பக்கம் எண் :


1232 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

பொறிகளும், அவற்றை இயக்கும் காரணங்களும் என்க. மெய்யினைப்
புலன்கள் இயக்க, அப்புலன்களை உட்கரணங்கள் இயக்க, அவற்றை உயிர்
உணர்வு இயக்கும் என்பர். முன்னர் வாயிற்காட்சியுணர்வு தோன்றிப், பின்
மானதக்காட்சியுணர்வு தோன்றி, அதன் பின்னர்த் தன்வேதனையுணர்வு
உயிரின்கண் வந்து தோன்றும் எனவும், இதுவே பரம்பரையில் உணர்வு
தோன்றும் முறையாம் எனவும், சிவஞானமாபாடியும், 4. சூத், "மனமாதி"
என்ற உதாரணவெண்பாவின் கீழ் உரைத்தவை பார்க்க.

     மேவிய - ஒன்றாயின - ஒன்று - ஒன்றே. தேற்றமும் பிரிநிலையும்
குறித்த ஏகாரம் தொக்கது. உள்ளே வந்து பொருந்தி நிறைந்த இசை
யுணர்வாகிய ஒன்றேயாயின. இவற்றின் அமைதிபற்றி 251-252
திருப்பாட்டுக்களின் கீழ் உரைத்தவை பார்க்க. ஆல் - அசை. ஒன்றாய்
மேவினவால் எனக்கூட்டி, இயக்குதல் இயக்கப்படுதல் என்னும் வேறுபாடின்றி
ஒன்றாய் மேவின என்றலுமாம்.

     உருக்க - ஒன்றாயின - என்று கூட்டுக. உருக்க - உருக்கியதனால்.
காரணப்பொருளில் வந்த வினையெச்சம். அடித்தொண்டர் - சடையாரின்
திருவடியிலே பதிந்த அன்புடன், மன முதலாயின மூன்று கரணங்களாலும்
"அடியல்லது பேணாதார்" (934). மொய்வாச....அடித்தொண்டர் - ஆனாயர்,
செழுங்கொன்றை மருங்கணைந்து (945), சடையார்போல் நின்ற
அந்நறுங்கொன்றையினை நேர் நோக்கி நின்றுருகி (946), அதனை
உடையவராகவே கண்டு, அன்பு மடைதிறந்தாராதலின் அக்குறிப்புத் தோன்ற
இவ்வாறு கொன்றை முடிச்சடையார் எனக் கூறினார். இங்குக் கொன்றை
நீழலில் நின்று அன்புமடைதிறந்து இசைபெருக்கிய ஆனாயர், சடையாரின்
றிருவடி நீழலில் தாம் அமர்ந்திருப்பதாகிய ஒன்றிய சிந்தையினர் என்பார்
சடையார் - அடித்தொண்டர் என்று கூறினார்.

     தொண்டர் செவ்வாயின் - சுந்தரச்செங்கனிவாயும் துளைவாயும்
தொடக்குண்ண வைத்து ஊதியதனை (952) மிசைவைத்த என்றார்,

     வாசனை - வாசித்தல். வாசித்து (939), குழல் வாசனை (937, 965).
உருக்கியதனால் புலன்கரணம் ஒன்றாயின, ஒன்றாயினதன் விளைவை மேல்
உரைக்கின்றார். 36

962.



மெய்யன்பர் மனத்தன்பின் விளைந்தவிசைக் குழலோசை
வையந்தன் னையுநிறைத்து வானுந்தன் வயமாக்கிப்
பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவி னடம்புரியும்
ஐயன்றன் றிருச்செவியி னருகணையப் பெருகியதால்.



37

     (இ-ள்.) வெளிப்படை. மெய்யன்பரது அன்பினால் விளைந்த
குழலினது இசையோசையானது இந்த உலகத்தையும் நிறைவித்து
வானுலகத்தினையும் தன் வசமேயாகச் செய்து, பொய்யன்பினுக்கு
எட்டாதவரும், பொன்னம்பலத்தினில் திருக்கூத்து இயற்றுகின்றவரும்
ஆகிய ஐயரது திருச்செவியின் பக்கத்தில் அணையும்படி பெருகிற்று.

     (வி-ரை.) மெய்யன்ப ராதலின் அவரது மனத்து அன்பின் விளைந்த
குழலோசை ஐயர் செவியினருகணையப் பெருகியது என்பது குறிப்பு.
இதனையே வலியுறுத்துவார் பொய்யன்புக்கெட்டாத என்று எதிர்மறை
முகத்தானுங்கூறினார்.

     குழல் இசை ஓசை - என்க. இசை ஓசை - நிறைத்து - வயமாக்கி -
அணையப் பெருகியது
என்க.

     வையத்தை நிறைத்தல் - 955, 956, 959, 960 பாட்டுக்களினும்,
வானத்தை வயமாக்குதல் 957, 958 பாட்டுக்களினும் கூறினார்.
திருச்செவியினருகணையப் பெருகியதன் விளைவு மேல்வரும் மூன்று
பாட்டுக்களானுங் கூறுவார்.

     நிறைத்து - வயமாக்கி - பெருகுதல் - என்ற தொழிற்பாடுகளின்
உள்ளுறை குறிக்கத்தக்கது. தூல சூக்கும காரணநிலைகளுக்கேற்றவாறு
கூறியது கண்டு