பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்524

 

வேறு
 

4210. மந்திரிக டகையேவி வள்ளல்கொடை யநபாயன்
முந்தைவருங் குலமுதலோ ராயமுதற் செங்கணார்
அந்தமில்சீர்க் சோணாட்டி லகனாடு தொறுமணியார்
சந்திரசே கரனமருந் தானங்கள் பலசமைத்தார்.                      14
 
     (இ-ள்) வள்ளல்.....செங்கணார் - கொடைவள்ளலாகிய அநபாயச்
சக்கரவர்த்தியின் முந்தையோராகவரும் குலமுதல்வராகிய முதன்மை பொருந்திய
கோச்செங்கண்ணார்; மந்திரிகள் தமை ஏவி - தம் உரிய மந்திரிகளை ஏவியனுப்பி;
அந்தமில்.....அகனாடுதொறும் - சிறப்பினையுடைய சோழநாட்டில் அகன்ற பதிகள்
தோறும்; அணியார்......சமைத்தார் - சந்திரசேகராகிய இறைவர் விரும்பி
எழுந்தருளியுள்ள அழகு நிறைந்த மாடக் கோயில்கள் பலவற்றையும் அமைப்பித்தனர்.
 
     (வி-ரை) செங்கண்ணார் - மந்திரிகள் தமை ஏவி - தானங்கள் -
அமைத்தார்
என்க.
 
     மந்திரிகள் தமை ஏவி - அமைத்தார் - திருவானைக்காவில் தாம் முன்
அருள் பெற்றமை அறிந்து அங்குக் கோயிலைத் தாமே நேரில் இருந்து அமைத்தனர்.
ஏனை இடங்களில் அங்கங்கும் மந்திரிகளை ஏவி அமைத்தனர். விரைவில் பலப்பல
கோயில்களையும் எடுப்பிக்கும் ஆர்வம் குறித்தது. அணியார் - தானங்கள் என்க.
 
     வள்ளல் கொடை அனபாயன் முந்தைவரும் குலமுதலோர் - சோழ அரச
மரபில் வந்த திருத்தொண்டர்கள் வரலாறுகளில் இவ்வாறு இப்புராணம்
பாடக்காரணராகிய தமது அரசரை அத்தொடர்புபற்றிப் பாராட்டுதல் ஆசிரியர் மரபு.
மனுச் சோழரை “அநபாயன் வழிமுதல்” (98) என்றும், புகழ்ச்சோழ நாயனாரைச்
“சென்னி நீடந பாயன் றிருக்குலத்து வழிமுதலோர்” (3949) எம் கூறியவையும், பிறவும்
பார்க்க.
 
     கொடைவள்ளல் என்னாது வள்ளல் கொடை என்றது கொடையால்
மட்டுமல்லாது மற்றெல்லா வகையாலும் வள்ளற்றன்மையுடையோர் என்ற குறிப்புத்
தருதற்கு. கொடைச் சிறப்பு மட்டில் அமைவதாயின் வள்ளல் என்றலே போதியதாதல்
அறிக. வள்ளற்றன்மை ஈண்டுத் திருநீற்றுநெறி பாலித்தமையும், அதுபற்றித் திருநீற்றுச்
சோழர் என்றும் பெயர் பெற்றமையும் ஆகிய புகழ்பற்றிய குறிப்புடையது. இப்புராணம்
பாடக் காரணராயினமையும் கருதுக.
 
     முந்தைவரும் - மரபில் முன்னே வரும்; இது காலம்பற்றியது; குலமுதலோர்
என்றது முதன்மைப் பண்பு பற்றியது; ஆதலின் கூறியது கூற லன்மையுணர்க.
 
     அகனாடு - இங்கு நாடு என்றது சோழநாட்டின் கிளைச் சிறுபகுதிகளும்,
பதிகளுமாகிய உள்நாடு நகரங்களை.
 
     அணியார் - தானங்கள் - என்று கூட்டுக. அழகிய மாடக்கோயில்கள்
என்றதாம்.
 
     தானங்கள் பல - இதனைப்பற்றி “இருக்குமணிவா யெண்டோ ளீசற் கெழின்
மாட மெழுபதுசெய் துலக மாண்ட, திருக்குலத்து வளச்சோழன்” என்று பாராட்டிப்
போற்றினர் வைணவாழ்வாரும்; பல - இவை எழுபத்தெட்டு மாடக்கோயில்கள்
என்றதொரு குறிப்புமுண்டு; இங்கு ஆசிரியர் இவற்றின் தொகை குறியாது பல
என்றமைந்தது என்னை? எனின், நல்ல அறங்கள் செய்தனவற்றைக் கணக்கிட லாகாது
என்ற சைவமரபுபற்றியும், செயலால் முற்றியன இவ்வளவேயாயினும்