பக்கம் எண் :

பெரியபுராணம்215

பழந்தமிழ் மன்னர்கள் தத்தம் நாட்டின் பெரும் பகுதிகளுக்கு மரபுப் பெயராய்ப் பல
திறப்பட இட்டு வழங்கியமை சரிதங்காட்டும் கல்வெட்டுக்களாலறியப்படும்.
 
     கவர்ந்து - ஆறிலொன்று கோடல், சுங்கம் முதலாகிய நீதிமுறையானன்றிப் படை
வலிமையாற் கைக்கொண்டு என்பது குறிப்பு.
 
     முடி ஒன்றும் ஒழிய - அரசர்க்குரியனவாய்க் கூறும் பத்துச் சிறப்பு
அடையாளங்களுள் (தசாங்கம்) நவமணி முடியாகிய ஒன்று மட்டும் நீங்கலாக.
 
     அரசர் திரு எல்லாம் - அரச அடையாளங்களே யன்றி அரச செல்வங்களும்
அங்கங்களும் முதலிய எல்லாமும். எல்லாமும் - முற்றும்மை தொக்கது.
 
     ஒன்றும் - என்றதில் உம்மை விரித்தது அஃது இச்சரித விளைவுக் காதாரமாதல்
பற்றி.
 
     திறம் கமழும் - என்பதும் பாடம்.                                3
 
3933. மல்லன் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழந் தணர்தம்மை வேண்ட வவருஞ் “செம்பியர்தந்
தொல்லை நீடுங் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோ முடி”யென்று
நல்கா ராகிச்
சேரலன்றன் மலைநா டணைய நண்ணுவார்,             4
 
3934. ஒருமை யுரிமைத் தில்லையந் தணர்க டம்மி லொருகுடியைப்
பெருமை முடியை யருமைபுரி காவல் பேணும் படியிருத்தி
இருமை மரபுந் தூயவர்தாஞ் சேரர் நாட்டி லெய்தியபின்,
வருமை யுறவான் மனந்தளர்ந்து மன்று ளாடுங் கழல்பணிவார்,     5
 
3935.     அற்றை நாளி லிரவின்க “ணடியேன் றனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர்ப்பாதம் பெறவே வேண்டு” மெனப்பரவும்
பற்று விடாது துயில்வோர்க்குக் கனவிற் பாத மலரளிக்க
உற்ற வருளா லவைதாங்கி யுலக மெல்லாந் தனிப்புரந்தார்.             6
 
     3933. (இ-ள்) மல்லல்....ஞாலம் புரக்கின்றார் - செழுமையுடைய நிலவுலகத்தைக்
காக்கின்றாராய்; மணி.....வேண்ட - நவமணிகளையுடைய பெரிய மகுடத்தைச்
சூட்டுதற்காகத் தில்லைவாழந்தணர்களை வேண்ட; அவரும்.....நல்காராகி - அவர்களும்
சோழர்களது தொன்றுதொட்டு வரும் குல முதல்வர்களுக் கல்லாமல் பிறருக்கு
முடிசூட்ட மாட்டோம் என்று முடியினைச் சூட்டாராகி; சேரலன்றன்.....நண்ணுவார் -
சேரமன்னரது மலைநாட்டினைச் சேர நண்ணுவார்களாகி;                    4
 
     3934. (இ-ள்) ஒருமை...இருத்தி - ஒருமையுடைய உரிமை பூண்ட
தில்லைவாழந்தணர்கள் தங்களுக்குள் ஒரு குடியினைப் பெருமை கொண்ட அந்த
மணிமகுடத்தினை அருமையாகக் காவல் புரியும்படி தங்கி இருக்கும்படி வைத்து;
இருமை...எய்தியபின் - இருமரபுந் தூயவர்களாகிய அவர்கள் சேரர் நாட்டிற் சேர்ந்த
பின்பு; வரும்....தளர்ந்து - வரும் ஐயப்பாட்டினாலே மனம் தளர்ச்சியடைந்து;
மன்றுள்....பணிவார் - (கூற்றுவனார்) தில்லையம்பலத்தில் ஆடல் புரிகின்ற
திருவடியைப் பணிவாராய்,                                            5
 
     3935. (இ-ள்) அடியேன்...துயில்வோர்க்கு - அடியேனுக்கு தேவரீரது மலர்
போன்ற பாதங்களை மணிமுடியாகப் பெற்ற பேறு அடியேன் பெறவேண்டும்