(வி-ரை) துலையிற் புறவின் நிறை அளித்த சோழர் - இது சிபிச்சக்கரவர்த்தியின் சரிதம் குறித்தது. சிபிச்சக்கரவர்த்தி ஒருகாலத்தில் சீகாழியில் அரியதொருயாகம் செய்திருந்தபோது அவரது பெருமையை உலகுக்கு அறிவிக்கத் திருவுளங்கொண்டு இறைவர் பணித்தருளியவாறு, தீக்கடவுள் ஒரு புறாகவும், இந்திரன் அதனைத் துரத்திவரும் பருந்தாகவும் உருவெடுத்துப் போந்து, புறா அவர்பால் அடைக்கலம் புக்கது; பருந்து தனக்கு இரை யென்று அதனைக் தன்னிடம் விடும்படி கேட்டது; சிபி அப்புறாவின் எடைக்கு ஈடாகத் தமது உடலின் தசையினை அரிந்து துலையிலிட்டனர். அது எடை குறையத் தாமே துலை எறி நிறைவு செய்து திருவருள் பெற்றனர் என்பது அச்சரித வரலாறு. |
அடைக்கலம் புகுந்தாரைக் காக்கத் தன்னுயிரினையும் தரும் அறம்பற்றிச் சோழர் மரபின் பெருமை விளங்க நாட்டுச் சிறப்புக் கூறினார். ஈண்டு இப்புராணத்தினுள் அதனினும் மிக்கதாய்ச் சிவதருமங் காத்தற்பொருட்டு யானையினை ஒறுத்தல் காரணமாகத் தன்னுயிரினையும் தரும் கோச்செங்கட் சோழர் பெருமைக் குறிப்புப் படுதற்கு. “இவர் குலத்தோன் மேற்பறவை, மன்னுயிர்க்குத் தன்னுயிரை மாறாக வழங்கினனால்” (இராமா - குலமுறை - பட் 7) என்று, பிறரும் இப்பெருமையை எடுத்துக் கூறுதல் காண்க. சங்க நூல்களிலும் மற்றும் பல பெருநூல்களிலும் சிறப்பாக இச்சரிதம் போற்றப் பட்டுள்ளது. |
நிறை - எடை சமமாகத் தமது தசையின் அளவு; துலை - தராசு; அலையில் தரளம் அகிலொடு சந்து அணி - அலைகளினால் முத்து அகில் சந்து இவற்றை வாரிவரும் அமைதியாகிய வெள்ளம். |
மணிகொழிக்கும் குலை - தரளம் அகில் சந்து இவற்றைக்கொண்டுவரினும், மணிகளைப் பக்கங்களிற் பெருக இறைத்துச் செல்வது; குலை - கரை. |
சந்திரதீர்த்தம் - சந்திரன் தனக்குத் தக்க சாபத்தால் நேர்ந்த குறை நோயினைத் தீர்க்க இங்குத் தீர்த்தங் கண்டு வழிபட்டு நலனடைந்தான் என்பது தலவரலாறு. பெருகு - ஊற்றுமிகும். |
நிலையிற் பெருகும் - இருந்தவாறே பரவி வளரும். |
சந்திரகாந்தத்தின் - என்பதும் பாடம். 1 |
4198. | அப்பூங் கானில் வெண்ணாவ லதன்கீழ் முன்னா ளரிதேடும் மெய்ப்பூங் கழலார் வெளிப்படலு மிக்க தவத்தோர் வெள்ளானை கைப்பூம் புனலு முகந்தாட்டிக் கமழ்பூங் கொத்து மணிந்திறைஞ்சி மைப்பூங் குவளைக் களத்தாரை நாளும் வழிபட் டொழுகுமால். |
2 |
(இ-ள்) அப்பூங்....வெளிப்படலும் - அந்தப் பூங்கானிலே வெண்ணாவல் மரத்தினடியிலே, முற்காலத்தில் விட்டுணுதேடிய உண்மையுருவாகிய பூப்போன்ற திருவடியுடைய இறைவர் வெளிப்பட்டருள; மிக்க........இறைஞ்சி - மிகுந்த தவத்தினையுடைய ஒரு வெள்ளையாளை கையினாலே அழகிய நீரை முகந்து திருமஞ்சன மாட்டி மணமுடைய பூங்கொத்துக்களையும் இறைவரது திருமேனியிலணிந்து வணங்கிக், கரிய குவளைபோன்ற கழுத்தினையுடைய இறைவரை நாடோறும் வழிபட்டு ஒழுகி வந்தது. |
(வி-ரை) அப்பூங்கான் - முன்கூறிய அந்த மலர் வனம் என்று அகரம் முன்னறிசுட்டு. |
வெண்ணாவல் ;- “ஞானச் சார்வாம் வெண்ணாவல்” (4209); இத்தலத்துள் வெண்ணாவல் வனத்துத் தவம்புரிந்த சம்புமுனிவர் ஒருநாள் தாம் முன் கண்டறியாத |