பக்கம் எண் :

[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 34. சாக்கிய நாயனார் புராணமும் உரையும்561

என்பது முதற்குறிப்பெச்சம் செய்வினை கூறவே செய்வான் முதலிய காரகங்கள் எட்டும் பெறப்படுமாயினும் தலைமையும் சிறப்பும் பற்றி வினைமுதலும் பயனும் வேறெடுத் தோதப்பட்டன. செய்வினை, வினைமுதலை யின்றி யாமென்பதூஉம், வினைதம் பயனைப் பயவா தென்பதூஉம், மலர் தன் பயனைப் பயவா தென்பதனோ டொக்கும். ஆகலின் அது பொய் வகையாதல் போலாகாமையின் அதனின் வேறாய இம்முறை மெய்வகை எனப்பட்டது. இஃது இற்றெனச் சிறிது ஆய்தல் செய்யின் மந்தர் தாமும் அறியக்கிடக்குமாகலின் அஃதியார்க்கும் இனிது விளங்குமென்பது தோன்ற "இவ்வியல்பு" எனவும், இத்தன்மைத்தாய உண்மையறிவு முற்செய்தவத்தானன்றி நிகழாதென்பது தோன்ற "உய்வகையா" னெனவும், மேற்கூறிய நெறி சிவத்தோடியைபுடைமையாற் பெற்ற பெயராகலின் அதுவேயிதுவென மேற்கூறிய மேற்கோளுக்கு உபநயம் பண்ணப்பட்டதென்பது தோன்ற "சிவமே பொரு" ளெனவும், இங்ஙனமாகலின் அது துணியப்பட்டதென்பது தோன்ற உணர்ந்தென்றொழியாது அறிந்தாரெனவும் உபதேசித்தருளினார். உடன்பாடு எதிர்மறையிரண்டானுங் கூறினார் வலியுறுத்தற் பொருட்டு.
திரு. ந. சிவப்பிரகாச தேசிகர் குறிப்பு: செய்வானும்.....எனக்கொண்டே - செய்யப்படும் புண்ணிய பாவங்களான கன்மங்களும், அவற்றைச் செய்யும் ஆன்மாக்களும், அக் கன்மங்களால் விளையும் சுகதுக்கங்களாகிய பயன்களும், அப்பயன்களை அவ்வான்மாக்களுக்கு ஊட்டுகின்ற சர்வக்ஞனாகிய பதியும் என்று வேதாகமங்களில் விதிக்கப்பட்ட பொருள்கள் நான்காகுமென்று கருதி; நெறி - சமயம்; சேர்ப்பானாகிய உண்மைப் பரம்பொருள் சிவனே; அருளாலே உணர்ந்து அறிந்தார் - "அருளினா லாகமத்தே யறியலாம்" (சித்தி); செய்வான் - சேர்ப்பான் - அல்ல - வினையாலணையும் பெயர்கள்; அருளாலே - அச் சிவனருளாலே; "அவனருளாலே அவன்றாள் வணங்கி" (திருவா); செய்வினை -வினைத்தொகை.

5

3641
"எந்நிலையி னின்றாலு மெக்கோலங் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்றாண் மறவாமை பொரு" ளென்றே
துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவந்
தன்னைமிகு மன்பினான் மறவாமை தலைநிற்பார்,

6

வேறு

3642
"எல்லா முடைய வீசனே யிறைவ" னென்ன வறியாதார்
பொல்லா வேடச் சாக்கியரே யாகிப்புல்ல ராகுவார்
அல்லார் கண்டர் தமக்கிந்த வகில மெல்லா மாளென்ன
வல்லா ரிவரவ் வேடத்தை மாற்றா தன்பின் வழி நிற்பார்,

7

வேறு

3643
"காணாத வருவினுக்கு முருவினுக்குங் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம்
நாணாது நேடியமா னான்முகனுங் காணநடுச்
சேணாருந் தழற்பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய்,

8

3644
நாடோறுஞ் சிவலிங்கங் கண்டுண்ணு மதுநயந்து
மாடோர்வெள் ளிடைமன்னுஞ் சிவலிங்கங் கண்டுமனம்