பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு55

Periya Puranam
இறைவன் வெளிப்பட்டு ஆன்மாக்களுக்கு அருளும் முறையும், அவரை
அடைந்து உயிர்கள் உய்யும்வகையும் உணர்த்துவார் ஆசாரியர்களேயாவர்.
அவர்களிலே முதற்குரவராய்ச் சைவ சித்தாந்த சந்தான பரம்பரையின்
முதல்வராய்க் கயிலையிலிருந்து போந்த நந்திதேவர் தலமாகிய
திருவையாற்றையும், அடுத்தபடியிலே, சித்தாந்த உண்மைகளை நடத்திக்காட்டி
உலகர்க்கு வழிகாட்டிச் சைவத் தாபனம் செய்த சைவ சமய பரமாசாரிய
மூர்த்திகளில் முதலில் வைத்தெண்ணப்படும் திருஞான சம்பந்தப் பெருமான்
அவதரித்த சீகாழியையும் கூறினார்.

     தேசமெல்லாம் விளக்கிய என்பதைத் தென்றிசைக்குச் சேர்த்து
உரைத்தலும் ஒன்று. தென்றிசையில் தில்லை - ஆரூர் - காஞ்சி - ஐயாறு -
தோணிபுரத்துடன் இடம் பலவும் உள்ளன என்று முன் பாட்டுக்களுடன்
கூட்டி முடிக்க.

     பூசனைக்குப் பொருந்தும் இடம்பல......ஆசாரியரால் விளக்கப்பெற்ற
உண்மைகளின் வழி நடந்து பூசை செய்வதற்கு உரிய பல தலம் என்க.
ஆதலின் இம்முறையிலே இவற்றை இறுதியில் வைத்துப் பொதுவிற் பேசினார்.
பூசை செய்யும் இடம் எங்கும் இறைவன் வெளிப்பட்டு வருவானாதலின்,
அவற்றைப் பிரித்துக் கூறலாகாமையின், இடம்பல என்று சேர்த்துக்
கூறியவாறு.

“யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியினுங் கந்துடை நிலையினும்
... ... ... ...
... ... ... ...
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே
ஆண்டாண் டாயினும் ஆக...”

என்ற திருமுருகாற்றுப்படைக் கருத்தும் நோக்குக.

     பொருந்தும் இடம்பல - இறைவன் வெளிப்பட வீற்றிருக்கும்
மூர்த்திகளும், புண்ணிய நதிகளும், மலைகள் முதலிய தலங்களும், பூவும்
நீரும் முதலிய சாதனங்களுமாகிய இவை - பொருந்திய - என்க.

     “புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்றமையும் காண்க.
தட்பவெப்ப நிலை வேறுபாடுகளாலும், பூசைக்குரிய சாதனங்களில்லாக்
குறையினாலும் பிற திசைகள் பூசனைக்குப் பொருந்தா இடங்கள் என்பது.
பிறவியாற் பெறும் பேறு இறைவனைப் பூசித்தலே யாதலின் அதற்குப்
பொருந்தும் இடம் உள்ள திசையே சிறந்தது என்பது முடிந்த கருத்தாம்.
“ஈறான கன்னி” - என முன்னர்க் காட்டிய திருமந்திரமும் இங்குச்
சிந்திக்கற்பாலது.

     தென்றிசையில் தோணிபுரத்துடன் இடம்பலவும் பொருந்தும் - என்று
கூட்டி உரைத்தலுமொன்று.

     மேலே கூறித் தொகுத்த ஐந்து தலங்களைச் சிறப்பாய்க் கூறிய
காரணங்கள் குறி முதலிய அறிய நிற்குமுறை - ஐந்தெழுத்து நிற்குமுறை -
ஐந்தொழிலைக் காட்டுமுறை முதலிய பலவகையாலும் கூறுவர். அவை யாவும்
“உடன் பூசனைக்குப் பொருந்து மிடம்பல” என்று ஆசிரியர் கூறி முடித்துக்
காட்டியதனை உட்கொள்ளாமற் கூறுவனவாம். ஆதலின் அவை உரையன்
றென்க.                                                36

47. என்று மாமுனி வன்றொண்டர் செய்கையை  
  அன்று சொன்ன படியா லடியவர்
துன்று சீர்திருத் தொண்டத் தொகைவிரி
இன்றெ னாதர வாலிங் கியம்புகேன்.
37