பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்250

3962. மலையொடு மலைகள் மலைந்தென, வலைமத வருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசைத்தெறுங், கொலைமத கரிகொலை யுற்றவே.
 
     (இ-ள்) மலையொடு....மலைந்தென - மலையோடு மலைகள் பொருதனபோல;
அலைமத...கொழிப்பொடு - அலைபோலப் பாயும் மதமாகிய அருவியின் ஆர்ப்புடனே;
சிலையினர்.....தெறும் - மேலேறிய வில்வீரர்களின் செலுத்துகின்ற வேகத்தினும் அழிவு
செய்யும் தன்மையுடைய; கொலை.....கொலையுற்றவே - கொலை செய்கின்ற யானைகள்
தாமும் கொலையுண்டன.
 
     (வி-ரை) மலையொடு....மலைந்தென - யானைகள் ஒன்றோடொன்று
முட்டிப்பொருதல் மலைகள் பொருவன போன்றன என்பதாம்; மெய்யும் வினையும்பற்றி
வந்த உவமம். இவ்வடி முற்றுமோனை. “மலைகளுடன் போதுவ போன்ற” (3795).
 
     அருவி கொழிப்பொடு....தெறும் - என்று கூட்டுக. மலைகளை உவமை
கூறியதனால் அருவியும் ஈரிடத்தும் ஒக்குமென்றவாறு.
 
     சிலையினர் - மேலேறிக் கடவும் வில்வீரர்கள்; விசையின் - இன் - ஒப்புப்
பொருளில் வந்த ஐந்தனுருபு.
 
     விசையின் - கடவி ஏவும் விசையினாலே என ஏதுப் பொருள் கொள்ளலுமாம்.
 
     கொலை மதகரி கொலையுற்ற - ஒரு யானையைக் கொலைசெய்த யானை
தானும் பிறிதொன்றதனாற் கொலையுண்டது; இவ்வாறு பல - என்பார் உற்ற என -
அகரவீற்றுப் பலவறி சொல்லாற் கூறினார். கொன்றான் கொல்லப்படுவான் என்று
வினைப்பயன் பற்றிய ஞானநூற் கருத்துப்பட நின்ற குறிப்பும் காண்க.
இப்பாட்டால் யானைப் போரின் மூண்டநிலை கூறப்பட்டது.                21
 

வேறு
 

3963. சூறை மாருத மொத்தெதிர், ஏறு பாய்பரி வித்தகர்,
வேறு வேறு தலைப்பெய்து, சீறி யாவி செகுத்தனர்.                  22
 
     (இ-ள்) சூறை மாருதம் ஒத்து - சூறாவளியைப் போன்று; எதிர்....வித்தகர் -
எதிரெதிராக ஏறுதலைக்கொண்டு பாய்கின்ற குதிரை வீரர்கள்; வேறு....செகுத்தனர் -
வெவ்வேறாக எதிர்த்துச் சினந்து ஒருவரை யொருவர் கொன்றனர்.
 
     (வி-ரை) சூறை மாருதம் - சூறாவளி; மிக்கவேகமாய் எறியும் சண்டமாருதம்;
வாயுவேகம் என உவமிக்கும் மரபுபற்றிக் கூறினார்.
 
     எதிர் ஏறுபாய் - எதிர்த்துச் செல்லும் ஏற்றத்தினை மேற்கொண்டு பாயும்; ஏறு
- ஏறுதல்; முதனிலைத் தொழிற்பெயர்; ஏறு - பரி என்று வினைத்தொகையாகக்
கொள்ளினும் அமையும்.
 
     பரிவித்தகர் - குதிரை வீரர். பரி - குதிரையினைச் செலுத்தும் வித்தை;
வித்தகம் - அறிவு. வித்தகர் - சதுரப்பா டுடையவர். “வித்தகர்க் கல்லா லரிது”
(குறள்).
 
     தலைப்பெய்தல் - ஒரு சொல். கூடுதல் - முட்டுதல்.
 
     பரிகளை ஆவி செகுத்தனர் என்றலுமாம்.
 
     இப்பாட்டால் குதிரைப்போர் மூண்டநிலை கூறப்பட்டது.              22
 
3964. மண்டு போரின் மலைப்பவர், துண்ட மாயிட வுற்றெதிர்,
கண்ட ராவி கழித்தனர், உண்ட சோறு கழிக்கவே.                 23