பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)204

கூறிய குறிப்புமுடையது. கண்ணாளன் - கண்ணுதல் - எண்ணுதல் - நினைத்தல்;
உயிர்களின் ஆக்கத்தையே நினைப்பவன் என்ற குறிப்பும் உடையது.           29
 

கட்டளைக் கலித்துறை
 

 
தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் றாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை போலயர் வேற்கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேற் றிரையென்னுங் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி லாதிவ் விரிகடலே.                 30
 
     (இ-ள்) தாழ்ந்து....போல் - கீழ்த் தாழ்ந்து கிடந்த சடையினை முடியாகவுடைய
சங்கரரது திருவடிகளைப் பணியாமல் பிறவியிலே ஆழ்ந்துகிடந்து
வருந்துகின்றவர்களுடைய கிளைபோல; அயர்வேற்கு இரங்கி - வருந்தி யிளைக்கும்
எனக்கு இரங்கி; சூழ்ந்து....விரிகடலே - சுற்றிலும் சூழ்ந்துகிடந்த கரையின் மேலே
அலையென்னும் கையினை மோதி வீழ்ந்து கிடந்து சத்தித்து உறங்காமலிருக்கின்றது
இந்த விரிந்த கடல்.
 
     (வி-ரை) திணை - கைக்கிளை; துறை - கடலொடு புலம்பல்; அயர்வேற்கு
இரங்கி விரிகடல் துயிலாது என்க. இரவில் கடல் மிகுந்த அலைகளை யுடைமையும்
காண்க.
 
     தாழ்ந்து கிடந்த சடைமுடி - தொங்கிய சடையினையே முடியாக உடையவர்;
“சடைமுடி சாட்டியக் குடியார்க்கு” (திருவிசைப்பா); சங்கரன் - சுகத்தைச் செய்பவன்
என்ற பொருட்குறிப்பிற் கூறிய பெயர்; பணியாது.....கிளைபோல் -
சங்கரனைப்பணியாதார் கிளையுடன் வருந்துவர் என்ற உண்மையினை வற்புறுத்த
எழுந்த உவமை; வினைபற்றி எழுந்தது. கிளைபோல அயர்வேன் என்றது “பெற்றும்
பெறாரி னழுங்கி” என்றபடி, பெரியோர் தம்மைச் சிறியோரின் வைத்து வருந்தி
யிரங்கும் நிலை.
 
     அயர்வேற்கு இரங்கிக் கடல் துயிலாது என்றது இரவிற் றுயில்பெறாது
வருந்தும் எனது துயரங்கண்டு இரங்கிக் கையெறிந்து தானும் துணையாய்த்
துயிலாதிருந்தது என்றதாம்; திரை என்னும் கை எறிந்து - துயருறுவாரைக் காணிற்
கருணையாளர் கையெறிந்து இரங்குதல் குறித்தது; தற்குறிப்பேற்றம். கையெறிதல் -
வீழ்தல் - அலறுதல் - துயிலாதிருத்தல் - இவை ஒருவரது துன்பத்திற்கிரங்கி
அன்பினால் உற்றதுணையாளர்பால் நிகழும் செயல்கள். விரிகடல் - முதலும் முடிவும்
மண்டலித்து முடிந்தது.
 
     “என் கண்ணுளெப் போதும் வருகின்றவே” (பொன். அ. 20) என்றபடி இரவும்
துயிலாது இறைவனை நினைந்து கிடப்பேனுக்கு அவனது அருளின் கடல் துணையாய்
உடனிற்கின்றது என்றதொரு உட்குறிப்புத்தந்து முடித்தல் கண்டு கொள்க.       30
 
     சேரமான் பெருமாள் நாயனார் என்னும் கழறிற்றறிவார் நாயனார் அருளிய
திருவாரூர்த் திரு மும்மணிக் கோவையும், அதற்குக் கோவை - சிவக்கவிமணி - C. K.
சுப்பிரமணிய முதலியார், B.A., எழுதிய உரையும் முற்றுப் பெற்றன.
 

கழறிற்றறிவார் நாயனார் திருவடி வாழ்க!
திருச்சிற்றம்பலம்
- - - - - - -