பக்கம் எண் :


72 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     கால்பரந்து - வாய்க்கால்களிற் பரந்து - தனது கால்களினாற் பரந்து -
எனச் சிறு சொற்சிலேடையாதலும் காண்க.

     பூவிரைத்த - என்பதும் பாடம். 9

60. ஒண்டு றைத்தலை மாமத கூடுபோய்  
  மண்டு நீர்வய லுட்புக வந்தெதிர்
கொண்ட மள்ளர் குரைத்தகை யோசைபோ
யண்டர் வானத்தி னப்புறஞ் சாருமால்.
10

     (இ-ள்.) ஒண்...........போய் - ஒள்ளிய துறையிலே பெரிய மதகுகளின்
வழியே சென்று; மண்டு.......புக - செறிந்த புது வெள்ளம் வயலினுள் புகுதலும்;
வந்து.......சாருமால் - அதனை எதிர்கொண்டு அழைப்பதுபோல வந்து
மள்ளர்கள் மகிழ்ச்சியினால் ஆரவாரித்துக் கைகொட்டி அழைத்த
ஓசையானது தேவர்களது ஆகாய உலகத்திற்கும் அதற்கப்புறமும் சென்று
சேரும்:

     (வி-ரை.) துறைத்தலை மாமதகு ஊடுபோய் - அவ்வத்துறைகளில்
அமைக்கப்பெற்ற பெரிய மதகுகளுக்குட் புகுந்து அவ்வழியே சென்று.

     மண்டுநீர் - மலைப்பண்டங்களும், மேற் காட்டிய பிறவும் கலந்து
செறிந்து தெளிதலில்லாத புது நீர். இவ்வாறு பலவும் மண்டுதல் அந்நீரின்
செழுமைக்குக் காரணமாம் என்பது உழவு நூல். பயிர்க்கு உணவாம்
பொருள்களும், மக்களின் உடலுக்கு இனிதாம் பொன், தேன்
முதலியபொருள்களும் மிகமண்டுதல் குறிப்பு.

     வயல் உள்புக - மனிதரது முயற்சியின்றித் தானே இலகுவிற் புக
என்றபடி. இதனைக் காவிரி பாய்ச்சல் உள்ள இடங்களிற் சென்று கண்டு
களிப்பர் ஏனையோர். சோழநாட்டிற் காவிரியாறு அணை முதலியவற்றின்
உதவியின்றி ஆற்றிலிருந்து நேரே பிரிந்து, காலிலும், காவிலிருந்து மதகின்
வழி வயலிலும் புகுகின்றது. மதகு - கால்களில் வரும் நீரைப் பல
வயல்களுக்கும் அளவுபடுத்திப் பாய்ச்ச அமைக்கும் கட்டிட அமைப்பு.

     புக - வந்து - மள்ளர் முயற்சியாற் கொண்டுவரப்படாமல் தானே
சென்று உபகரிப்பதென்பார் - நீர்புகவும் - அதன் பின்னர் மள்ளர்
எதிர்கொண்டு வந்து என்றார். காவிரியானது உபகாரத்தின் சிறப்பும் இயல்பும்
கூறினாராகும்.

     எதிர்கொண்ட மள்ளர்
- மண்டு நீரினது வரவினை எதிர்வந்து
வரவேற்புச் செய்து கைகொட்டித் தம் மகிழ்ச்சியைக் காட்டுகின்றனர்
மள்ளர்கள் என்பது குறிப்பு. நீரின்றி உழவு அமையாது ஆதலின் புதுநீர்
வரவைக் கண்டு கை கொட்டி மகிழ்ந்தனர் மள்ளர். மகிழ்ச்சிக்கு அறிகுறியாக
இக்காலத்துக் கைகொட்டும் வழக்கம் இதனது பரம்பரை மரபின்
வந்ததுபோலும்.

     குரைத்த கை ஓசை - குரைத்த ஓசையும், கை (தட்டிய) ஓசையும்,
என்று தனித்தனி கூட்டி உரைக்க.

     அண்டர் வானம் - அண்டர்கள் வாழும் வானம்; தேவவுலகம்,
வயலில் நீர் புக்க பின்னரே உழவர் உழுதொழில் செய்யத் தொடங்குவர்.
ஆதலின் இப்பாட்டுத் தொடங்கி 25-வது பாட்டுவரை நீர்புகுதல் முதலாகப்
போகம்பெறுதல் ஈறாக உழவின் பல பகுதிகளிலும் முறையே கூறப்பெற்றமை
காண்க.

     வானத்தின் அப்புறம் - வானத்தினும், அதற்கு அப்புறமும், என
உம்மை விரித்து உரைக்க.

“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு”

என்பது ஆணையாதலின், சிறப்பும் பூசனையும், வானோர் பெறுதற்கு ஏது
உண்டாயின.