பக்கம் எண் :


விறன்மிண்ட நாயனார் புராணம்615

Periya Puranam
முத்தும் வேழ முத்தும் என இரட்டிப்பு வளன் கூறினார். வேரல் - மூங்கில்.
வேழம் - யானை. இவ்விரண்டும் குறிஞ்சிநிலக் கருப்பொருள்கள். இவற்றின்
வரும் முத்துக்கள் அப்பொருள்களிற் படும் வளன்களாம்.

     வாரி சொரியும் கதிர் முத்தும் - சொரியும் - மிகுதி காட்டிற்று.
திருமறைக்காடு முதலிய முத்துக் குளிக்கும் கடற்றுறைகளில் அவ்வப்பருவ
காலங்களில் இவை மிகுதியாய்ச் சொரியும் காட்சி காணத்தக்கது.
“உப்பளத்தின், முன்றிறோறுஞ் சிறுமடவார் முத்தங் கொழிக்கு
மறைக்காட்டு“ (திருநா - புரா - 264) முதலியவை காண்க.

     வயல் மென் கரும்பிற் படும் முத்து - திருந்து நிலனின் செழுவளன்
என்றதற்கேற்ப, அவ்வாறு திருந்திய வயல்களில் விளைவித்த கரும்பு திருந்த
விளைந்து மனிதர் கைப்படும் முத்து. படுதல் - விளைதல், கைப்படுதல் என
இருபொருளுங்கொள்ள நின்றது. வயலின் விளைகின்ற கரும்புக
ளத்தனையிலும் காண்பரிதாகிக் குறித்த சிலவற்றில் மட்டும் விளைவதாம்.
அவைதானும் மனிதர் கைப்படுதல் மிக அரிதாம். ஆதலிற் படும் என்றார்.

     வேரல் விளையும் குளிர் முத்தும் வேழமருப்பின் ஒளிர் முத்தும்

- ஒரோர் காலத்தன்றி இவை மனிதர் கையில் அங்கங்குக் கிடைப்பரிதாய்
மலைகளில் உதிர்க்கப்பட்டு மழை வெள்ளத்தின் வழி, ஆறுகளில்
அடித்துக்கொண்டுவரப் பெறும் நாட்டு வளன்கள். கதிர் முத்து, படு முத்து,
குளிர் முத்து, ஒளிர் முத்து என்ற நால்வகை அடைமொழிகளின் வேறுபாடு
அவ்வம் முத்துக்களுக்குரிய சிறப்பியல்புகள் குறித்து நின்றது. கடன் முத்தம்
சலசம் எனப்படும். நீரிற் பிறப்பதால் நீரோட்டம் என்ற கதிர்ப் பரப்பு
உடையது. இவை இப்பி சங்குகளிற் பிறப்பன. கரும்பிற்படும் முத்தம் இறுகிக்
கடினமானது. “கருஞ்சகட மிளகவளர் கரும்பிரிய வகம்பாயுங் கழுமலமே“
(மேகராகக் குறிஞ்சி - 6) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமுங் காண்க.
மூங்கின் முத்துக் குளிர்ந்த கிரணங்களும், யானை முத்துத் தொகுதியாய்க்
கூடிய ஒளியும் உடையன என்பர். இவற்றின் விரிவுகள் திருவிளையாடற்
புராணம் மாணிக்கம் விற்ற படலத்துள்ளும் பின்னும் இவைகட்குரிய
கலைஞான நூல்களுள்ளும் கண்டு கொள்க.

     முன்பாட்டினும் இப்பாட்டினும் கடலினின்றும் நாடு சென்று, அங்கு
நின்று மலையேறிச் செல்லும் பொருள் வைப்பு முறையும் காண்க. உயிர்களை,
அவை வீழ்ந்து நின்ற கடலாழத்தினின்றும் ஏற்றி மலையுச்சியிற் சேர்த்தி
வைக்கும் நாடு என்பது உட்குறிப்புப் போலும். இது பற்றியே வரும்பாட்டில்
உலகேறும் பெறுமை யுடையதுதான்“என்றதும் காண்க. “திருத்தொண்டத்
தொகையாலுலகு விளங்க வரும், பேறு தனக்குக் காரணராம்“ (501) என
முடித்துக் காட்டியபடி, இந்நாயனார் உலகிற்குதவிய பேறு இந்நாட்டின்
நன்மைக்குப் பொருத்தமுடைத்து எனப் பொருந்தக் காட்டிய குறிப்பும்
காண்க. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனக் கூறும் வைப்பு முறையை
(திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தும் பிற இடங்களிலும் காண்க.)
மாற்றி நெய்தலை முதலாக வைத்துக் கூறியதற்கும் இதுவே கருத்துப் போலும்.
அன்றியும், இந்நாடு மழுலீசியதாற், கடலினின்றும் போந்துபெற்ற நாடாதலின்
அப்பிறப்பிடத்தின் சிறப்பும் பண்பும் தோன்ற நெய்தலை முதலிற் கூறினார்
என்றலுமாம். சிருட்டி முறையிலும் நீரினின்றே நிலனுண்டாவதா மென்பர்.

     தீதிலாத் திருத்தொண்டத் தொகை (35) என்ற இடத்துப்பார்க்க.
வளன் பலவற்றுள்ளும் முத்துக்களை எடுத்துக் கூறிச் சிறப்புரைத்ததும்
அக்குறிப்பினைப் பற்றியதேயாம். என்னை? முத்து - விடுபடுவது என்ற
பொருள் தருதலானும், முத்தியும் அக்காரணம்பற்றியே அப்பெயர்
பெறுதலானும், இங்கு இந்நாடு நெய்தலேயாக - மருதமேயாக -
குறிஞ்சியேயாக - எங்கணும் உயிர்களுக்கு வீடுபேற்றினையே காட்டும்
முத்திப்பொருள் தருவதாம் எனப் பொருத்திக் கூறியபடி. திருமணம் காண
வந்தார்க்கெல்லாம் முத்திப் பேறளித்த எமது ஆளுடைய பிள்ளையா