இம்மையில் இல்வாழ்க்கையினை யுடைய ஒருவர் (நாயனார்) பற்றறக் களைந்ததனால் இவரது மேன்மை புலப்படும். பெரும்பற்று - விடுதற்கருமை குறித்தது. |
புரை அற எறிதலாவது - அப்பற்றுத் தம்மிடம் சிறிதும் சாராது முற்றக்களைதல்; வாகீசர் முன்பு திருமுற்றத்தில் பொன்னினொடு நவமணிகள் பொலிந்திலங்க இறைவர் அருளியதும், அவற்றை அவர் பூம்பொய்கையில் எறிந்ததுமாகிய வரலாறு ஈண்டு நினைவுகூர்தற்பாலது. இகல் - ஒப்பு; இகல் - வெறுப்பு என்று கொண்டு அதனை இறைவர்க்கு ஆகும் பண்டமாக இகலின்றி விரும்பிய சிறப்பு என்றலுமாம். புரையற - என்றதும் அக்குறிப்புடையது; தேவர் (பொழிந்தனர்) என்ற எழுவாய் அவாய் நிலையான் வருவிக்கப்பட்டது, மாரி பொழிதற்குரியார் அவரே யாகலின். 18 |
4010. | பஞ்ச நாதமு மெழுந்தன; வதிபத்தர் பணிந்தே யஞ்ச லிக்கரஞ் சிரமிசை யணைத்துநின் றவரை நஞ்சு வாண்மணி மிடற்றவர் சிவலோக நண்ணி யஞ்சி றப்புடை யடியர்பாங் குறத்தலை யளித்தார். 19 |
(இ-ள்) பஞ்ச....எழுந்தன - ஐவகைத் தேவவாத்தியங்களும் எழுந்து ஒலித்தன; அதிபத்தர்...நின்றவரை - நிலமுற விழுந்து வணங்கி எழுந்து குவித்த கைகளைச் சிரமேற் கூப்பி நின்றவராகிய அதிபத்தரை; சிவலோகம்.....பாங்கு உற - சிவலோகத்தைச் சேர்ந்து அழகிய சிறப்பினையுடைய அடியார்களோடு இருக்கும்படி; நஞ்சு.....மிடற்றவர் - விடமுண்ட ஒளிபொருந்திய கண்டத்தினையுடைய இறைவர்; தலையளித்தார் - திருவருள் பாலித்தார். |
(வி-ரை) (அதிபத்தர் நின்றார்;) நின்றவராகிய அவரை என்று கூட்டுக; நின்றவரைப் பாங்குறத் தலைஅளித்தார் - என்க. |
தலையளித்தல் - ஒரு சொல்; சிறந்த அருள் வழங்குதல்; தலையளி - பெருங்கருணை. |
நஞ்சு வாண்மிடறு - கரிய நஞ்சு நீலமணிபோல விளங்கும் கழுத்து. வாள் - ஒளி. |
சிவலோகம்.....பாங்குற - இவ்வுலகில் அடியாரோ டிருத்தலன்றி மீளா நிலையிற் சிவலோகத்திலும் அடியார்களோடிருக்க. தஞ்சிறப்புடை - என்பதும் பாடம். 19 |
4011. | தம்ம றம்புரி மரபினிற் றகும்பெருந் தொண்டு மெய்ம்மை யேபுரி யதிபத்தர் விளங்குதாள் வணங்கி மும்மை யாகிய புவனங்கண் முறைமையிற் போற்றுஞ் செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம். 20 |
(இ-ள்) தம்மறம்புரி....வணங்கி - கொலைத்தொழில் புரியும் தமது மரபுக்குரியபடி நின்றவாறே தகுதியாகிய பெரிய திருத்தொண்டினை உண்மையிற் பிறழாது செய்த அதிபத்த நாயனாரது விளக்கம் செய்யும் திருவடியை வணங்கி (அத்துணை கொண்டு); மும்மையாகிய...பகர்வாம் - மூன்று உலகங்களும் முறைமையினாற் போற்றுகின்ற செம்மையுடைய நீதியினை உடையராகிய கலிக்கம்ப நாயனாரது திருத்தொண்டினைச் சொல்வோம். |
(வி-ரை) ஆசிரியர் இதுவரை கூறிவந்த புராணத்தை முடித்துக் காட்டி, இனி வரும் புராணத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். |