பக்கம் எண் :


1262 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

ஊர்தியாகவுடையவராகிய சிவபெருமானது திருவடிகளையே உண்மையான
பற்றுக்கோடாகப் பற்றி விடாப்பிடியாகக்கொண்ட விருப்பத்தின் மிக்கவர்; 8

     976. (இ-ள்.) வெளிப்படை. நாடோறும் பெரிய காதல் கூர்ந்து
பொருந்த வரும் ஆசைபெருகி வேட்கையாகி விளைந்ததனாலே சுற்றமும்
துணையும் முதலாகிய கெடுதலில்லாத பதங்கள் எல்லாம் ஆளும்
பெருமானாகிய சிவனது திருவடித் தாமரைகளேயல்லாது வேறில்லாதவர்;
மூண்டு பெருகும் அன்பு என்றதனையே தமது உருவமாகக்கொண்டவர்;
அவர்தாம் மூர்த்தியார் என்ற பெயர் பூண்டவர்.

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     975. (வி-ரை.) அப்பொற்பதி - அ - முன்னர் "மும்மைப்
புவனங்களின் மிக்கது" (974) என்றும், "பங்கய மாகவத் தோட்டின் மேலாள்
தாழ்வின்றி யென்றும் தனி வாழ்வது" (971) என்றும் உரைக்கப்பட்ட அந்த
என்க. அகரம் முன்னறிசுட்டு பொற்பதி - பொன் - அழகு குறித்தது.
திருமகள் வாழும் நகரம் என்றலுமாம் பொன் வேய்ந்த சிகரங்களையுடைய
என்றலுமொன்று.

     வணிகர் குலம் - சீர்க்குடி - குலம் பெரும்பிரிவும், குடி
அதனுட்சிறு பிரிவும் குறித்தன. இங்குச் சீர்க்குடி என்பது வணிகர்
மூவகையுட் பெருங்குடி குறித்தது போலும். ஆன்ற தொன்மை என்றதற்கு
வேதம் முதலிய அறநூல்களுள்ளே தொன்று தொட்டு நாற்குலம் என்று
வழங்கும் பழமையுடைய என்பர்.

     செய்தவம் செய்ய வந்தார் - சீர்க்குடியானது தான் செய்யத்தக்க
தவத்தினைச் செய்ததனாலே - செய்த காரணத்தினாலே - அதனில்
வந்தவதரித்தார். குடி - குடியில் முந்தையோர். ஆகுபெயர். "அளவில்
செய் தவத்தினாலே" (662) என்றதும், அவ்வாறு கூறும் பிறவும் காண்க.
செய்ய
- செய்வதன்பொருட்டு என்று கொண்டு, செய்யத்தக்க தவமாகிய
சைவ தவத்தினைச் செய்வதற்காக வந்தார் என்றுரைத்தலுமாம். "தவஞ்செய்த,
நற்சார்பில் வந்துதித்து" (சிவஞானம் - 8 - 1) என்றதற்கு மீளத் தவஞ்
செய்தற்குரிய உயர்ந்தகுலத்தின்கண் வந்துதோன்றி என்று எமது மாதவச்
சிவஞானயோகிகள் உரைத்ததனை ஈண்டுச் சிந்திக்க. எப்பற்றினையும் -
யான் - எனது என்னும் அகப்பற்று புறப்பற்றுக்களுள் அடங்கிய
எல்லாவகைப் பற்றுக்களையும். உம்மை முற்றும்மை. மண் - பெண் -
பொன் என்ற மூவகைப் பற்றுக்களும் அவைபோன்ற உலகப்பற்றுக்கள்
யாவும் இவற்றுள் அடங்கும். மண், பொன் ஆகிய பற்றுக்களை
அறுத்ததனை 1008 - 1013 பாட்டுக்களிலும், பெண் ஆகிய பற்று
அறுத்ததனை 1014-லும் கூறியது காண்க. அறுத்து - தம்மைப் பற்றாதபடி
நீக்கி. இவை உயிரோடு பற்றிக்கட்டுவன ஆதலின் அந்தக் கட்டினை
அறுத்து என்றார். உருவகம். வலிமை பற்றிப் பெண்ணை வேறு பிரித்துக்
கூறினார்.

     தாள் மெய்ப்பற்று எனப்பற்றி - என்றதனால் முன்சொல்லிய
ஏனை எப்பற்றும் பொய்ப்பற்றாமென்பது. அவற்றை அறுத்ததற்கும் இதனைப்
பற்றுதற்கும் காரணம் கூறியவாறு. "பொன்னு மெய்ப் பொருளும்" என்ற
குறிப்புப்போலக் காண்க. "பொன்னும் மெய்ப்பொருளும்" = செல்வமும்
கல்வியும்; "போகமுந்திருவும்" = புத்தியும் முத்தியும்; முன்னைய இரண்டும்
சாதனங்கள்; பின்னையசாத்தியங்கள். "கேடில் விழுச்செல்வங் கல்வி"
"மெய்ப்பொருள் கல்வி" என்பன காண்க. திரு - "மோட்ச சாம்ராஜ்ய
லக்ஷ்மி" என்பர் வடநூலார். "பேய்த்தேர் நீரென்று வரும் பேதைக்கு
மற்றணைந்த, பேய்த்தே ரசத்தாகும் பெற்றிமையின்" (7 - 2) என்றும்
"பன்னிறத்துப், பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய் பொய்யா மெய்கண்டான்,
மெய்ப்பொருட்குத் தைவமாம் வேறு" (8 - 3) என்றும் வரும் சிவஞானபோத
உதாரண வெண்பாக்களா லுணர்த்தப்படும் உண்மைகளை இங்கு வைத்துக்
காண்க. இவ்வாறுணர்ந்து பற்றியதனாலே பதங்கள் எல்லாம்.