பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்288

4008. என்று மற்றுளோ ரியம்பவு மேறுசீர்த் தொண்டர்
“பொன்றி ரட்சுடர் நவமணி பொலிந்தமீ னுறுப்பால்
ஒன்று மற்றிது வென்னையா ளுடையவர்க் காகும்;
சென்று பொற்கழல் சேர்”கெனத் திரையொடுந் திரித்தார்.          17
 
     (இ-ள்) என்று...தொண்டர் - முன் கூறியவாறு மற்றுள்ளோர் சொல்லவும்
அதுகேட்ட ஏறுகின்ற சிறப்புடைய தொண்டராகிய அதிபத்தர்; பொன்.....ஆகும் -
பொன்னும் தொகுதியாகிய சுடரினையுடைய நவமணிகளும் விளங்கும் மீன்
உறுப்புக்களாற் பொருந்துகின்ற வேறாகியஇது என்னை ஆளுடைய இறைவருக்கே
ஆகும். அவரது பொன்னார்ந்த திருவடிகளிற் சேர்க என்று அலையில் சுழல
விடுத்தனர்.
 
     (வி-ரை) என்று....இயம்பவும் - என்று - “மீனொன்று படுத்தனம்” என்று;
மற்றுளோர் - பரிசனங்களாகிய பரதவர்.
 
     ஏறுசீர் - மிகுகின்ற சிறப்பு; ஏறும் - சிவனடியில் எறப்பெறும் என்றதும் குறிப்பு.
தொண்டர் - அதிபத்தர்.
 
     ஒன்றும் மற்று இது - ஒன்றுதல் - பொருந்துதல்; மற்று - ஏனைய மீன்களின்
வேறாகிய என்பது.
 
     சென்று பொற்கழல் சேர்க - மீனினை விடும்போது அதனை நோக்கி
அதிபத்தர் சொல்லியது. நிவேதிக்கும் வகை. (4002 - 4004).
 
     திரையொடும் திரித்தார் - ஒடு - உருபு திரையின் கண் என வேற்றுமை
மயக்கம்; திரித்தல் - சுழலவீசுதல், கரையின்றும் கடலில் வீசுகின்றாராதலின்
அலையினடுவுட் சேரும்படி சுழற்றி வீசினார் என்க.
 
     இது என்னை ஆளுடையவர்க்கு ஆகும் - உயர்ந்த பொருளாதலின்
இறைவருக்கே உரியது என்றபடி. “விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று”
(பட்டினத்தார் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 28); உடையவர்க்கே என்ற
பிரிநிலை ஏகாரம் தொக்கது.                                          17
 
4009. அகில லோகமும் பொருண்முதற் றாமெனு மளவிற்
புகலு மப்பெரும் பற்றினைப் புரையற வெறிந்த
இகலின் மெய்த்திருத் தொண்டர்முன் னிறைவர்தாம் விடைமேன்
முகில்வி சும்பிடை யணைந்தனர்; பொழிந்தனர் முகைப்பூ.            18
 
     (இ-ள்) அகில....புகலும் - எல்லா வுலகுகளும் பொருளையே முன்னாகக்
கொண்டு செல்லும் என்னும் பிரமாணத்தோடு சொல்லப்படுகின்ற;
அப்பெரும்....தொண்டர்முன் - அந்தப் பெரிய வலிய பொன்னாசை என்னும் பெரும்
பற்றினைக் குற்றமற நீக்கிய ஒப்பற்ற மெய்த் திருத்தொண்டர் முன்னே;
இறைவர்.....அணைந்தனர் - இறைவர் இடப வாகனத்தின்மேல் முகில்படியும்
ஆகாயத்தில் எழுந்தருளிவந்தனர்; பொழிந்தனர் முகைப்பூ - (தேவர்கள்) கற்பகப்
பூமழை பொழிந்தனர்.
 
     (வி-ரை) அகில.....எனும் - எவ்வுலகினும் எச்செயலும் பொருளன்றி யில்லை
என்னும் உண்மை; பிரமாணம்; ''பொருளிலார்க்கிவ்வுலகமில்லா தியாங்கு'' (குறள்)
“முனிவரு மன்னரு முன்னுவபொன்னான் முடியும்” (திருக்கோவை - 332);
முனிவருக்கும் தங்கரும முடிக்க இன்றியமையாது வேண்டற்பாலதாகிய பொருளை,