கோட்டத்துச் சிலம்பணிந்தான்
மாதவராயனால் விளக்கிற்குப் பொன் வழங்கப்பெற்ற
செய்தியும் அறியலாகும்1. இவையன்றி, விளக்கு, உணவு
முதலியவற்றிற்கு நிலமும் காசும் அளித்ததாக ஏனைய
கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
4. திருவீழிமிழலை
தலம்:
சோழவளநாட்டில்
காவிரித்தென்கரையில் விளங்கும் 61 ஆவது தேவாரத்தலம்.
நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை
- திருவாரூர் இருப்புப்பாதையில் பூந்தோட்டம் இரயில்
நிலையத்துக்கு மேற்கே 10 கி,மீ. தொலைவில் உள்ளது.
திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில்
இருந்து பேருந்துகளில் செல்லலாம்.
இத்தலம் காத்தியாயன
மகரிஷியின் யாகத்தில் தோன்றிய உமாதேவியாரைத்
திருமணம் செய்துகொண்டு இறைவன் என்றும் மணக்கோலத்தோடும்
இருக்கும் தலம். திருமால் சக்கரம் பெறும்
பொருட்டு, நாள்தோறும் ஆயிரம் தாமரைப் பூவைக்கொண்டு
அர்ச்சிக்க, ஒருநாள் ஒரு மலர் குறைய, அதற்காகத்
தமது தாமரைமலர் போன்ற கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்துச்
சக்கரம் பெற்றதலம். திருநாவுக்கரசு சுவாமிகளும் திருஞானசம்பந்த
சுவாமிகளும் படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கியதலம்.
இத்தலத்து வடக்குவீதியில் அப்பர் சம்பந்தர் திருமடங்கள்
தனித்தனியே இருக்கின்றன. மூவர் அருளிய தேவாரமும்,
சேந்தனார் பாடிய திருவிசைப்பாவும், அருணகிரி நாதரின்
திருப்புகழும் உள்ளன.
விமானம்:
விண்ணிழி விமானம்.
இது விஷ்ணுவால் தாபிக்கப் பெற்றது. மூலத்தானத்துக்குப்
பின் பார்வதி பரமேசுவரரது திரு உருவங்கள் உள்ளன.
இங்குக் காழிக்கோலத்தைச் சம்பந்த மூர்த்திக்கு
இறைவன் காட்டியருளினார்.
_________________________________
1-218, 219 of 1910.
|