116. பொது
பதிக வரலாறு:
கொடிமாடச் செங்குன்றூரில் சிவஞானச்
செம்மலார், அடியார்களுடன்
தங்கியிருந்தகாலத்துப் பனிக்காலம்
வந்துவிட்டது. அதனால் அடியார்கள்
நளிர்சுரத்தினால் வருந்தினார்கள்.
பிள்ளையாரிடம் விண்ணப்பம் செய்து கொண்டனர்.
‘இந்த நளிர்சுரம் வருதல் இந்நாட்டிற்கு
இயல்பாயினும் நமக்கு இந்தநோய் எய்தப்பெறா.
நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர்தீர்க்கும்
அருந்துணை‘ என்று எண்ணி "அவ்வினைக்
கிவ்வினை" என்னும் திருப்பதிகத்தைத்
தொடங்கி, ஒவ்வொரு திருப்பாடல் இறுதியிலும்
"செய்வினை தீண்டா திருநீல கண்டம்" என
ஆணைவைத்து அருளிச்செய்தார்கள். உடனே
அடியார்களுக்கு மட்டுமன்றி அந்நாட்டிலேயே சுர
நோய் தொலைந்தது.
திருநீலகண்டம்
பண் : வியாழக்குறிஞ்சி
பதிக எண்: 116
திருச்சிற்றம்பலம்
1249. அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு
மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக்
கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும்
நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம். 1
__________________________________________________
1. பொ-ரை: ‘நாம் முற்பிறவிகளிற்
செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில்
வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை
நுகர்கிறோம்‘ என்று சொல்லப் பெறுவதை நீங்கள்
அறிவீர்கள் இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை
நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம்
அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம்.
அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான
|