பக்கம் எண் :


588 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

நிறைந்த மறுகு என்க. அரசரது அரண்மனைக்குப் போகும் மறுகாதலானும்,
அவ்வரசரது தலைநகராதலானும் எங்கும் மாடங்கள் நிறைந்திருந்தன. இது
அவற்றின் செல்வங்குறித்தது.

     அளகபாரக் கொடி என்றதனால் பெண்களின் ஆடல்பாடலாதி
இன்பமும், குழைக்கொடி என்றதனாற் பொன்மணி முதலிய செல்வமுங்
குறிக்கப்பெற்றன.

     சோதி வெண்கொடி - திருவிழா முதலிய தெய்வச் சிறப்புக்
குறிக்கப்பெற்றன. இங்கு முத்தநாதன் வந்தது இரவாகும். இரவிலும்
விளங்குவது வெண்மை யாதலானும், வெண்மை திருநீற்றின்
சோதியாதலானும் சோதி வெண் கொடி என்றார். வெண் சோதிக் கொடி
என்று மாற்றுக. அளகபாரக் குழைக் கொடி என்றது ஆடற்பெண்கள்.
பெண் கொடியும் - வெண்கொடியும் என இரண்டும் கொடிகளாம்.

     பெண்கொடிகள் மாடங்களிலுள்ள ஆடரங்குகளிலாடுவர்.
வெண்கொடிகள் மாடங்களின் மீது ஆடுவன. “காந்தாரம் இசைபரப்பிக்
காரிகையார் பண்பாடக் கவினார்வீதித், தேந்தாமென் றரங்கேரிச்
சேயிழையார் நாடமாடும் திருவையாறே“ முதலிய திருவாக்குக்கள் காண்க.
இவ்விரு கொடிகளுள்ளே மாடங்களில் ஆடரங்கிலே ஆடும் கொடிகளின்
ஓருறுப்புக் (குழல்) கறுப்பாம். இவை மனத்தினுட் கறுப்பு வைத்துப் புகுந்த
முத்தநாதனது களவை அறிந்து அவனை அந்த மாடங்கள்கறுப்புக்
கொடிகள் காட்டி “வெளியேறுக“ என்பனபோல அசைந்தன என்பதும்,
இக்கறுப்புக் கொடிகளின்மீது ஆடும் சோதி வெண் கொடிகள் “உனது
உட்கறுப்பின் மேலே விளங்கும் வெண்ணீறும் சடைமுடியுமாகிய
திருவேடமே வெற்றிபெறும். வெற்றி எம்முடையதே. இதினும் நீ தோற்பாய்“
என்று அறிவிப்பன போலக் கறுப்புக் கொடிகளைக் கீழ்ப்படுத்தி, மீது
சோதியுடன் வெண்கொடி ஆடின் என்பதும் குறிப்புக்களாகத் தன்மை
நவிற்சி யணியிலே வைத்து ஆசிரியர் விரித்துக்காட்டிய அழகு கண்டு
களிக்க. கறுப்புக்கொடி, உள்வருவோரை வரவேற்காது வெறுத்து
வெளிப்போகச் சொல்லும் குறியாக இந்நாளிலும் வழங்கும் வழக்குங்
காண்க. இனி, கறுப்பும் வெண்மையுமாயின கொடிகளைத் தன் மனக்
கறுப்பும் வெண்ணீறும்போலவே கண்ணாடியிற்போல முத்தநாதன் எங்குந்
தன் வண்ணமே கண்டான். அவ்வாறு காண்பவன் தன் மனத்துட்
பொதிந்து வஞ்சனையினாலே அகத்தினழகு முகத்திற் றெரியும் என்றபடி
முகம் பொலிவிழந்து சென்றானாகவும், மாடங்கள் அவ்வாறில்லாது
தன்னை வெற்றிகொண்டன போன்று சுடர்விட்டு அழகுடன் விளங்கக்
கண்டுகொண்டு சென்றான் என்பதுமொரு குறிப்பாம். இதனை எட்டாவது
பாட்டாக வைத்தோதிய குறிப்பும் காண்க.

     சேதியர் பெருமான் - சேதிநாட்டவரின் தலைவராகிய நாயனார்.
கோயில் - அரண்மனை. திருமணிவாயில் திரு - அருட்டிரு. மணி -
அழகு.மணித் திருவாயில் என்க. மணி கட்டிய வாயில் என்றலுமாம். (112) 8

475. கடையுடைக் காவ லாளர் கைதொழு தேற நின்றே
 
  “யுடையவர் தாமே வந்தார்; ருள்ளெழுந் தருளு“
                               மென்னத்
தடைபல புக்க பின்பு தனித்தடை நின்ற தத்தன்
“இடைதெரிந் தருள வண்டுந்;துயில்கொளுமிறைவ“
                              னென்றான்.
9

     (இ-ள்.) கடையுடை.......என்ன - அரண்மனையின் பல வாயில்களிலும்
காவல் செய்து நின்ற காவலாளர்கள் முத்தநாதன் உட்புகுந்தது கண்டு
அவனைக் கைதொழுது விலகி நின்று எங்களை யாளுடையவராகிய
அடியவர் தாமே வந்தனர் என்று “உள்ளே எழுந்தருள்வீராக“ என்று
சொல்ல; தடை...பின்பு - அவ்வாறே அரண்மனையின் பலவாயில்களையும்
தாண்டிச்சென்ற பின்னர்; தனித்தடை.....என்றான் - கடைசியாயுள்ள தனி
வாயிலினைக் காவல்புரிந்து நின்ற தத்தன் என்பான்.