பக்கம் எண் :


உருத்திரபசுபதிநாயனார்புராணம்1341

 

     (வி-ரை.) அங்கண் - அங்கண்மையாவது எவ்வுயிர்கள் மாட்டும்
அருளுடைமை. இதற்கு அழகிய இடமுடைய என்றுரைப்பாருமுண்டு.

     அருமறை வாய்மை - சிவமாந் தெய்வத்தின்மேற் றெய்வமில்லை
என்னும் சைவ உண்மை.

     துங்க வேதியர் - துங்கம் - பெருமை - உயர்வு. இது வாய்மையான்
வந்த தென்பார் வாய்மைத் துங்கம் என்றார். "அந்தணர்தங் குடிமுதல்வர்",
"மரபிரண்டுஞ் சைவநெறி" முதலியவை காண்க. வைதிகத்தோடு சைவமும்
உடைமையே துங்கம் என்பது "விப்போத் துங்க" என்ற சிவபூசாஸ்த்தவ
வியாக்கியானத்துங் கூறப்பட்டது.

     தூயோர் - புறமும் அகமும் தூயராகுதல். இவற்றுள் அகத்தூய்மையே
சிறந்ததது. ஆயின், "புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை, வாய்மையாற்
காணப்படும்" (குறள்) என்றபடி, புறந்தூய்மை முன்வைக்கப்படும். என்னை?
அகக்கரணங்கள் தூயனவாதற்குப் புறக்கரணங்களின் தூய்மையே
சாதனமென்பது நூற்றுணிபு. ஆதலின் சாதனமாகியபுறத் தூய்மை முதற்கண்
வேண்டப்படுவது. நீரிற் குளித்தல் முதலியவற்றாற் புறுத்தூய்மை செய்தபின்
பூதசுத்தி செய்தல் மரபு.

     தூய்மை என்பது பற்றி "உண்பொழுது நீராடி யுண்டலு மென்பெறினும்,
பால்பற்றிச் சொல்லா விடுதலுந் தோல்வற்றிச், சாயினுஞ் சான்றாண்மை
குன்றாமை யிம்மூன்றுந், தூஉயமென்பார் தொழில்" (திரிகடுகம் 27) என்ற
நீதி நூலும் காண்க. இதனால் (உடல்) மெய்யின் றூய்மை கூறப்பட்டது. ஏனை
மொழி மனங்களின் றூய்மை மேல்வரும் பாட்டில் "வழுத்தும் தூய
அன்பொடு" என்றமையாற் கூறுவார்.

    செங்கண் மால்விடையார்- சிவந்த தாமரைக்கண்ணன் என்னும்
திருமாலாகிய விடையினையுடையவர் என்றலுமாம். "இடபமதாய்த் தாங்கினான்
றிருமால்" (திருவாசகம்), "மால்வரை" (17), "விடையவர்" (332) உரை பார்க்க.
"செங்கண்மால்விடையாய்" (தக்கேசி - ஆவடுதுறை - 1) என்ற நம்பிகள்
தேவாரமும் காண்க.

     பொன்மலை வல்லி - பொன்மலை- இமயமலை; "பொன்னின்
வெண்டிரு நீறு புனைந்தெனப், பன்னு நீள்பனி மால்வரைப் பாலது",
"பொன்மலைப் புலிவென் றோங்க" முதலியன காண்க. ஞாயிறு உதிக்கும்கால்
இதன் கொடுமுடிகள் பொன்னேபோற் றோன்றுதலின் இமயமலையும்
பொன்மலை எனப்படும். மலையரசன் மகளாராய் வந்தாராதலின்
உமையம்மையார் மலைவல்லி எனப்படுவர். வல்லி கொடி - கொடி போன்ற
அம்மையார். ஆகுபெயர்.

     தூயோர் - பசுபதியார் எனக் கூட்டிமுடிக்க. பெயர்ப்பயனிலை
கொண்டது.

     அடிமைத் திறம்புரி - புரிதல் - விரும்புதல். அடிமைத்திறம் -
உயிர்கள் எஞ்ஞான்றும் இறைவனுக்கு அடிமைகள் என்பது உண்மைநூன்
முடிபு. அதனை வேதம் உள்ளுறையாகக்கொண்டு நடுவில் வைத்துத்
திருவுருத்திரத்தினால் அறிவிக்கும். அவ்வுருத்திர மந்திரத்தை எப்போதும்
விரும்பிச் சொல்பவராதலின் அடிமைத்திறம் புரி என்றார். புரிதல் -
செய்தல் என்று கொண்டு, அடிமைத் திறத்திற்சாரும் செயல்களைச் செய்கின்ற
என்றுரைத்தலுமாம். அவை - மேவி (1035), பயின்றார் (1036), உய்த்திட
(1037) என்றவற்றாலுணர்த்தப்பட்டன. பசுக்கள் இறைவனைப் பதியாக
உடையன என்ற பொருள்கொண்ட பசுபதியார் என்ற பெயர்பூண்டமையாலும்
இது விளங்கும்.