பக்கம் எண் :


566 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

லும் கிலாமாயின மனை என்றுரை கொள்வாருமுண்டு. நீடும - முன்
பழங்காலம் முதல் நீடி வந்த. அலக்கு - கூரையின் சட்டம் - மூங்கில்
வரிச்சு முதலியன.

     மூட்ட - என்பதும் பாடம். 19

459. முறித்தவை யடுப்பின் மாட்டி முளைவித்துப்
                          பதமுன் கொள்ள
 
  வறுத்தபின் னரிசி யாக்கி வாக்கிய வுலையிற்
                                  பெய்து
வெறுப்பிலின் னடிசி லாக்கி மேம்படு கற்பின்
                                 மிக்கார்
“கறிக்கினி யென்செய் கோ“ மென் றிறைஞ்சினார்
                            கணவ னாரை.
20

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு வெட்டி வீழ்த்திய அக்கூரை
வரிச்சுகளை முறித்து அடுப்பிலே நெருப்பு மூட்டி அதில் நென்முளைகளைப்
பதமாக வறுத்த பின்னர், அதனை அரிசியாகக் குற்றியெடுத்துச் சுத்தம்
செய்து, நீர் பெய்து வைத்த உலையிலே இட்டுச் சிறிதும் வெறுப்பிற்
கிடந்தராத வண்ணம் இனிய அமுது சமைத்து வைத்து, அதன்பின்னர்
மிகச்சிறந்த கற்பின் நிறத்திலே மேம்பட்ட மனைவியார் “கறிவகை களுக்கு
இனி என்ன செய்வோம்?“ என்று சொல்லித் தமது கணவனாரை
வணங்கினார்.

     (வி-ரை.) முறித்து அவை அடுப்பின் மாட்டி - அவை முறித்து
அடுப்பின் மாட்டி என மாற்றுக.

     அவை - அவற்றை. முன் பாட்டிற் கண்டவாறு நாயனார் அறுத்து
வீழ்த்திய அந்த அலக்குக்களை. இரண்டனுருபு விரிக்க. அலக்கினை
அறுத்து வீழ்த்தல் நாயனார் செயலாக, அவற்றை முறித்துமாட்டல்
மனைவியார் செயலாயினமை காண்க. மாட்டி - நெருப்பு மூட்டி. முளை
வித்து
- முளைக்குந் தருணத்தில் வாரிக் கொணர்ந்த வித்து நெல். “சாலி
நென்முளை“ (457).

     பதமுன் கொள்ள - ஈர நீங்கக் குற்றி அரிசியாகச் செயத்தக்க பதம்.

     முன்கொள்ள - பதம் கொண்டவுடனே. பதம் முறுகிக் கெடாத
முன்னர். முறித்தல் - மாட்டல் - வறுத்தல் - பெய்தல் இவை ஒவ்வொன்றும்
வெவ்வேறு தனிச் செயல்கள் இவற்றை அன்பர் பசிநோக்கி மனைவியாரும்
நாயனாரும் தத்தமக்கேற்றவாறு பகிர்ந்து விரைந்து முடித்தவண்ணம்
ஆசிரியரும் இப்பாட்டில் ஒவ்வோர் சொற்களால் விரைந்து செலுத்திக்
கூறியருளிய அழகும் நயமும் காண்க. முக்காற் பாட்டில் அமுதமைப்பின்
முக்காலும் நிரம்பியதுங் காண்க.      

     கறி - அமுதுடன்கூடச் சேர்த்துண்ணும் பதார்த்த வகை. “உண்டி
நாலு விதத்திலாறு சுவைத் திறத்தினிற்“ (443) என முன்னர்க் கூறியதுங்
காண்க. “கறியமுதங் குதவாதே திருவமுது கைகூட“ காரைக்காலம்மையார்
புராணம் (19).

     என் செய்வோமென் றிறைஞ்சினார் கணவனாரை - முன்னர்த்
“தபோதனர் தீரவே பசித்தனராகச்“ செய்வதென்? (449) எனவும்,
“இன்னடிசில் தகவுற அமைக்குமாறு எங்ஙனே“ (450) எனவும் நாயனார்
மனைவியாரை வினவியதற்கேற்ப, இங்கு மனைவியார் “கறிக்கு இனியென்
செய்வோம்?“ என்று வினவுகின்றார். இவ்விரு பெருமக்களும் ஒன்றுகூடி
நடத்திய இல்வாழ்க்கைத் திறனும், அடியார் பூசை செய்தலில் இருவர்
மனமும் ஒன்றித்துக் கூடி நிகழ்ந்த ஒருமைப்பாடும் நன்கு புலனாம்.
“மருவிய காதன் மனையாளும் தானும், இருவரும் பூண்டீர்ப்பி னல்லால்“
எனவும், “காத லிருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம்“
எனவும் பிற்றை நாட் புலவர்கள் பாடியன இங்கு நினைவு கூரத்தக்கன.

     “இல்லதென் இல்லவள் மாண்பானா; லுள்ளதென்? இல்லவள்
மாணாக்கடை“ என்பது பொய்யா மொழியார் வாக்கு. இத்தகைய உயர்
குறிக்கோள்களை நமது நன்னாட்டினன்றி வேறெந்நாட்டினுங் காண்பதரிது.
இவ்வுயர் குறிக்