பக்கம் எண் :


1386 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     தம்பரிவு பெருகவரும்- தமது அன்பு பெருகியதனால் அங்கு
வந்து கிடந்த. பெருக - பெருகியதனால் - காரணப் பொருளில்வந்த
வினையெச்சம். பரிவுபெருகியது பற்றி 1060 - 1065 பார்க்க.

     என்றேகி - என்பதுவும் பாடம். 29

1070.



"ஐயரே! யம்பலவ ரருளாலிப் பொழுதணைந்தோம்
வெய்யவழ லமைத்துமக்குத் தரவேண்டி" யெனவிளம்ப,
நையுமனத் திருத்தொண்டர் "நானுய்ந்தே" னெனத்தொழுதார்;
தெய்வமறை முனிவர்களுந் தீயமைத்த படிமொழிந்தார்.
   30

     (இ-ள்.) வெளிப்படை. "ஐயரே! அம்பலவர் வெவ்விய அழல் உமக்கு
அமைத்துத் தரும்படி அருளியபடியால் இப்பொழுது உம்மிடம் வந்தோம்"
என்று சொல்ல, நையும் மனத்தினையுடைய திருத்தொண்டராகிய நந்தனார்
"நான் உய்ந்தேன்" என்று தொழுதனர். தெய்வமறை முனிவர்களும்
அவ்வாறே தீயமைத்த செய்தியைத் தெரிவித்தார்கள்.

     (வி-ரை.) ஐயரே! - பெருமையுடையவரே! "ஐயர் நீரவதரித்திட
விப்பதி" (திருஞான - புரா - 179) முதலியவை பார்க்க. ஐயர் என்பது
பெருமையின்றியும் இடுகுறியளவாய் வெறும் சாதிப்பெயராய் மட்டும்
வழங்குதல் பிற்கால வழக்கு.

     அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம் - நீர்
பெருமையுடையீர்! ஆனால் உமது பெருமையினை நாங்கள் உணரவில்லை;
அம்பலவர் அருளிக் காட்டினர். இப்பொழுது - இப்பொழுதாயினும் கண்டு
அணையப் பெற்றோம் என்பது குறிப்பு. "காட்டுவித்தா லாரொருவர் காணா
தாரே, காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" என்றபடி அவன்
உணர்த்த உணர்ந்து இப்பொழுதே யணைந்தோம். அவர்
அருளவில்லையேல் இப்பொழுதும் அணையோம் என்றது குறிப்பு.

     வெய்யதழல் - வெம்மை - விருப்பம். இறைவன் விரும்பியருளிய
தழல்; அதனால் நீரும் விரும்பிய தழல். பிறர் வெப்பமாக்கொண்டு அஞ்சி
ஒதுங்கத்தக்கதும் நீர் விரும்பிப் புகத்தக்கதுமாகிய என்றலுமாம். பிறவியாகிய
வெப்பத்தைத் தணிப்பதற்கு உதவும் வெப்பத்தையுடைய என்று ஒப்புமுறை
மருத்துவ நூற்கருத்தைக் குறிப்பால் உணர்த்துவதும் காணத்தக்கது.
துணியின் அழுக்கை மற்றும் ஒரு அழுக்காகிய உவர்மண் கொண்டு
போக்குவதுபோல நந்தனாரது திருவுள்ளத்தில் இழிபிறவியென்ற
அழுக்கினைத் தீயைக்கொண்டு போக்கிக்காட்ட இறைவர் திருவுள்ளம்
பற்றினார் போலும்.

     தழல் அமைத்துத் தரவேண்டி - இறைவன் ஆணையின்படியே
யமைத்துத் தர வந்தோம். என்பதாம். தீயிற்குளித்து வரச் சொன்ன இதனை
இறைவர் தில்லை அந்தணர்க்கு அறிவியாது நந்தனாருக்கே அறிவித்துத்
தம்மிடம் வரச் செய்திருப்பினும் பொருந்துமே? எனின், இப்பிறவியின்
உணர்வுடனே "மன்றினடம் கும்பிடுவதெவ்வண்ணம்?" என்று வருந்திய
நந்தனாருக்கு வேள்விச்சாலை, வேதமடம் மூவாயிரம் ஆகுதிகள்
என்றிவற்றினிடையே முன்னை இழிபிறவியின் உடல் நீங்கிப், புண்ணிய
உடலுடன் போதுகின்றோம் என்ற உணர்வை விளைக்கவும்,
அவ்வுணர்வினொடும் வருதலை உடனிருந்து பார்த்துத் தொண்டரும்
ஏனைய உலகரும் அருளின் றிறமும் அன்பின் றிறமும் கண்டு உய்யச்
செய்யவும், ஆக இருபாலும் அறிவித்து மறையவரைத் தீயமைக்கச் செய்தனர்
என்க.