பக்கம் எண் :

பெரியபுராணம்287

     உலகடங்கலும் விலையாம் பான்மை - விலை மதிப்புப் பற்றிக் கூறியது,
இந்நாயனார் மீன் விலைப்படுத்தி உண்ணும் வாழ்வினராதலின் இதன் பெருவிலை பற்றி
ஆசைகொள்ளார் என்பது உணர்த்த இறைவர் அமைத்த நிலை காட்டுதற்கு.
     அற்புதப்படியது - அற்புதம் - காணுந்தோறும் புதிது புதிதாய் விளையும்
பெருமித உணர்வு. இவ்வுணர்வை விளைக்கும் தன்மையினை உடையது; படி - தன்மை;
படியது - தன்மையினை உடையது.
 
     ஒன்று - இரண்டேனும் பலவேனும் வரின் ஒன்று இறைவனுக்கு விடுப்பர்.
ஒன்றேவரின் விடுப்பரோ என்ற ஐயமின்றி உலகர் காண; காளத்திநாதர் தமது
இடக்கண்ணிலும் குருதி சோர நின்ற திருவுள்ளக் குறிப்பு ஈண்டு வைத்து கருதற்பாலது.
 
     இடுவலை - நாயனாரது ஆட்கள் இடும் வலையின்கண்.
 
     படுத்தார் - படுப்பித்தார்; படச் செய்தருளினர் (அமுது உண்பார்) என்க.
 
     தூ.....படியது - “ஒரு நாட்கனக, நிறமமர் மீன்பட” என்ற வகைநூற் கருத்தினை
விரித்தருளியவாறு.
 
4007.    வாங்கு நீள்வலை யலைகடற் கரையில்வந் தேற
ஓங்கு செஞ்சுட ருதித்தென வுலகெலாம் வியப்பத்
தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலு மெடுத்துப்
பாங்கு நின்றவர் “மீனொன்று படுத்தன” மென்றார்.               16
 
     (இ-ள்) வாங்கு....ஏற - மீன்வாரி இழுக்கப்பட்ட நீண்ட வலையானது
அலைகளையுடைய கடற்கரையில் வந்து ஏற; ஓங்கு......காண்டலும் - (அதிற்பட்ட மீன்)
ஓங்கும் ஞாயிறு உதயமானாற்போல உலகெலாம் அதிசயிக்கும்படி அமைந்த பெரிய
ஒளிவீசக் காண்டலும்; எடுத்து.....என்றார் - அதனை எடுத்து அருகு நின்ற பரதவர்கள்
மீன் ஒன்றைப் பிடித்தோம் என்று சொன்னார்கள்.
 
     (வி-ரை) வாங்கு நீள்வலை.....ஏற - வாங்குதல் - இழுத்தல். மீன்படுக்கக்
கடலில் வீசிய நீண்ட வலையினை மீன்பட்டவுடன் இழுத்துப் படவிலேனும்
கரையிலேனும் சேர்ப்பர்; நீள்வலை - கடல் வலைகளின் பெருநீளத்தைக் குறித்தது;
கரையில் வந்தேற - அலைகளினூடே கரையில் வந்து சேர்ந்து எடுக்கப்பட; வாங்கு -
வளைந்த என்றலுமாம்.
 
     ஓங்கு செஞ்சுடருதித்தென - தூநறும் பொன்னும் நவமணிகளும் மீனுறுப்பாக
அமைந்ததாகலின் சூரிய ஒளி வருதல்போல என்றார். மெய்பற்றி வந்த உவமம்;
சூரியன் உதிக்கும்போது செந்நிறமுடையதாதலின் செஞ்சுடர் என்றார்.
 
     உலகெலாம் - திருவருள் வெளிப்பட்ட இடமாதலின் இம் முதன்மொழி யாகிய
அருள்மொழியாகிய மணியினை இங்குப் பதித்தருளினர் ஆசிரியர்.
 
     பாங்கு நின்றவர் - அருகில் - அருகில்; பாங்கு - பான்மை என்று கொண்டு
மீன்படுத்துக் கொணரும் (பாங்கில்) பண்பியலையுடையார் என்றலுமாம்.
 
     மீனொன்று படுத்தனம் - இஃது பரிசனத்தவர் தம் தலைவராகிய
அதிபத்தருக்குரைத்தது.
 
     எடுத்து - அம்மீனை வலையினின்றும் வேறு எடுத்து; மீன் என்றது முன்
பாட்டினின்றும் எடுக்கப்பட்டது.
 
     திரையில் வந்தேற - என்பதும் பாடம்.                           16