| அவ்...எழுந்தருளி - அத்திரு வீதியினின்றும் பொய்கைக் கரையில் சென்றருளி; வாழ் பொய்கை எனப் பிரித்து மகன் முன்னர் இறந்தானாயினும் பின்னர் வாழ்வுதரும் பண்புடைய பொய்கை என்றும், இவ்வரலாற்றினை யறிந்து உலகம் வாழ்வு பெறநிற்கும் பொய்கை என்றும் குறிப்புப்பட உரைக்க நிற்பதும் காண்க. பொய்கை - மானிடராக்காத நீர்நிலை என்பர் நச்சினார்க்கினியர். கொடு - கொண்டு; இடைக்குறை. |
கரையில் எழுந்தருளி - என்றும், முதலை அவனைக் கொடுவருதற்கு - என்றும் கூறிய நிலைகள் “யாது யாண்டொடுங்கிற்று அஃது ஆங்கு நின்று மீள உளதாகும்” என்னும் சைவசித்தாந்த உண்மையினை உள்ளடக்கி விளக்கி நிற்கின்றன. “ஒடுங்கிமலத்துளதாம்” (போதம் 1 - சூத்.) முன்பாட்டினும் “அந்த முதலை வாய்நின்றும்” என்றதும் காண்க. எலும்பைப் பெண்ணாக்கிய அற்புத்திலும் இவ்வுண்மை விளங்குதல் காண்க. |
எடுத்தார் - தொடங்கிப் பாடியருளினார். |
வருதற்கு - வரும் பொருட்டுத் திருவருளினை நோக்கி ஆணை யிட்டருளி; காரணப் பொருளில் வந்தது. திருப்பதிகம் - எடுத்தார் என்க. 10 |
| 4239. | “உரைப்பா ருரை”யென் றெடுத்ததிருப் பாட்டு முடியா முன்னுயர்ந்த வரைப்பான் மையினீ டடம்புயத்து மறலி மைந்தனுயிர்கொணர்ந்து திரைப்பாய் புனலின் முதலைவயிற் றுடலிற் சென்ற வாண்டுகளுந் தரைப்பால் வளர்ந்த தெனநிரம்ப முதலை வாயிற் றருவித்தான். 11 |
(இ-ள்) உரைப்பார்....முன் - எடுத்த அத்திருப் பதிகத்தில் “உரைப்பாருரை” என்று தொடங்கிய திருப்பாட்டு நிறை வெய்தா முன்னே; உயர்ந்த...மறலி - உயர்ந்த மலையின் தன்மைபோல நீண்ட பெரிய தோள்களையுடைய இயமன்; மைந்தனுயிர் கொணர்ந்து - மகனுடைய உயிரைக் கொண்டு வந்து; திரைப்பாய்.....நிரம்ப - அலைகளையுடைய நீரில் முதலையின் வயிற்றிலே நிலத்தில் இருந்து வளர்ந்ததுபோலக் கழிந்த (இரண்டு) ஆண்டுகளும் உடம்பில் நிரம்ப; முதலைவாயில் தருவித்தான் - முதலையின் வாயில் வரச் செய்தான். |
(வி-ரை) “உரைப்பாருரை” என்று - இது திருப்பாட்டின் தொடக்கம்; எடுத்த - தொடங்கிய; இஃது அத்திருப்பதிகத்தின் நான்காவது திருப்பாட்டு; இதன் ஈற்றடியில் “அவிநாசியே! கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே” என்று நம்பிகள் இறைவர்பால் விண்ணப்பிக்கின்றார். திருப்பாட்டு - நம்பிகளின் பாடலுக்குச் சிறப்பாய் வழங்கும் பெயர் வழக்கு; பிள்ளையார் பாடல் திருக்கடைக் காப்பு என்றும், அரசுகள் திருவாக்குத் தேவாரம் என்றும் வழங்கும்; “படியிலாநின்பாட்டில்” “வீட்டுக்கு வாயி லெனுந் தொடை” என்னும் குறிப்புக்கள் காண்க. |
முடியா முன் - முடிந்த உடனே என்று விரைவு குறித்தது; முடியுமுன் என்னாது முடியா முன்என்ற குறிப்புக் காண்க. “நாவா யசைத்த வொலியொலி மாறியதில்லை” (தேவா) என்புழிப் போலக் கொள்க. பதிகப்பாட்டுக் குறிப்புப் பார்க்க. |
உயர்ந்த வரைப் பான்மை - உயர்ச்சியுடைய மலையின் தன்மை; வரை - மலை; வரைப்பான்மை என்னின், வலிமை மட்டிலமையுமாதலின், உயர்ச்சியும் கூடக்குறிக்க, உயர்ந்த - என்றார், உயராதவரைகளும் (சிறுகுன்றுகளும்) உளவாகலான்; பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; மேல் நீள் தடம் என்பதும் காண்க. |