பக்கம் எண் :


எறிபத்தநாயனார்புராணம்763

 

     தொண்டர் அறிவதற்கரியார் - இஃதோர் உண்மையாகிய
பொதுவியல்பு. இதனை எறிபத்த் நாயனார் இச்சரித நிகழ்ச்சியின்
அனுபவத்திலிருந்து "தெள்ளிவடித் தறிந்தபொரு"ளாய் உணர்ந்து, அதனைத்
தோற்றுவித்த செம்பியர் பெருமையை யெண்ணி யெண்ணித் திளைக்கின்றார்.

     பெருமை உன்னி - அப்பெருமையினைத் "தொண்டர்தம் பெருமை
சொல்லவும் பெரிதே" என்றபடி சிந்தித்துக் கொண்டு. ஒரு அரசர்
வடிவுக்குள்ளே அறிதற்கரிதாய் நின்று அரசர் பெருமையினும் தொண்டர்
பெருமை மிக நிறைந்ததனை நினைந்து நினைந்து என்க. இப்
பெருமையினைப் பின்னரும் இவரது (பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்
சோழர்)
புராண முடிபிலும் காண்க. "எத்தொழிலைச் செய்தாலென்
ஏதவத்தைப் பட்டாலென் முத்தர் மனமிருக்கும் மோனத்தே" என்ற கருத்தும்
இங்குக் காணத் தக்கது.

     அடியார்க் கடாதன அடுத்தபோததனைத் தீர்த்தலில் முற்பட்டொழுகிய
எறிபத்த நாயனார், தம்மால் அடியார்க்கிடர் நேர்ந்ததாகக் கருதி
தம்முயிரினையே விடத் துணிந்த அரசரது மனப்பான்மையாகிய அன்பின்
பெருமையை உன்னினார் என்பதாம்.அவர் பெருமை கண்டபோது
தஞ்செயலும் தம் பெருமையும் கண்டாரில்லை என்க. 54

605.

மற்றவ ரினைய தான வன்பெருந் தொண்டு மண்மே
லுற்றிடத் தடியார் முன்சென் றுதவியே நாளு நாளு
நற்றவக் கொள்கை தாங்கி நலமிகு கயிலை வெற்பிற்
கொற்றவர் கணத்தின் முன்னாங் கோமுதற் றலைமை
                                   பெற்றார்.   55

     (இ-ள்.) வெளிப்படை. மற்று அவ்வெறிபத்த நாயனார்,
இத்தன்மைத்தாகிய வலிய பெருந்தொண்டினை இவ்வுலகிலே இடையூறுற்ற
இடத்திலே அடியார்களுக்கு முன்சென்று உதவியே நாளுநாளும் இவ்வாறு
(இந்த) நற்றவக்கொள்கையை மேற்கொண்டு செலுத்தி வந்து, நலமிக்க
திருக்கயிலை மலையில் இறைவரது திருக்கணங்களின் முதல்வர்க்கு
முதல்வராகும் கணநாயகத் தலைமையைப் பெற்றனர்.

     (வி-ரை.) மற்றவர் - மற்று - சிந்திக்கப்பட்ட அரசர் நிற்கச்,
சிந்தித்துச் சென்ற அவர் என வினைமாற்றுப் பொருளில் வந்தது. மற்று
- அசைநிலை யெனினுமாம். அவர் என்ற சேய்மைச் சுட்டும் அப்பொருள்
குறித்தது.

     வன்பெரும் தொண்டு - அன்பர்க்கடாதன அடுத்தபோதவற்றை
முரண்கெட மழுவினால் எறிந்து தீர்த்தலின் வன்றொண்டு என்றார்.
பேரிடர்களையும் பெருலீரங்கொண்டு தீர்த்தலானும் தொண்டருக்குச் செய்யும்
தொண்டாதலானும் அது பெருந் தொண்டு எனப்பெற்றது. வலிய பெரிய
தொண்டு என்க. இவர்தாம் தொண்டு செய்தலேயன்றி ஏனைய உரிமைத்
தொண்டர் செய்யும் தொண்டினையும் முட்டின்றிச் செய்யும்படி வழி
செய்தலானும் இவர் செய்தது பெருந்தொண்டு எனப்பட்டதாம்.

     தொண்டு, மென்றொண்டு வன்றொண்டு என இருவகைப்படும் என்று
கூறுவர். மென்றொண்டு, நியதியாகத் தாந்தாம் செய்யுமாறு நூல்களால்
விதிக்கப்பட்ட சரியை முதலாயின. உலகராற் செய்தற்கரியனவாய் உலகிறந்த
நிலையில் நூல்விதி கடந்து செய்யப்படுவன வன்றொண்டு எனப்படும். இங்குச்
சிவகாமியாண்டாரும் புகழ்ச்சோழரும், முருகர், தண்டியடிகள்,
குங்கிலியக்கலயர் முதலிய நாயன்மார்களும் செய்தமை மென்றொண்டின்
பாற்படும். இங்கு எறிபத்தரும் கோட்புலியார், செருந்துணையார், சத்தியார்
முதலிய நாயன்மார்களும் செய்தவை வன்றொண்டின் பாற்படும்.

     "மெல்வினையே யென்ன வியனுலகு ளோர்க்கரிய வல்வினையே
யென்ன வருமிரண்டுஞ் - சொல்லிற் சிவதன்மமாம்" - (16) என்பது
முதலாகவரும் திருக்களிற்றுப்படியாரும் காண்க.

     தொண்டு - உதவியே என்று கூட்டுக.