பக்கம் எண் :


54 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
தம்மிடத்தே மலர வைத்தது. தாமே ஆக்கலும் அழித்தலும் வல்ல முழுமுதல்
என்று காட்டியபடி. “ஒடுங்கி மலத்துளதாம்” என்றபடி உயிர்களையும்
உலகத்தையும் சங்காரகாலத்தே தம்மிடத்தே ஒடுங்கவைத்தும், சிருட்டிக்
காலத்தே தம்மிடத்திலிருந்து மீளத் தோற்றுவித்தும் அருள்பவன். இவற்றுள்
“சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்” என்றபடி தீ சங்காரத்தையும்,
உலகந்தோன்றி நிற்கத் துணைக் காரணமாகிய நீர் உலகப் பிறப்பு
இருப்புக்களையும் உணர்த்தும். இவையிரண்டையும் தம்மிடத்தே மலர்ந்து
தங்கி நிற்க வைத்து, அவ்வத் தொழில்கள் நிகழ்விக்க அவற்றை முறையே
ஒவ்வோர் சிறிய அளவிலே உலகில் அருளுவிப்பார் என்பார் ‘கங்கை
வேணிமலரக் கனல் செங்கை மலர்வது' என்றார். மேலும் “பரந்தெழுந்த
புனற்கங்கை பனிபோலாகச் செறுத்தானை....” ‘நில்லாத நீர்சடை மேல்
நிற்பித்தானை' என்றபடி உலகை அழிவு செய்யவந்த கங்கையைச் சடையில்
தாங்கியும், உலகைச் சங்கரிக்கும் தீயைக் கையிற் றாங்கியும் தாம் இவற்றால்
அழிவுபெறாமல் நிற்பார். இவ்வகைகளாற் போந்த அவரது
முழுமுதற்றன்மையும் உலகருக்காக அருளாலே செய்யும் ஐந்தொழில்களும்
உணர்வதே சிவ ஞானமாம். இதனையே திரு நந்திதேவர்க்கு
உணர்த்தினாராதலின் ஆசிரியர் இங்கே இத்திரு அடையாளங்களாற்
பெருமானைக் குறிப்பிட்டு உணர்த்தினார் என்பது.

     கனல் மலர் செங்கை - மலர்தல் - விளக்கி விரிதல்.

அழலாட அங்கை சிவந்ததோ? அங்கை
அழகா லழல்சிவந்த வாறோ? - கழலாடப்
பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாயிதனைச் செப்பு.
           - அற்புதத் திருவந்தாதி - 98

என்று காரைக்காலம்மையார் இதுகொண்டு இறைவனது முழுமுதற்றன்மையை
அழகாக விளக்கியவாறு காண்க.                              35

46. தேச மெல்லாம் விளக்கிய தென்றிசை  
  ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூச னைக்குப் பொருந்து மிடம்பல;
பேசி லத்திசை யொவ்வா பிறதிசை.
36

     (இ-ள்.) தேசமெல்லாம்.......இடம்பல - (மேற் சொல்லியவையேயன்றித்)
தென்றிசையிலே தேசங்களையெல்லாம் விளக்கம் செய்த இறைவரது
திருத்தோணிபுரத்துடன் சிவபூசைக்குப் பொருந்திய பல இடங்களும் உள்ளன;
(ஆதலின்) பேசில்.........திசை - திசைகளின் தாரதம்மியங்களைப் பற்றிப்
பேசுவோமானால் அத்தென்றிசைக்குப் பிற திசைகள் ஒப்பாகமாட்டா.

     (வி-ரை.) பேசில் - மேலே 30-வது பாட்டில் கேட்ட “யாது?” என்று
பேசில் என வருவித்துக்கொள்க.

     தேசமெல்லாம் விளக்கிய
- தோணிபுரம் எனக் கூட்டுக. விளக்கிய
- உண்மையறியாத தேசத்துக்கு உண்மையை விளங்கச் செய்த.
“........தேசமெல்லாம், குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்தம்
குல தீபத்தை...”என்று மாதவச் சிவஞான சுவாமிகள் அருளியபடி திருஞான
சம்பந்த சுவாமிகளினாலே உலகத்தையெல்லாம் விளங்கத் தெருட்டுவது
தோணிபுரமே என்பதும் குறிப்புப்போலும். பிரளயத்திலே தோணியில் மிதந்து
உலகம் விளக்கியது முன்னமே உலகமறியுமன்றோ?

“திசையனைத்தின் பெருமை யெலாம் தென்றிசையே வென்றேற”
- திருஞான - புரா - 24

என்ற பிள்ளையாரது அவதாரத்தினாலே தென்றிசை சிறந்ததாம். ஆகாயமாகிய
தில்லை முதல் பிருதிவியாகிய ஆரூர் - காஞ்சி வரை எல்லாச் சிவ
தலங்களிலும்