பக்கம் எண் :

522திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

புரிந்த பணியும் குறை முடித்தே - புரிந்த பணி - அமணர்களால் இடையூறு வருவதன்முன் ஒழியா முயற்சியா லுய்த்த பணி. (3596); குறை முடித்தல் - செய்ய நின்ற குறையினை நிறைவாக்குதல்; குறையாவது அப்போதைக்கு அளவுபடுத்திச் செய்த செய்கைகளை நிலைபெற நிறைவாக்க எஞ்சிநின்ற பணிகள். பணியும் - உம்மை உயர்வு சிறப்பு; அமண்வென்று தூய்மையாக்கியதன்றி என்று எச்சவும்மையுமாம்.
உன்னும்....ஓதி - அஞ்செழுத் தோதியவாறே பணிசெய்து; "ஓது மெழுத்தஞ் சுடனுய்ப்பார்" (3596).
வழுவாது ஒழுகியே - சிவநெறியில் இடையறாது ஒழுகி; வழுவுதல் - இடையறுதல். ஏகாரம் தேற்றம்.
அடிநீழல் மிக்க சிறப்பின் - அடி நீழலே சிறப்பு எனப்படுவது; எல்லாப் பேறுகளிலுஞ் சிறந்தமைபற்றி சிறப்பெனப்பட்டது. "சிறப்பென்னுஞ் செம்பொருள்" (குறள்).

25

3617
கண்ணின் மணிக ளவையின்றிக் கயிறு தடவிக் குளந்தொட்ட
எண்ணில் பெருமைத் திருத்தொண்டர் பாத மிறைஞ்சி யிடர்நீங்கி
விண்ணில்வாழ்வார் தாம்வேண்டப்புரங்கள் வெகுண்டார் வேற்காட்டூர்
உண்ணி லாவும் புகழ்த்தொண்டர் மூர்க்கர் செய்கை யுரைக்கின்றாம்.

26

(இ-ள்.) கண்ணின் மணிகள்....இடர் நீக்கி - கண்ணின் மணிகளாகிய ஒளியின்றிக் கயிற்றினைத் தடவி வழிகண்டு சென்று திருக்குளத்தினைக் கல்லிய எண்ணில்லாத பெருமையுடைய திருத்தொண்டராகிய தண்டியடிகளது திருவடிகளை வணங்கி இடையூறு நீங்கப் பெற்று; விண்ணில்....உரைக்கின்றாம் - வானுலகில் வாழும் தேவர்கள் வேண்டுதலுக் கிரங்கி முப்புரங்களையும் எரித்த இறைவரது திருவேற்காட்டூரில் அவதரித்த உள்ளே பெருகும் புகழினையுடைய தொண்டராகிய மூர்க்கநாயனாரது திருத்தொண்டாகிய செய்கையினைச் சொல்லப்புகுகின்றோம்.
(வி-ரை.) இஃது ஆசிரியர் தமது முறையின்படி இதுவரை கூறிப்போந்த சரிதத்தினை முடித்துக்காட்டி, இனி வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்தவாறு.
கண்ணின் மணிகள் - கண்களுள் ஒளி செய்யும் கூறு கண்மணி யெனப்படும்.
கண்ணின்....குளந்தொட்ட - சரிதச் சுருக்கமும் சாரமுமாய் வடித்தெடுத்துக் காட்டியவாறு.
தொட்ட - தொடுதல் - தோண்டுதல்; கல்லுதல். "தொட்டனைத் தூறு மணற் கேணி" (குறள்)
எண்ணில் பெருமை - எண்ணத்தில் நிலவி நிற்கும் தன்மையுடைய பெருமை என்றலுமாம். (எண்-நில்)
இடர் நீங்கி - இடர் - இடையூறு; மேற் சரிதங் கூறுதற்கு வரக்கூடிய அறியாமை முதலிய அக இடர்களும், பிறரால் வரும் புற இடர்களுமாம்; இறைஞ்சி - இறைஞ்சுதலால் எனக் காரணங் குறித்தது; அவர் செய்த திருப்பணிக்கு விலக்காக வந்த இடையூறுகள் நீங்கித் திருப்பணி முற்றியவாறே அவர் சரிதங் கூறி எமக்கு அவரைப் பணிந்ததன் பயனாக - துணையாக - மேற்சரிதங் கூறும் பணியில் வரும் இடையூறுகள் நீங்கி எமதுபணியும் நிறைவேறும் என்பது இடர்நீங்கி’ - என்றதனாற் போந்த குறிப்பு.