துத் துதித்த
அடியார் திருக்கூட்டத்தில் முதலில் பேசப்பெற்ற பொருள் நடராசராகிய
முதல்வரைக்