பக்கம் எண் :


1028 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     812. (வி-ரை.) இத்தனைபொழுது தாழ்ந்தேன் - முந்திய நான்கு
நாட்களினும் "வெயில்படுவெங் கதிர்முதிரு"ம் (792) நேரம்வர நண்பகலின்
முன்வேட்டை முடித்தார். இன்று "இரவியும் வான்றனிமுகட்டில் வந்தழல்
சிந்தக், கடும்பகல் வேட்டையில்" (திருமறம் - நக்கீரர்) என்றறியப்படுதலின்
ஞாயிற்றின் கதிர் முதிர்ந்து கடும்பகல் ஆயினபின் வேட்டை முடித்தார்.
ஆதலின் தாழ்த்தே கொன்றிரங்கினார். அன்பு மிகுதியாற் பொழுது
தாழ்த்ததாகத் தோற்றிற்று என்றுரைத்தலுமாம். "நீள் இருள்" (777) என்ற
விடத்துரைத்தவை பார்க்க.

     மொய்த்த பல் சகுனம் எல்லாம் - மொய்த்தல் - செறிதல். பல் -
பலப்பல. தொகையும் வகையும் குறித்தன. சகுனம் - பின்னர் வரும்
நன்மைதீமைகளைத் தமது காட்சி குரல் முதலியவற்றாலுணர்த்தும் பறவை
முதலியன. இவற்றை நிமித்தம் என்றும் கூறுவர். எல்லாம் - ஒன்று
போலவே யாவும்.

     முறை முறை - அவ்வவையும் தத்தம் பாங்கிலே. தீங்கு செய்ய -
செய்ய - என்றது எடுத்துக் காட்ட என்ற பொருளில் வந்தது. 700 - ம்
திருப்பாட்டில் குறிகள் என்ற விடத்துரைத்தவை பார்க்க.

     இத்தகு தீயபுட்கள் - புட்கள் - சகுனங்கள். அவற்றுள் காக்கை -
கருக்குருவியிடமாதல் கெடுதி குறிக்குமென்பர். "கூகையோ டாந்தை தீய,
புள்ளினமான தம்மிற் பூசலிட் டழிவு சாற்றும்" - (திருஞான - புரா - 632)
என்றபடி ஆந்தை கூகை கூவிப் பூசலிடுதல் அழிவு காட்டுவன.
செம்போத்துக் காணுதல் இரத்தப் பெருக்குக் காட்டு மென்று கூறுவர்.

     ஈண்ட - விரைய. காட்டும் - காட்டா நிற்கும். இச்சகுனங்களாற்
குறித்த பொருள் விரைவின் நிகழும் என்பது.

     கெட்டேன்! அத்தனுக்கு என்கொல் அடுத்தது? என மாற்றுக.
தமது அறிவெல்லாம் அத்தனையன்றி வேறொன்றும் அறியாமையால்
சகுனப்பலன் அத்தனுக்கு அடுக்கும் என்றறியவே மிக்க இரக்கம் வந்தது.
ஆதலின் கெட்டேன்! என்றார். பிறரெல்லாம் தங்கள் தங்களது நன்மை
தீமைகளையே முன்வைத்தெண்ணுவராதலின் இத்தன்மையான சகுனப்பலன்
தம்மைச்சாருமே என்றிரங்குவர். இங்குத் திண்ணனார் தம்மையும்
மறந்தனராதலின் அத்தனுக்கு அடுத்தது என் என்றனர். "ஆவியினினிய
வெங்க ளத்தனார்க் கடுத்த தென்னோ?" (818) என்று பின்னர்க் கதறுகின்ற
நிலை காண்க. கெட்டேன் - சகுனப்பலன் நிச்சயமாதலின் அத்துணிபுபற்றி
இறந்த காலத்தாற் கூறினார். சகுனப்புட்கள் உதிரங்காட்டும் என்றது
திண்ணனாருக்கு முன் அனுபவ வாசனையினாற் போந்த அறிவு.

     813. (வி-ரை.) அண்ணலார் - பெருமையினையுடையார்.
திண்ணனாரையும், அவரது பரிவு காட்டிய வழியால் முனிவனாரையும்
ஆட்கொள்ளும் கருணையின் பெருமைபற்றி இங்கு இப்பெயராற் கூறினார்.

     அடிகளார் - மிகப் பெரியவர். பெரியாரிலெல்லாம் பெரியார் என்றபடி.
அண்ணலார் அடிகளார் - என இரண்டு முறை பெருமையே குறித்தது
திண்ணனாரும் முனிவனாரும் ஆகிய மாறுபட்ட இருவரையும் ஒக்க
ஆட்கொண்ட பெருமையும், அதன் பொருட்டுத் தாம் உருவத்திருமேனி
தாங்கிநின்று கண்கள்போல உருக்காட்டி அவற்றில் மாயா காரியம்போன்ற
உதிரமும் காட்டிநின்ற எளிமையும் கருதியது.

     திண்ணனார் பரிவு - பண்புத் தற்கிழமைப் பொருளில் வந்த ஆறாம்
வேற்றுமைத்தொகை. பரிவு காட்ட - முனிவனார்க்குத் திண்ணனாரது
பரிவினைக் காட்டுதற்குக் கண்ணில் ஒன்றில் உதிரம்பாய, அது கண்டு
திண்ணனார் தமது கண்ணையிடந்து அப்ப, அச்செயல் அதனைத் தூண்டிய
பரிவினை எடுத்துக் காட்ட, அதனை முனிவர் காண என்றிவ்வாறு
ஒன்றனையொன்று பற்றிய சாதனமாய் உதிரம்பாய இருத்தல் பரிவு காட்டிற்று
என்க. "நீங்காக் குணத்துக் கோசரிக் கன்றவ, னேசங் "என்ற கல்லாடதேவர்
அருளிய திருமறமும் காண்க.