பக்கம் எண் :


மெய்ப்பொருணாயனார் புராணம்589

Periya Puranam

“சமயம் நோக்கித் தேவரீர் அருள்புரிய வேண்டும்; எமது இறைவன்
துயில்கொள் கின்றனராகும்“ என்று சொன்னான்.

     (வி-ரை.) கடையுடைக் காவலாளர் - கடை - வாயிற்கடை.
அதனைக் காவலாக உடைய காவலாளிகள். உண்மை யறியும்
ஊகமுமிலாதவர்கள் என்றகுறிப்பினால் கடையுடையென இலேசினாற்
கூறியது காண்க. ஏறநின்றே - எட்டி விலகிநின்று கொண்டு. இஃது
அடியார்களிடத்து நடந்துகொள்ளும் மரபு. உடையவர் தாமே வந்தார் -
“காதலா லீசர்க் கன்பர் கருத்தறிந் தேவல்செய்வார்“ (467) என முன்னர்
கூறியதுகாண்க. எனவே அடியார்களே தம்மை ஆளாக உடையவர்கள்
எனக்கொண்டு அரசர் ஒழுகியபடியால் அரசரது காவலாளர்களும்
அவ்வாறே ஒழுகுவோர், இங்குத் தவவேடம் பூண்ட முத்தநாதனை,
உடையவர்
- தம்மை யாளாகவுடைய அரசரை ஆளாக உடையவர் -
என எண்ணிக்கொண்டனர் என்க. உடையவர் - இறைவன் என்பாருமுண்டு.
தாமே - தேடி வருந்தாமல் தாமாகவே. உடையவர்தாமே - தாம் என்பதை
அசையாக்கி இறைவரே என்று கூட்டி யுரைப்பாரு முண்டு. ஏகாரம் தேற்றம்.

     தடை - வாயில் “உமைபாக ரருள்செய்த ஒழுக்க மல்லால்
தீங்குநெறி யடையாத தடையு மாகி“ (திருக்குறிப்பு - புரா - 88) என்று
வாயில்களைப்பற்றிக் கூறியதை இங்கு வைத்துக் காண்க.

     தனித்தடை - இதற்குமேல் வேறுவாயில் இல்லாதது; இது கடைசி
வாயில் என்க. இறைவன் கோயில்களில் இதனைத் திருவணுக்கன்
றிருவாயில
என்பர். தத்தன் - அங்குக் காவல் செய்திருந்த காவலாளரின்
பெயர். இப்பெயர் கல்வெட்டுக்கள் முதலிய பழைய ஆதரவுகளிலுங்
காணப்பெறுவது. இடை - சமயம் - அருள்புரிதற் கேற்ற காலம்.

     தெரிந்து அருள வேண்டும் என்பது இறைவன் துயில்வதனாலே
அடியார்க்கேற்றவாறு பணி செய்ய இயலாமையின் அபசாரம் நிகழும்;
அன்றியும் அடியார் அரசனுக்குச் செய்யும் அருளும் செல்லுமாறில்லாது
தடை நேரும்; ஆதலின் இருபுறமும் தவறு நேராதபடி இடை தெரிந்தருள
வேண்டும்
என்றான் என்க. அருள வேண்டும் என்பது அடியார்க்குரிய
வணக்கஞ் செய்யாமை முதலிய பிழைகளால் முனிவுறாது பொறுத்து, வேறு
ஏற்ற சமயத்தில் அருள்புரிக என வேண்டின படியுமாம்.

     துயில் கொளும் இறைவன் - இது தக்க இடையன்று என்று
குறித்தற்கு உரிய காரணங் கூறியபடி. இறைவன் - அரசன். இடை
தெரிந்தருள
என்றதனால் “இது ஏற்ற சமயமன்று. ஆதலின் உட்புகாது
நிற்க!“ என்ற தடை மொழியை அடியவர்க்குரிய பணிவு வரம்பு பிறழாது
மரபில் நின்று தத்தன் அறிவித்தபடியாம். “மன்ன னெப்படி மன்னுயி
ரப்படி“ என்றபடி அரசன் போலவே அவரது ஏவலாளரும் ஒழுகியது
காண்க. இறைவன் துயில்கொளும் ஆதலின் இஃது ஏற்ற இடையன்று
எனத் தெரிந்தருள் புரிய வேண்டும் என முறைப்பட மாற்றியுரைக்க.
இடையின்மையை முதலிற் றெரிவித்து, அவன் வாயில் கடப்பதனைத்தடுக்க
வேண்டிய விரைவு பற்றி மாற்றி “இடைதெரிந்து“ என முன்னர்க் கூறினான்.
இடை தெரிந்து - இடையின்மையைத் தெரிந்து என எதிர்மறையைக்
குறிப்பாலுணர்த்தி நின்றது. “நின்றிடு நீயு“ மென்றே அவனையு நீக்கி (476)
எனவும், “மறைத்தவன் புகுந்த போதே“ (482) எனவும் பின்னர்க்
கூறுவனவற்றால் தத்தன் அவனை உட்புகாது தடுக்கும் மொழியினையே
இவ்வாறு இடை தெரிந்தருள என்று வினயமாய்க் கூறினான் என்றறிக.
தனித்தடை நின்ற தத்தன் என்ற சொல்லாற்றற்குறிப்புங் காண்க.

     தொழுதேத்தி நின்றே - என்பதும் பாடம். 9

476. என்றவன் கூறக் கேட்டே “யானவற் குறுதி கூற
நின்றிடு நீயு“ மென்றே யவனையு நீக்கிப் புக்குப்