பக்கம் எண் :


இளையான்குடிமாற நாயனார் புராணம்563

Periya Puranam

வன் இங்கு வந்தாரென்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. உருகுகின்றது
அன்பின் செயலாதலும் இங்கு உணர்ந்து அனுபவிக்கத் தக்கதாம். இந்த
உண்மையை ஊன்றிக் காட்டுதற் பொருட்டே ஆசிரியர் சேக்கிழார்
பெருமான் இறைவனார் தமக்கு எடுத்துக் கொடுத்த முதலாகிய
“உலகெலாம்“ என்ற மகாமந்திரத்தை இங்கு அமைத்தார் என்பர்.
கட்டுவிட்டு என்பது பாசநீக்கக் கருத்தினைக் குறிப்பதுங் காண்க.

     கனம் - என்பதும் பாடம்.  15

     455. (வி-ரை.) எண்ணும் இவ்வுலகத்தவர் - அருட் செறிவை
நோக்காது இருட் செறிவை நோக்குகின்ற ஏனைய உயிர்கள். யாவரும் -
பிறர் யாவரும். துண்ணெனும்படி - நடுங்கும்படி. தோன்ற - தோன்ற;
முன்தோன்றிடில - (இருளுட்புக) முற்பட்டபோது - புறப்பட்டால்;

     வண்ண நீடிய மைக்குழம்பாமென தண்ணல் செய்யா - இருள்
தனது பரந்த நிலையின் மேலும் செறிவு கொண்டு குழம்பின் உருப்பெற்ற
மையேயாம் என்று கருதி உட்புகாத. இவ்வுருவம் மிக்க,
மைக்குழம்பினுருவமே என்று கொண்டு என்றலுமாம். என என்னும்
செயவெனெச்சம் செய்தெனெச்சப் பொருளில் வந்தது. நடுவிருள்யாமத்து
- இருள் நடு யாமத்து என்று மாற்றுக. இருள் செறிந்த மைக்குழம்பு போற்
காணப்பெற்றது என்பது கருத்து. தோன்றமுன் தோய்ந்திடில என்று
பாடங்கொண்டு அதற்கேற்பக் கூறுவாருமுண்டு. 16

     456. (வி-ரை.) உள்ளம் அன்பு கொண்டு ஊக்க - அன்பைத்
துணைக்கொண்டு உள்ளம் (தன்னை - நாயனாரை) ஊக்க என்றலுமாம்.

     பேர் இடா - பெரிய இறைகூடை. கொள்ள - தாம் வாரிக்
கொணர்கின்ற முளை நெல்லைப் பெய்து கொணர.

     முன்கவித்து - தலையின்மேல் முன்புறமாகக் கவித்துக்கொண்டு.

     1குறியின் வழி - முன்நடந்து பழகியதாகிய பழக்கத்தின் குறிப்பின்
வழியே. அக்குறிப்பே யன்றி வேறு எவ்விதக் குறிப்பும் தமக்குத்
துணையாகக் கொண்டு செல்லுதலின்றி என்க. கண்ணினால் வழியும் குழியும்
அறியமுடியாத இருள் என முன்னர்க் கூறியபடியால் இங்கு நாயனார் தமது
மனையிலிருந்து வயலுக்குச் சென்ற செய்கைக்கு அவரது கால்கள் முதலிய
புறக்கரணங்களும், மனம் முதலிய உட்கரணங்களும் முன்னர்ச் சென்று
சென்று பழகிய குறிப்பே துணை செய்தது என்றதாம். இதனையே இங்குக்
குறியின் வழி யென்றார். காலினாற் றடவிச் சென்று எனப் பின்னர்க்
கூறுதலுங் காண்க. குறி - குறிக்கப்படுவது; அடையாளம். செயப்படுபொருள்
விகுதிதொக்க சொல். வயல்புக்கு முளைநெல் வாரி வருதலே குறியாகக்
கொண்டு அதன் வழியே போயினார்.

     குறியின் வழி - குறி - நீர்மை - நியதியெனக் கொண்டு இறைவன்
இவரது நிலை காட்ட நினைத்து எழுந்தருளி வந்து செலுத்திய குறியின்
வழியே வசப்பட்டவராய்ச் சென்று என்றலுமாம். “கொண்ட கருத்தி
னகநோக்குங் குறிப்பேயன்றி“ (1) “குழிவாயதனிற் குறிநட்டு“ (5) என்ற
தண்டியடிகணாயனார் புராண ஆட்சிகளையும் இங்கு வைத்துணர்க.


     1தூக்கச் சரிப்பு என்பதொரு நோய் (Somnambulism). அதனாற்
பீடிக்கப்பட்ட ஒருவன் தூங்கிக்கொண்டே எழுந்து முன்வைத்த ஒரு
குறிப்பின் வழியே ஒழுங்காய்ச் சென்று மீண்டுவந் துறங்குவன் என்பது
மருத்துவ நூலார் கண்ட உண்மை. அஃதும் முன்தூக்க நிலையில்
தொடர்ந்து வைத்ததொரு குறியின் வழியே நிகழ்வதாம். மனவலிமையின்
தத்துவமுணர்ந்தாரே இங்குக் கண்ணுக்கு உருத்தெரியாத நள்ளிருளிலே
குறியின் வழியே நாயனார் வயல்புக்க அரிய செயலின் தத்துவத்தை நன்கு
உணரவல்லார்.