| உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
| 40. பொய்யடிமையில்லாத புலவர் புராணம் - - - - - |
| தொகை |
| | | “பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்” | |
| - திருத்தொண்டத் தொகை - (7) |
| வகை |
| | “தரணியிற் பொய்மை யிலாத்தமிழ்ச் சங்க மதிற்கபிலர் பரணர்நக் கீரர் முதனாற்பத் தொன்பது பல்புலவோர் அருணமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே” | |
| - திருத்தொண்டர் திருவந்தாதி - 49 |
| விரி |
| 3939. | “செய்யுணிகழ் சொற்றெளிவுஞ் செவ்வியநூல் பலநோக்கும் மெய்யுணர்வின் பயனிதுவே” யெனத்துணிந்து விளங்கியொளிர் மையணியுங் கண்டத்தார் மலரடிக்கே யாளானார் பொய்யடிமை யில்லாத புலவரெனப் புகழ்மிக்கார். 1 |
சருக்கம்;- இனி, நிறுத்த முறையானே, எட்டாவதாகத் திருத்தொண்டத் தொகையினுள் “பொய்யடிமையில்லாத புலவர்” என்று தொடங்கும் திருப்பாட்டிற் றுதிக்கப்படும் அடியார்களது பண்பு கூறும்பகுதி; அவராவார் பொய்யடிமை யில்லாத புலவர், புகழ்ச்சோழர், நரசிங்க முனையரையர், அதிபத்தர், கலிக்கம்பர், கலியர், சத்தியார், ஐயடிகள் காடவர்கோன் என்னும் எண்மராவார். |
புராணம்;- அவருள், நிறுத்த முறையானே, முதலாவதாகப் பொய்யடிமையில்லாத புலவர் பண்பு கூறத்தொடங்குகின்றார். பொய்யடிமையில்லாத புலவர் என்ற கூட்டத்தார்களது பண்பு கூறும் பகுதி; திருக்கூட்டத்தவர்களாதலின் சரித வரலாறு கூறுதற்கியைபின்மையுணர்க. இவர்கள் பண்பினால் மட்டும் அறியப்படுவர். தில்லை வாழந்தணர், பத்தராய்ப் பணிவார் முதலியவர் புராணங்கள் பார்க்க. |
தொகை;- பொய்யடிமையில்லாத புலவர் என்று கூறப்படும் திருக்கூட்டதினைச் சேர்ந்த அடியார்களுக்கு நான் அடியேனாவேன். புலவர் - பலபேர் என்பது. |