பக்கம் எண் :

பெரியபுராணம்565

 

     அவிநாசி எந்தை - அவிநாசியாகிய எந்தை; அவிநாசி - இறைவரது பெயர்;
முதலையும் அதனால் விழுங்கப்பட்ட மைந்தனும் நாசமாயினவாகக் காணப்படினும்,
நாசமின்றி நல்கவல்லவர் இங்கு இறைவராதலின் அவிநாசி என்ற இவ்வாற்றாற்
கூறினார். “புக்கொளியூ ரவிநாசியே!” என்பது பதிகம்.
 

     “மைந்தன்.....பணிவேன்” என்றார் - இது நம்பிகள் தமது திருவுள்ளத்திற்
செய்து கொண்ட அருட்சங்கற்பம்.
 
     நான் - யான் - முன்னையது மறையவனும் மனைவியும் தம்மை எண்ணிய
நிலை; பின்னையது தாம் இறைவரருளை எண்ணிய நிலை; ஆதலிற் கூறியதுகூற
லன்மையுணர்க.                                             9
 
4238.     இவ்வா றருளிச் செய்தருளி “யிவர்கள் புதல்வன் றனைக்கொடிய
வெவ்வாய் முதலை விழுங்குமடு வெங்கே?”
என்று வினவிக்கேட்,
டவ்வாழ் பொய்கைக் கரையிலெழுந் தருளி, யவனை யன்றுகவர்
வைவா ளெயிற்று முதலைகொடு வருதற் கெடுத்தார் திருப்பதிகம்.
   10
 
     (இ-ள்) இவ்வாறு....அருளி - முன் கூறியபடி அருளிச் செய்தருளி;
இவர்கள்...கேட்டு - இவர்களது புதல்வனைக் கொடிய கூரிய வாயினையுடைய முதலை
விழுங்கிய மடு எங்கே உள்ளது? என்று கேட்டு அறிந்து; அவ்வாழ்...எழுந்தருளி -அந்த
ஆழமுடைய பொய்கையின் கரையில் சென்றருளி; அவனை....திருப்பதிகம் -
அப்புதல்வனை அன்று முன்னாளில் விழுங்கிய கூரியவாள் போன்ற பற்களையுடைய
முதலை மீளக் கொண்டுவருதற்குத் திருப்பதிகம் எடுத்ருளினர்.
 
     (இ-ள்) இவ்வாறு......அருளி - முன் கூறியபடி திருவருட் குறிப்புடைய
திருவுள்ளங் கொண்டருளி; புதல்வன்தனை - தன் - சாரியை.
 
     இவர்கள்....வினவிக்கேட்டு - “இவர்கள்” என்றதனால் அந்த மடுவைப் பற்றிய
செய்தியினை உழையிருந்தாரை வினாவியருளினார் என்பது; அவர்களையே வினவாத
தென்னை? எனின், மகவிழந்த செய்திபற்றிய குறிப்புக்கள் எவற்றையும் அவர்களுக்கு
நினைவூட்டலாகாது என்ற உலகநிலைத் தன்மை பற்றி என்க.
 
     மடு - ஆழமான நீர்நிலை; முதலைகள் தங்குதற்குரிய இடங்கள் இவையேயாம்.
 
     வினவிக் கேட்டு - அது அறியக்கூடாத நிலையில் பொய்கை நீர்
வறண்டிருந்தமை குறிப்பு என்பர் முன் உரைகாரர். குளத்தில் நீரினையும், நீரினுள்
முதலையினையும், முதலை வயிற்றில் மதலையினையும், மதலையில் சென்ற
ஆண்டுகளையும் வருவித்தருளினர் என்ற குறிப்பும் பெற உரைத்தனர். “வறந்திடு
 பொய்கைமு னிரம்ப மற்றவ, ணுறைந்திடு முதலைவந் துதிப்ப வன்னதா, லிறந்திடு
மகன்வளர்ந்த தெய்தப் பாடலொன், றறைந்திடு சுந்தர னடிகள் போற்றுவாம்” என்னும்
கந்தபுராணப் பாடலையும் உதகரித்தனர். இதனைப் பின்பற்றித் திரு அவிநாசித்
தலபுராணத்துள்ளும் பொய்கை நீரின்றி வறண்ட நிலை முதலியவை கூறப்பட்டுள்ளன.
ஆசிரியர் இவற்றைக் கூறினாரிலர்; இவை ஆங்காங்கு வழங்கப்படும் தல ஐதீகச்
சிறப்புச் செய்திகள் போலும்! ஆயினும், மேல்வரும் பாட்டில் பதிகந் தொடங்கிப்பாடி
அதனுள் - நான்காவது “உரைப்பாருரை” என்ற திருப்பாட்டு முடியும் முன்
“திரைப்பாய் புனலின் முதலை வயிற்றுடலிற் சென்ற வாண்டுகளுந், தரைப்பால்
வளர்ந்ததென நிரம்ப” என்ற குறிப்புக்கள் மேற் கூறிய தன்மைகள் பெற நிற்பதும்
ஈண்டுக் கருதத்தக்கன. ஆளுடைய பிள்ளையார் திருமயிலையில் என்பு
பெண்ணாக்கியருளிய வரலாற்றை விரித்தருளிய நிலைகள் இங்கு ஒப்பு நோக்கி
உணர்தற்பாலன.